பசுமை அரசியல்1

பசுமை அரசியல்


காந்தியும் பசுமைக் கட்சியும்

இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்கமும்   

பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்   

பசுமை அரசியல் போராளிக்கான அகிம்சைப் பாதை

இயற்கையைக் காக்கும் பத்துக் கட்டளைகள்

அணுமின்சக்தி ஆபத்தானது பசுமை மின்சக்தியே தீர்வு

பசுமை இயக்க முன்னோடிகள்














காந்தியும் ஜெர்மன் பசுமைக்கட்சியும்

ஆங்கிலத்தில்: பெல்ரா கே கெல்லி

தமிழில்: ஜீவா

நாம் நம்மை காந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென முதலிலேயே எச்சரிக்க விரும்புகிறேன். அப்படிச் சொல்லிக்கொண்ட சிலரை நான் வன்முறையற்ற இயக்கத்தில் சந்தித்தேன். 1936 மார்ச் 28 அன்று மகாத்மா காந்தியே ‘காந்தியம்’ என்று ஒன்று இருக்கக் கூடாது என்று சொன்னார். தான் எந்த ஒரு குழுவையோ, புதிய கோட்பாட்டையோ, புதிய போதனைகளையோ விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றார். அவர் தனது சத்தியத்துடனான எண்ணற்ற பரிசோதனைகளை சொல்லவே விரும்புவதாகவும், தனது வாழ்வு அத்தகைய பரிசோதனைகளின் திரட்சியே என்றும் கூறுகிறார். அவரது சுயசரிதையில்,
‘’எனது அரசியல் தளத்திலான பரிசோதனைகள் பற்றி இந்தியாவில் மட்டுமல்ல, நாகரிக உலகில் பல பகுதிகளிலும் அறிவர். என்னைப் பொறுத்த வரை எனக்கு எவ்வித மதிப்புமில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள ‘மகாத்மா’ என்ற பட்டம் எனக்கு மதிப்பேதுமற்றது. பல வேளைகளில் அப்பட்டம் எனக்கு ஆழ்ந்த வேதனையையே தந்துள்ளது. அது என்னை ஒருபோதும் மகிழ்ச்சி கிளர்ச்சியடையச் செய்து விடவில்லை. ஆனால் நான் எனது ஆன்மிக அனுபவங்களைச் சொல்ல விரும்புகிறேன். அவை எனக்கு மட்டுமே தெரிந்தவை. அதன்மூலமே எனது அரசியல் செயல்பாடுகளுக்கான ஆற்றலை நான் பெற்றேன். அந்தப் பரிசோதனைகள் உண்மையிலேயே ஆன்மிக வழிப்பட்டதனால், அதில் நான் பெருமிதம் கொள்ள எதுவுமில்லை. அது எனது பணிவை மேலும் சிறப்பானதாக்கவே உதவும் ‘’ என்கிறார்.
மகாத்மாவின் சத்தியம் தேடிய அந்த எளிமையே, வேறுயாரும் நம்மை காந்தியர்கள் என்று அழைத்துக் கொள்வதற்கான தடையாக உள்ளது. நாம் நமது சூழல், அரசியல் பதவிகளுக்கு அப்பால் நாம் எளிமையாக வாழக் கற்றுக் கொள்வதே, சத்தியத்தின் சக்தியை நாம் தேடுவதற்கான காந்தியத்தின் முதற் பாடத்தைக் கற்பதன் முதற்படியாகும்.
அணு ஆயுதப்பேரழிவுகளும், சுற்றுச்சூழல் பேரழிவுகளும் சூழ்ந்த உலகில் வாழ்ந்து வரும் நம்மிடையே காந்தியின் தேவையை வலியுறுத்துவது எனக்கு தவிர்க்க முடியாத அவசியத் தேவையாகத் தோன்றுகிறது.
அணு ஆயுதம் பற்றிக் கூறும் ஜேம்ஸ் டபிள்யூ. டக்ளஸ் ‘’ அணு ஆயுதம் ஆன்மிகக் கொலை செய்யும் ஆற்றல் கொண்டது. நாம் அரசியல் பலத்தையும், உடல் பலத்தையும் வெல்ல முடியாது என்ற விரக்தி உள்ளவரை நாம் அதை வெல்ல முடியாது’’ என்கிறார். அதனால்தான் நான் ‘’பிரச்சனை அணு ஆயுதத்தின் வலிமையில் இல்லை. மக்களின் பயந்த மனதில்தான் உள்ளது’’ என்ற ஐன்ஸ்டீனின் வாசகத்தில் உயர்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். அணு ஆயுதம் வெடிக்கும் முன் மக்களைக் கொல்லும் ஆற்றல் கொண்டுள்ளது. அது தனது கதிர்வீச்சினால் கொல்லுகிறது. ஆஸ்திரேலியக் கடற்கரையின் மணலைத் தோண்டி, சலித்து யுரேனியம் எடுக்கும் தொடக்க நிலையிலிருந்தே கொல்லத் தொடங்கி, பசுபிக் கடலிலோ, நிவேதாவிலோ, அமெரிக்காவோ, ரஷ்யாவோ சோதனை நடத்தும் வரை ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைக் கொல்கிறது.
