மீண்டும் பத்து ரூபாய்! - 1page story
மீண்டும் பத்து ரூபாய்!
அண்ணாச்சி, மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர், சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான். பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான். அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர், கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான்.
வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான். உடனே, நடந்து சென்று, கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான். பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர்.
வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான். பிள்ளைகள் ஞாபகம் வர, உள்ளே நுழைந்தான். ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு, பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான். ஐநூறு ரூபாயைக் காணவில்லை. கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது. சங்கருக்கு உள்ளூர பீதியானது. கடையில் இருந்து வெளியே வந்தவன், பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான்.
பர்ஸில் எந்த கிழிசல், ஓட்டையும் இல்லை. அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான். வழியில் சாமி... சாமி... தர்மம் என சடைமுடிக் கிழவி பிச்சை கேட்டாள். சங்கர், பர்சிலிருந்த பத்து ரூபாயை எடுத்து கிழவியின் தட்டில் போட்டான். வீட்டுக்கு வந்து, மளிகை சாமானை மனைவியிடம் கொடுத்துவிட்டு ஹாலில் அமர்ந்தான். திடீரென மனம் துணுக்குற பர்சைப் பிரித்தவன், அதிர்ந்தான். பிச்சைக்காரிக்கு போட்ட பத்துரூபாய் அப்படியே இருந்தது.
ச.அன்பரசு
கருத்துகள்
கருத்துரையிடுக