சோவியத் யூனியனை கட்டமைத்த லெனினின் வாழ்க்கை வரலாறு!
லெனின்
மருதன்
கிழக்கு பதிப்பகம்
ஸ்டாலின் நூலுக்குப் பிறகு லெனின் நூலுக்கு வந்திருக்கிறோம். இந்த நூல் லெனின், எப்படி ரஷ்யா ஜார் அரசை புரிந்துகொள்கிறார் என்பதில் இருந்து தொடங்குகிறது. பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆசிரியர் வழியாக செய்தி வருகிறது. அவரது அண்ணன் அரசர் ஜாரைக் கொல்ல முயன்று பிடிபட்டுவிட்டான். கொல்லப்போகிறார்கள் என. அந்த நாள் தொடங்கி அவரும் சகோதரி ஆன்னா, தாயார் ஆகியோர் படாதபாடுபடுகிறார்கள். லெனின், தனது அண்ணன் வழியாக கற்ற வி்ஷயங்களை அசைபோட்டுப் பார்க்கிறார். இந்த வகையில் நூல் சுவாரசியமாகவே உள்ளது.
நூலில், லெனினின் நூல் வாசிப்பு ஆர்வம், பிரசாரம், நாளிதழ் வெளியீடு - இஸ்க்ரா, பிராவ்தா, போராட்டம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெளிவாக கூறப்படுகிறது. சில இடங்களில் ஸ்டாலின் நூலில் வந்துள்ள பகுதிகளை அப்படியே எடுத்து வைத்துள்ளார்களோ என்று கூட தோன்றுகிறது. சம்பவங்கள் ஒன்றாக இருந்தாலும் அதுபற்றிய தோற்றத்தை கோணத்தை சற்றே வேறுபடுத்தி எழுதியிருக்கலாம்.
லெனின் சட்டப்படிப்பு படித்தவர். தன் வாழ்க்கை முழுவதும் அரசின் உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டவர். ஸ்விட்சர்லாந்து போன்ற நாட்டுக்கு சென்று தப்பி பிழைத்து வாழ்ந்தவர். பலரும் செய்தி வழியாக அவர கேள்விப்பட்டிருப்பார்களே ஒழிய நேரடியாக பார்த்ததில்லை என்பதால், லெனின் என அவர் தன்னை கூறினால்தான் தெரியும். அவரது இயற்பெயர் கூட லெனின் என்ற பெயர் அளவுக்கு புகழ்பெறவில்லை என்பதே ஆச்சரியம்.
லெனினின் இறப்பு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டு செஞ்சதுக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பதோடு நூல் நிறைவுபெறுகிறது. இறுதியாக காலக்கோடு உள்ளது. லெனின் பற்றிய வேறு ஆங்கில நூல்களின் பரிந்துரை இருந்தால் மேற்படி அவரைப் பற்றி அறிவதற்கு உதவியாக இருந்திருக்கும்.
கோமாளிமேடை குழு

கருத்துகள்
கருத்துரையிடுக