யுரேனியம் எடுக்கும் மணற் சுரங்கங்களில் எழும் அணுக்கதிர் துகள்களைச் சுமந்து வரும் காற்று கூட உலகின் குழந்தைகளை மெல்லக் கொன்றுள்ளது. ஒவ்வொரு முறை பிரான்ஸ், பசுபிக் கடலில் தனது அணுகுண்டை வெடித்து சோதிக்கும் போதும் அது எத்தனை மரணத்தை விதைக்கிறது? ஒவ்வொரு நிமிடமும் அணு ஆயுதங்கள் அப்பாவி மக்களைக் கொன்று கொண்டுள்ளன. ஆயிரம் ஆயிரம் கோடி டாலர்கள் நாளை நடக்குமென எதிர்பார்க்கப்படும் போர்களுக்காக செலவழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கோடிக் குழந்தைகள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில் இறந்த எண்ணிக்கையிலான மரணங்கள் ஒவ்வொரு நான்கரை மாதங்களிலும் நிகழ்ந்துகொண்டே உள்ளன. ஒவ்வொரு வினாடியும் இரண்டு குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இதுவன்றி, வாழ்வுத் தேவைகள், உணவு, மருத்துவமின்றி சாகிறவர்கள் லட்சோப லட்சம் பேர். ‘’இந்தப் புவி மீது இத்தனை அநீதி மரணங்கள் நிகழ நம்முள் ஏதோ செத்துவிட்டது என்பதே காரணம்’’ என்று ராபர்ட் அல்டரிஜ் கூறுவது எத்தனை சரியானது!
உலக சமாதான இயக்கத்தினர் அணு ஆயுதங்களை ஆன்மிகக் கொலைகாரர்கள் எனும்போது, மனவியல் நிபுணர்கள் அதை மனதை மரக்கச் செய்வன என்கின்றனர்.
அமெரிக்கா ரஷ்யா இடையே ஆயுதக்குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ள போதும், ஆயுதமற்ற எதிர்காலம் என்பது எனக்கு இன்னும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. இரு வல்லரசுகளும் நட்புடன் கைகுலுக்கிக் கொண்டது பெரும் நம்பிக்கை அறிகுறிகளே. மூன்று விழுக்காடு பறக்கும் குண்டுகளைக் குறைத்துக்கொள்ளவும், நடுத்தர பறக்கும் குண்டுகளின் ஏவுகணைகளைக் குறைக்கவும் விவாதித்து ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்கள் பறந்து தாக்கும் நுட்பங்களுக்கான அனுமதியை குறைத்து விடவில்லை. ஏற்கனவே அமெரிக்க ராணுவத்துறை பயன்படுத்திய ஆயுதங்களின் குப்பையை மறு பயன்பாட்டுக்கு உட்படுத்தவும், அவற்றை ஐரோப்பாவில் மறு பயன்பாட்டுக்கு அனுப்பவும், முடிவு செய்துள்ளது.  மற்ற ஆயுதக் குப்பைகளை நசுக்கி அழிக்கவும், கொளுத்தி எரிக்கவும் முடிவு செய்துள்ளார்கள். பலர் தன்னைக் கைதட்டிப் பாராட்டிய போதும், அவர்கள் ஒரு அணு ஆயுதத்தைக் கூட ஒழிக்க முன்வரவில்லை என்பதை அறியாதவர்கள் என்று, தான் கருதியதாக ஓஹியோ ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜான் க்ளென் கூறியது எத்தனை உண்மையானது என்று கருதினேன். பாதுகாப்புத் துறைச் செயலர் ப்ராங்க் கார்லூசி, ‘’ அழிக்கப்பட வேண்டிய பறக்கும் குண்டுகளை எமது நலனுக்காக அழிக்காமல் பாதுகாத்து வைத்துள்ளோம் ‘’ என்கிறார்.
1987 ல் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தான போது நாம் பெரிதும் நிம்மதி கொண்டோம். எனினும் நானும், நம்மில் பலரும் அவநம்பிக்கையுடனேயே இருந்தோம். வேறு புதிய அணுஆயுதங்கள் நேடோவின் அமைச்சர்கள் மனதில் இருக்கக் கூடுமோ என அஞ்சுகிறோம். கடல்வழி கப்பல் பறக்கும் ஆயுதங்கள் 1990 வரை முன்னூற்று எண்பது புதிய நீர்மூழ்கி பறக்கும் ஆயுதரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வான் வழி பறக்கும் ஆயுதங்களைக் காண  திட்டமும் உள்ளதாம். நேட்டோ ஏற்கனவே நியூட்ரான் ஆயுதங்களை ஐரோப்பாவில் நிறுத்த, ஐரோப்பிய நாடாளுமன்றங்களின் ஒப்புதலின்றியே திட்டமிட்டுள்ளது. இது போன்று மேலும் நானூறு புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும் திட்டமும் உள்ளது. இவை ஐரோப்பாவில் நிறுத்தப்படுவது சோவியத் யூனியனைக் குறிவைத்தே. இவை ஒப்பந்த எல்லைக்குள் வரவில்லை. சோவியத்தும் இவ்விதம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத பல புதிய ஆயுதங்களை பயன்படுத்தக் கூடும். நீர்வழித்தாக்குதலுக்காக நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படக்கூடும்.  பிரான்சும், பிரிட்டனும் புதிய, புதிய ஆயுதங்களைச் செய்து குவிப்பது குறித்து திட்டமிட்டுக் கொண்டுள்ளன. உலகின் கடலும், மண்ணும் ஆயுதங்களால் நிறைக்கப்படுகின்றன. இது இயற்கை சுற்றுச்சூழல் நெருக்கடிகளுக்கும் வித்திடும். நாம் வாழும் காலம் எப்படி உள்ளது? ஆல்டோ லியோபோல்ட் கூறுகிறார் ‘’நாம் வாழும் மண்ணை நமக்கு சொந்தமான நுகர்பொருள் என நினைக்கிறோம். விருப்பம் போல் பயன்படுத்தி அழிக்கிறோம். மாறாக நாம் மண்ணுக்கு சொந்தமானவர்கள் என்று நினைக்கும் போதுதான் அதன் மீது அன்பும், மரியாதையும் உருவாகும்’’ என்கிறார்.
மனிதர்கள் இயற்கையை உரிமை கொண்டாடி சுரண்டி மகிழ்கின்றனர். நாம் என்ன செய்த போதும் நதிகள் எல்லையின்றி, காலமின்றி தூயநீரைத் தந்து கொண்டே இருக்குமென நினைக்கிறோம். இப்போது மெல்லப் புரிகிறது; இதில் உள்ளது உள்ளதுதான், வளராது; சுரக்காது; கருவூலம் காலியாகிவிடும் என்பது மெல்ல புரிகிறது. ஓசோன் படலம் கிழிவு, அமில மழை, பூமி சூடாதல், பருவநிலை மாற்றம் எனும் ஒவ்வொரு கேடும் நமது தவறான செயல்பாட்டினால் நாமே உருவாக்கிக் கொண்டதுதான் என்பது தெரியவருகிறது. இதன் விளைவுகள்தான் நம்மைக் கொல்லும் புற்றுநோய், வறண்டு வரும் ஆறுகள், காணாமல்போகும் குளங்கள், உருகி மறையும் பனிமலைகள், காலம் தவறிய மழை, வெள்ளம், சுனாமி என அனைத்து நம் கைவண்ணத்தில் உருவானவையே. டையாக்சினும், ப்ளுடோனியனும், ஈயமும், மெர்குரியும் திறந்துவிட்ட பூதங்கள், திரும்ப ஜாடியினுள் அடைக்க முடியாது. சின்ன புற்றுநோய், சின்ன அழிவு, சின்ன மரணம் என்று எதுவுமில்லை. இவையெல்லாம் பெரியனவெல்லாம் சிறந்தது என்னும் நமது ராட்சஷ விருப்பத்தின் விளைவுகளே.
பெரிய அணைகள், உயர்ந்த கட்டிடங்கள், விரிந்த சாலைகள் என எல்லாம் பெரிய பிரச்சனைகளே. அவை பெரிய அளவினில் இயற்கையைத் தாக்கி மாறுதல்களைத் தொடங்குகின்றன. மண்அரிப்பு, வெள்ளம், காற்றும் நீரும் மாசுபடுதல் என்பன தானாக வந்தவை அல்ல. மகத்தான வளர்ச்சி, பெரிய தொழிற்சாலைகள், ஆகியன வாழ்வு தரும் இயற்கையை அழித்ததால் வந்தனவே. இனி எத்தகைய வளர்ச்சி, எத்தகைய பொருளாதாரம் தேவை? வரவும், செலவும் சமமில்லாத ஊதாரி வாழ்க்கையின் விளைவு இது. தாமதம் திரும்பிச் செல்ல முடியாத அழிவாகிவிடும். சிந்திப்போம். மாறுவோம். சிறியது அழகானது. பாதுகாப்பானது. நீடித்து வாழ்வது என்று சுமக்கர் வலியுறுத்துகிறார். இயற்கை பற்றிய நமது புரிதல் வளர வேண்டும். அழிப்புகள் குறைய வேண்டும். உலக அளவு சிந்திப்போம். உள்ளூர் தேவைக்குச் செயல்படுவோம். வன்முறையற்ற புரட்சிகர மாறுதல் தேவை. சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு தயாராவோம். அடித்தளமே சீர் கெட்டுக்கிடக்கிறது. முழுமையான மாற்றம், முழுப்புரட்சி அமைதி வழியில் தேவை.
முதலில் நம்மை, நம் சிந்தனையில், செயல்பாட்டில் மாற்றம் வேண்டும். பயன்பாட்டில் சிக்கனம், பிறர் பங்கை திருடாமை, நம்மைச் சுற்றி நிகழும் கேடுகள், அழிவுகள், பேராசைகளுடன் ஊழலுடன் முற்றாக ஒத்துழையாமை அவசியம். அதுவே அகிம்சை வாழ்வின் சின்னத் தொடக்கம்.அடுத்து புதிய வாழ்வு சுரக்கத் தொடங்கும். இதுவே பெருநதியின் தொடக்கம். அழிவும் தீர்வும் நம்முன் பிறப்பனவே. சுற்றி நிகழும் கேடுகளுக்கு நாமே பொறுப்பென உணர்வோம். நம்மாலான சிறு மாற்றத்தை தொடக்குவோம். உலகை மாற்ற என்னால் முடியாது. என்னை மாற்ற முயல்வேன். அத்தனை சிந்தனைகளும் என்னை மகாத்மாவின் முன்வந்து நிற்கச் செய்கின்றன.

அண்மையில் ‘இளையோராவது எப்படி?’ எழுதிய ப்ரீடா பரிகனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவரது வரவேற்பறைச் சுவரில் காந்தியின் படத்திற்குக் கீழ் லட்சியமற்ற அரசியல், சாட்சியற்ற மகிழ்ச்சி, உழைப்பற்ற செல்வம், பண்பாடற்ற படிப்பு, நியாயமற்ற வணிகம், மனிதாபிமானமற்ற அறிவியல், தியாகமற்ற வழிபாடு என்பன மன்னிக்க முடியாத பாவங்கள் என்ற அவரது வாசகம் எழுதப்பட்டிருந்தது. நாம் கற்க வேண்டியது, கடைபிடிக்கவேண்டியது எல்லாம் இந்த ஏழு தவிர வேறோன்றும் இல்லை.
பசுமைக் கட்சி மகாத்மாவினால் உணர்வூட்டப்பட்டது. அவரது வாழ்வும், போதனையும் நமக்கு வழிகாட்டி. நாம் அரசியலில் பெரும் தவறுகள் செய்கிறோம். சுய விமர்சனமே நாம் திருந்துவதற்கான வழி. உணர்வதும், திருந்துவதுமே அடிப்படைத் தேவை. நமது உற்பத்திமுறை, நுகர்வு வாழ்க்கைக்கு ஏராளமான மூலப்பொருட்கள் தேவை. அவற்றைத் தேடி உலகம் முழுவதும் அலைகிறோம். நம் தேவைகளைக் குறைத்து, நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், உலகைச் சுரண்டுவதும், அதற்காக எழும் வன்முறைகளுக்குப் பின் நாம் உள்ளோம் என்பதும் புரியும். சுற்றுச்சூழல்  அக்கறை கொண்ட செயல்பாடுகளில் தொடங்குகிறது, சக மனிதனின் மீதான அக்கறையும், வன்முறைகளுக்கான முடிவும், உலக சமாதானத்தின் தொடக்கமும். எல்லா உயிரையும் தன்னுயிர் போல மதித்தலில் தொடங்குகிறது. இயற்கைப் பாதுகாப்பும், உலக சமாதானமும் இதன் தொடர்ச்சியே.
நமது பூமி தனது நாகரிகத்தின் சவாலைச் சந்தித்துத் கொண்டுள்ளது. இச்சூழலில் காந்தியின் அகிம்சை பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. எமர்சனும், தோரோவும் காந்தியின் முன்னோடிகளாக உள்ளனர். காந்தி தோரோவின் ‘சமூக ஒத்துழையாமை’ நூலை தனது அறவழிப் போராட்டமாக மாற்றிப் பொருத்தினார். மார்டின் லூதர் கிங் மகாத்மாவின் தாக்கத்திற்குள்ளாகித் தனது அமெரிக்க சிவில் உரிமை இயக்கத்தை 1960 ல் நடத்தினார். நான் அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தேன். வன்முறை தவிர்த்த அகிம்சை வழிப் போராட்டத்தின் வலிமையை நான் அதன் மூலம் அறிய நேர்ந்தது.
‘’நான் ஏசுவின் அறவழி, தனிநபர் வாழ்வுக்கு மட்டுமே பொருந்தும் என்று நினைத்திருந்தேன். ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு, பகைவனையும் நேசி என்பன அபூர்வ மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியம். தனிநபரோ, தேசிய இனக்குழுக்களோ, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும்போது நடைமுறைக்கு உகந்த அணுகுமுறையே பயன்படும் என நினைத்திருந்தேன். காந்தியைப் படித்தபின் எனது இந்த முடிவு மாறியது. நான் எத்தனை தவறான முடிவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. காந்தி ஒருவரே வரலாற்றில் ஏசுவின் அன்புவழிப் போதனையை அரசியல் வாழ்வில் எடுத்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர். தனிநபருடனும், வலிமை வாய்ந்த அரசுடனும் அதை விரிந்த அளவில் வலிமை கொண்டதாகப் பயன்படுத்திக் காட்டினார் ’’ என்கிறார் மார்டின் லூதர் கிங்.
அகிம்சையின் ஆன்மிகப் பயன்பாடு காந்தியால் கையில் எடுக்கப்பட்டு, வாழ்வில் பயன்படுத்தப்பட்டது. வன்முறையை விடவும், அகிம்சை எனும் அன்பு நெறியே மனித வாழ்வின் தேவைக்கு மிகவும் பொருத்தமானது என்று அவர் நம்பினார். அவரது கொள்கைகள் மனித குலத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருந்தது. அவரது அன்பின் மீதான நம்பிக்கை உணர்த்தும் வாசகம் ‘’ ஜனநாயகம் அகிம்சையால் மட்டுமே காக்கப்பட முடியும். வன்முறையில் வேர்விட்டு நிற்கும் ஜனநாயகம் தனது பலவீனமான மக்களைக் காக்க முடியாது. வலியவனைப் போலவே மெலிந்தவனுக்கும் சமமான வாய்ப்பை ஜனநாயகம் உறுதிப்படுத்த வேண்டும். இதை வன்முறை தவிர்த்த அகிம்சை முறையாலன்றி வேறெப்படியும் அடைய முடியாது ‘’

வன்முறை வலிமையின்றி ஜனநாயகத்தைக் காப்பது எப்படி? அரசு, நிர்வாகம், கட்டுப்பாடு, ஒழுங்கு ஆகியனவற்றை வன்முறை இன்றி ஒரு அரசு எப்படி காக்க முடியும்? என்ற கேள்வி பசுமைக்கட்சியின் முன்பும் எழுந்தது. காவல்துறை இல்லாமல் ஆட்சி நடத்துவது எப்படி? அரசு வன்முறையாளர்களை எப்படி சமாளிப்பது? பசுமைக் கட்சி கூட்டணி ஆட்சியில் இடம்பெறும்போது, இத்தகைய வன்முறையை எதிர்கொள்ள காவல்துறையை பயன்படுத்த நேர்வதை எப்படி எதிர்கொள்வது? இத்தகைய சூழலை பசுமைக் கட்சி மாநிலக் கூட்டணியில் இருந்தபோது சந்தித்தது. வன்முறை மறுக்கும் கொள்கை கொண்ட நாம், மக்கள் மீது வன்முறை பயன்படுத்தும் சூழல் வரும்போது, அந்த அரசில் பங்கேற்றுள்ள பசுமைக் கட்சியினர் மாற்றுவழி காண உதவ வேண்டும். எனவே நான் ஆக்கப்பூர்வமான வன்முறையற்ற பரவலான சமாதானம் நாடும் கட்சி என்பதை உணர்த்தவும், அடக்குதல் என்பதற்காக வன்முறையைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் பிற கட்சிகள் போல செயல்பட முடியாது.  பின் ஒருகாலத்தில் நாங்கள் முழுமையான அகிம்சை வழியிலான உண்மையான ஜனநாயக ஆட்சியை மக்களுக்குத் தரமுடியுமென நம்புகிறோம். அந்த எல்லையை அடைய நல்ல அனுபவமும், அளவற்ற சகிப்புத்தன்மையையும் நாங்கள் வளர்த்து கொள்வது அவசியமாகும்.
காந்தி இந்த தடுமாற்றத்திலும் எமக்கு வழிகாட்டுகிறார். ‘’ அகிம்சை நோக்கிய எமது பயணம் மிக மிக கடினமானதாகவும், மெதுவானதாகவும் உள்ளது. ஆனால் எனது அனுபவம் இதுவே. அந்த உன்னத இலக்கை அடைவதற்காக நிச்சலமான நல்லபாதை’’. ‘’அகிம்சை என்பது போதனையல்ல. வாழ்வு முறையே. ஏசுவே வரலாறு தரிசித்த மாபெரும் வன்முறை மறுப்பு போராட்டக்காரர் அவரது அகிம்சை ஒப்புமையற்றது ‘’
ஆனால் அவரைத் தவறாகப் பயன்படுத்த உதவும் ஒரு மேற்கோளும் உண்டு. ‘’மக்கள் அகிம்சையைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லையென்றால், அவர்கள் தற்பாதுகாப்பை மேற்கொள்ளலாம். அதை எதுகொண்டும் முகமூடியிட்டு மறைத்துச் செய்யக் கூடாது. நமது உண்மையைக் காட்டுவதில்  எவ்வித ரகசியமும் ஒளிவுமறைவும் கூடாது’’. ‘’ நாம் மனதளவில் உண்மையாகவே நம்புபவரானால் அதை முகமூடி போட்டு மறைக்காமல், உண்மையான வன்முறையாளர்களாக இருப்பது நல்லது.  அதை மறைப்பது போலித்தனமானது. அது ஆண்மையற்ற மலட்டுத்தனமாகும். பேடித்தனத்தைவிடவும் வன்முறை ஏற்புடையதே. வன்முறையாளன் வன்முறையைத் துறந்து அகிம்சாவாதியாக வாய்ப்புண்டு. ஆனால் போலியானவனுக்கு அத்தகைய மாற்றத்திற்கும் வாய்ப்பு எப்போதும் இல்லை’’.
‘’வலிமையற்றவர்களின் வன்முறை மறுப்பாக அன்றி வலிமை மிக்கவர்களின் கருவியாக அகிம்சை எடுக்கப்படவேண்டும். இது ஒரு கனவாகத் தோன்றலாம். ஆனால் இது நனவாக வேண்டுகிறேன்‘’.
திசை மாறிப்போன எமது தோழர்கள் அகிம்சையைக் கைவிட்டு வன்முறைத் தீர்வில் ஈடுபட்டு, தமது செயல்பாடுகளைச் சரியெனக் காட்ட, காந்தியைத் துணைக்கெடுத்தனர். அதைக் கண்ட நான்  அந்த சுதந்திரமான குழுவில் காவல்துறைக்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்டோரைச் சந்தித்து அவர்களுக்கு சரியான வழிகாட்டி, அவர்களை தவறான பாதையிலிருந்து திருப்பும் முயற்சி மேற்கொண்டேன். வன்முறை மேலும் மோசமான வன்முறையையே சந்திக்க நேருகிறது. நாகரிக சமூகத்தில் வன்முறைக்கான தேவை இருக்க முடியாது. எளிமையும், பணிவுமற்ற சமூகத்திலோ, மனிதரிடமோ அகிம்சை வாழ வாய்ப்பில்லை என்றார் காந்தி.
‘’ஆட்சியாளர்களிடம் ஒத்துழையாமை, எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக மட்டும் அகிம்சை இருக்குமானால் அதற்கு அகிம்சை என்ற பட்டம் பொருத்தமற்றது. கலகத்தை அகிம்சை மூலம் எதிர்கொள்வதற்கு ஒருவரின் மனம் முழுமையாக அன்பில் நிறைந்து அகிம்சையில் மாறாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். தவறு செய்யும் முரடனையும் கூட அரவணைக்கும் அன்பு மனம் தேவை ‘’ என்கிறார் காந்தி.
அகிம்சை வாழ்வு என்பது அன்பை உறுதியுடன் ஏற்று கடவுளிடம் தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதே. சத்தியமும் அகிம்சையும் உண்மையான கடவுள் நம்பிக்கையின்றி நடக்காது. கடவுள் என்பது உள் உறைவது, அனைத்தும் அறிந்தது. எங்கும் எவரிடத்தும் வாழ்வது, யாரையும் சாராதது, அனைத்து ஆற்றலும் செயலற்று செத்து விழாதபோதும் தனித்தியங்கும் ஆற்றல் பெற்றது.
நமது அணுயுகத்திற்கும் பொருந்தும் காந்தியின் வாசகம்
 ‘’அணுகுண்டின் காலமான இக்காலத்தில் கலப்படமற்ற அகிம்சையே வன்முறையின் அத்தனை ஏமாற்று சாகசங்களையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை பெற்றது ’’  என்கிறார் காந்தி.
காந்தி ஒரு சந்தர்ப்பத்திற்கு அல்லது தனிப்பட்ட இயக்கத்திற்கு மட்டும் பொருந்தும் சாதுரியமான அகிம்சை யுக்திகளை எப்போதும் கடைபிடிப்பவராக இல்லை. அனைத்து காலம், சூழல்களுக்கும் மாறாத அனைத்து நிலைகளுக்குமானது. மனித உறவுகளில் வன்முறையாளராக இல்லாத ஒருவர் போர் சதிகளில் மட்டும் வன்முறையை நம்புபவராக இருக்க முடியாது. நோக்கமும், வழியும் முடியும் ஒன்று போலவே இருக்க வேண்டும். நல்ல முடிவை தீயவழியில் அடையவே முடியாது.
உண்மை அகிம்சை என்பது சமூகக் கேடுகளுடன் ஒத்துழையாமை மட்டுமல்ல, அவை மூலம் வரும் அனுகூலங்களையும் ஏற்க மறுப்பதே. அகிம்சை என்பது வெறும் யுக்தியா அல்லது வாழ்வு முறையா என்பது பற்றி பசுமைக் கட்சியில் பெரும் விவாதம் நடத்தியுள்ளோம். ஒட்டுமொத்தமான கட்சி முழுவதும் அகிம்சையை வாழ்வு முறையாக ஏற்க முன்வராவிட்டால் கட்சி தனது மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழந்துவிடும்.
நான் ‘வாளை உழுகலமாக்குவோம்’ என்ற அமெரிக்க இயக்கம்  பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் காந்தி வழியில் ஒரு தொன்மையான பாரம்பரிய வாழ்வு முறையை ஏற்று வாழும் கத்தோலிக்கக் குழுவினர். பிலிப், டேனியல் ப்ரிகன், சகோதரி ஆனி மாண்ட்கோமெரி போன்றவர்கள் அதன் உறுப்பினர்கள். அநீதிக்கு எதிராக ஆயுதத் தொழிற்சாலையின் முன் ஒத்துழையாமை சத்தியாகிரகம் நடத்துவது அவர்களின் செயல்பாடு. இது ஒரு ஆயுத மறுப்பு இயக்கம் என்கிறார் சகோதரி மாண்ட்கோமெரி. சத்தியத்தின் வழி நடப்போர் வரலாற்றில் முன் எப்போதும் சந்தித்திராத சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. மனித குலத்தையே அழிக்கவும், பூமியையே இல்லாமல் செய்யும் ஆற்றலும் பெருகியுள்ளது.
‘’நாம் அன்பால் இயங்குகிறோம். சமூகத்துடன்  செயல்படுகிறோம். நாம் நம்பிக்கையுடன் வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் புனிதமானவை என்பதை நாம் மறுப்பதில்லை அனைத்துக் கொலைகளும் தவறே. உடலின் மரணத்தை விடவும், ஆன்மாவின் மரணம் கொடுமையானது ‘’ என்கிறார் சகோதரி மாண்ட்கோமெரி.
‘வாளை உழுகலமாக்குவோம்’ இயக்கத்தினர் தமது ஆயுத எதிர்ப்பை உணர்த்தும் வகையில் ஆயுதங்களை அழிக்கும் நடிப்பை நடத்திக் காட்டுவர். அதைக்கூட சிலர் ஒரு சொத்தை அழிப்பது வன்முறைதானே என்று விமர்சனம் செய்தனர். சொத்தை ஒரு போற்றத்தக்க பொருளாக கருதுவது பணவழிபாட்டுத் தனமே, நமது சமுதாயத்தின் பெரும்பாலான வன்முறைகளுக்கு இதுவே காரணமல்லவா?  சொத்தைக் காக்கும் மோகம், உடமைகள் மீது கொண்ட பாசம் என அது ஆயுதங்களையும் சொத்தாகக் கருதி காக்கச் செய்கிறது. உண்மையான சொத்து மனிதனை மேம்படுத்த வேண்டும். மனித மாண்புகளை அது கெடுக்கக் கூடாது. புனித நூல்களும், நாட்டின் சட்டமும் ஆயுதம் என்பது மானுடத்திற்கு எதிரான குற்றம் என்கின்றனவே.  எனவே அதனை எதிர்க்க நாம் வகை காண வேண்டும். எனவே ஆயுத அழிப்புப் போராட்டம் என்பது உன்னத கட்டளையை நிறைவேற்றுவதேயாகும்.  பிலிப் ப்ரிகன் அவரது மனைவி எலிசபெத்  ஆகிய இருவரும்  அகிம்சை போராட்டத்தில் பலமுறை சிறை சென்றுள்ளனர். அவர்களின் பதினைந்து ஆண்டுகால திருமண வாழ்வில் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைபட்டுள்ளனர். எனினும் ‘’நாங்கள் எங்களைப் பெரும் நாயகர்கள் என்று கருதவில்லை. அப்படியானால் தினம் தினம் போரில் சாகிறவர்கள் எல்லாம் எங்களை விட பெரிய கதாநாயகர்கள் ஆகிவிடுகிறார்கள் அல்லவா? ‘’ என்கிறார்.
பேட்ரிக் ஓநில், ப்ரிகன் சகோதரர்கள் பற்றிய தனது நூலில்
‘’ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் உயிர்த்தியாகம் செய்து வருகிறார்கள். போருக்காக ஆண்களும், பெண்களும் விருப்பத்துடன் தமது உயிரைத் தந்து வருகின்றனர். அடுத்தவர் உயிரைக் கொன்று வருகின்றனர். எனவே சமாதானத்திற்கானவர்கள், அகிம்சையை நிலைநாட்ட அந்த அளவு தியாகத்தை உயிரைக் கொடுத்து அன்பை நிலைநாட்ட வேண்டியுள்ளது ‘’ என்கிறார்.
எம்மில் பலர் பால்டிமோரில் ஜோனாஹவுஸ் குழுவின் அமைதிப்பணியால் ஈர்க்கப்பட்டுள்ளோம். அது 1973 ல் பிலிப் ப்ரிகன், எலிசபெத் மேக் அலிஸ்ட்ரால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் கொள்கைகள் அகிம்சை, சமுதாயவாழ்வு, மாற்றமுடியாததை எதிர்ப்பது, தியானம், பிரார்த்தனை, ஆராய்ச்சி ஒன்றே தவறானதை எதிர்த்து நிற்கும் மனவலிமையும் தருமெனும் நம்பிக்கை ஆகியனவே. சொத்துக்களைப் பொதுவாக்கி வாழ்தல், ஒரே வங்கிக் கணக்கு, கூட்டு சமூகப் போக்குவரத்து, தனிநபர் காப்பீடு மறுத்தல், ஏழைகளுக்கான நீதிக்குப் போராடல், பூமிக்கான நியாயத்தை நிலைநாட்டல் ஆகியனவும் அவர்களின் கொள்கைகள்.
இன்று உலகம் முழுவதும் காந்தியின் லட்சியத்துடன் வாழும் ஏராளமான குழுக்கள் உள்ளன. சீசர் சாவேசின் ‘மரங்களைத் தழுவுவோம்’ இயக்கம் இமயமலைச் சாரலில் நடந்த கண்மூடித்தனமான மரம் வெட்டுதலை எதிர்த்து தடுத்து நிறுத்தியது.
காந்தி ஏசுவால் பெரிதும் உணர்வு பெற்றார். ஏசுவின் மலைப்பிரசங்கம், தோரோவின் சமூக ஒத்துழையாமை நூல், ரஸ்கின், டால்ஸ்டாய், போன்றோர் காந்திக்கு உணர்வூட்டினர். காந்தி இவர்களின் கருத்துக்களைச் செயல்பாடாக்கி சமூக, அரசியல் தளங்களில் பயன்படுத்தினார் என்பதுதான் அவரது சிறப்பு. காந்தி சமூக ஒத்துழையாமையை ஒரு நாட்டின் போராட்ட வடிவமாக்கி உண்ணாவிரதத்தை, முன் வேறு யாரையும் விட போராட்ட ஆயுதமாக்கிக் காட்டியவர் என்ற தனித்துவம் பெறுகிறார். காந்தி அவற்றின் அரசியல் பயன்பாட்டின் உச்சத்தைத் தொட்டுக் காட்டியவர். எதிரியின் உடல் மீதோ, மனதின் மீதோ எவ்விதக் காயம் ஏற்படுத்தாத போர் அது. உடல் சிதைப்பு முற்றாக மறுக்கப்பட்டது. ரகசியச் செயல்பாடு வெறுக்கத்தக்கதானது. எதிரிக்குத் தனது எதிர்ப்பையும் போராட்டவழியை அறிவித்து விட்டே போராட்டம் தொடங்குகிறது. அதனால் வரும் துயரை விருப்பத்துடன் ஏற்பது. இது எதிரியின் மனசாட்சியைப் பேசத் தூண்டும். அவனது மனதை மாற்றும். அவனைப் புதிய மனிதனாக்கும்.
‘’பெருந்திரளான மக்கள் கூட்டம் மாபெரும் நன்மைகளைச் சாதித்துவிடும் என்பதை நான் நம்பவில்லை மகத்தான நல்லமனம் என்பதே உண்மையானது, கௌரவமானது, உன்னதமான மானுட தர்மம் என்பேன்‘’ என்கிறார் காந்தி.
தனது அரசியல் போராட்டம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று காந்தி நினைக்கவில்லை. இந்திய சமூகத்தின் மனதை மாற்றுவதே அவரது வாழ்வின் பணியாக இருந்தது. நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன், அவர் தனது பெரும்திரளான தொண்டர்களை சமூக நிர்மாணப் பணிகளுக்காக அனுப்பினார். இந்து முஸ்லீம் பகைமை போக்கி நட்பு வளர்ப்பது, தீண்டத்தகாதோர் என ஒதுக்கப்பட்டோரை மையப்படுத்துவது, சமூகத்தின் பிற்போக்கான மூடத்தனங்களை ஒழிப்பது, குழந்தைத் திருமணம், சமுதாயத்தின் தூய்மை வளர்ப்பது ஆகிய பணிகளை அவர்கள் சிரமேற்கொண்டு செய்தனர். கிராமங்களை மேம்படுத்தவும், விவசாயத்தைப் போற்றி மதிக்கவும், கிராம கைத்தொழில்களை வளர்த்தவும் அவர் முழு கவனம் செலுத்தினார். ஒரு நல்ல ஆரோக்கியமான புனிதமான சமூகத்தை நகரத்தில் உருவாக்க முடியாது என்று ஆழமாக நம்பினார்.
இயந்திரத் தொழில் வளர்ச்சி மனிதர்கள் உழைப்பையும் வாழ்வையும் களவாடிப் பறித்து இயந்திரத்திடம் சமர்ப்பித்து விடுகிறது. மனிதனின் மனிதத்தன்மையைப் பிடுங்கி, மேலுமொரு இயந்திரமாக்கி விடுகிறது. தனிநபரின் சுதந்திரத்தைப் பறித்துக் கட்டுப்படுத்தும் எந்த அரசையும், அது கம்யூனிசமோ, சோசலிசமோ, முதலாளித்துவமோ அவற்றையும் எதிர்த்தார். இந்தியா தனது கிராமங்களுக்குப் புத்துயிரூட்டுவதன் மூலமே தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள முடியும் என்றார் காந்தி. இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் நாலுபேர் கிராமத்தில் வாழ்பவர்களே. கிராமங்களிலேயே இந்தியா வாழ்கிறது. கிராமங்கள் தன்னாட்சி உரிமை பெற்ற தனியரசுகளாக இயங்க உரிமை தரவேண்டுமென்றார். தற்சார்பு கொண்ட கிராமமே அவரது லட்சியம். அதிகார மையத்தின் மாபெரும் எதிரியான காந்தியின் மையப்படுத்தலற்ற பரவல் சமூக வாழ்வுமுறையைப் போற்றிய இ.எப் சுமக்கர் காந்தியை ‘உலகின் அதிமுக்கிய பொருளாதார குரு’ என்கிறார்.
பசுமைக்கட்சி இத்தகைய சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அரசியல் திட்டங்களைத் தனது செயல்திட்டமாக ஏற்றுக்கொண்டது. தொழில்மயமான மேலைநாடுகளில் இவற்றைச் செயல்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. காந்தி, தோரோ, மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் எங்கள் லட்சியங்களின் ஊற்றுக்கண்ணாக அமைந்தனர். நம்பிக்கையின்மையும், மோதலும், ராணுவக்குவிப்பும் மிகுந்த உலகில் இந்தக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவது எளிதல்ல. ஆனால் எம்மைச் சுற்றி ஏராளமான சிறு சிறு குழுக்கள் இந்த புனித தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, அதன் வழியில் வாழ்ந்து கொண்டுள்ளனர் என்பது நமக்கு நம்பிக்கையும், புத்துணர்வையும் ஊட்டுவதாகிறது.
    சீசர் சாவேஸ் உருவாக்கிய United Farmworkers of America, சுமக்கரின் Intermediate Technology Development, லங்கா டெல் வாஸ்லோவின் Community of arc, வியட்நாமின் ஐக்கிய பௌத்த தேவாலயம், ரோசா பார்க், டோரதிடே, ஆர்ச் பிஷப்ஹெல்டர் கமாரா, நோபல் பரிசாளர் அடால்ப் ப்ரீஜ் இஸ்க்யூவெல் போன்றோர் காந்தி, மார்டின் லூதர் கிங் அடிச்சுவட்டில் வெற்றிகரமாக நடைபோடுகின்றனர்.
    காந்திய அகிம்சைவழி கொண்டு, வன்முறையற்ற வழியில் சமூகப் பாதுகாப்பு, அண்டை நாடுகளின் படையெடுப்பு, தாக்குதல் ஆகியவற்றையும் எதிர்கொள்ள முடியுமா என்பது பற்றிய ஆராய்ச்சியில் பசுமைக்கட்சி ஈடுபட்டுள்ளது. நியூசிலாந்து முற்றிலும் அணுஆயுதம் மறுத்து, அமைதிக் கப்பற்படை கொண்டதுடன், தனது துறைமுகங்களில் அணு ஆயுதக்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களை அனுமதிக்கவும் மறுத்துள்ளது. போலாந்தின் லீச் வலேசாவின் சாலிடரிட்டி இயக்கம் அகிம்சை வழியில் வெற்றி பெற்றுள்ளது. நார்வேயின் பழங்குடி மக்கள் தமது வாழ்விடத்தை மூழ்கடிக்கும் பெரிய அணையை கட்டவிடாமல் தமது அமைதிப் போராட்டத்தால் தடுத்துள்ளனர். அமெரிக்காவின் பழங்குடி இந்தியர் அமெரிக்க அரசு சட்டவிரோதமாக தமது பூர்வீக இடத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து பிளாக் ஹில் பகுதியில் போராடி வெற்றி பெற்றுள்ளனர். ஜெருசலம் அமைதி மையம் யூதர், அரபு மக்களிடையே சமாதானம் வளர்க்க அகிம்சை வழியைக் கடைபிடிக்கின்றனர். அகிம்சை வலை விரிகிறது. மேலும் மேலும் மக்கள் அகிம்சையின் செய்தியால் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.
    மனிதர்களில் எவரும் நூற்றுக்கு நூறு குற்றமற்றவர்களில்லை. காந்தி முழுமைப் புரட்சியை முயற்சித்தார். சத்தியத்தின் துணையுடன் தன்னை ஒவ்வொரு துறையிலும் பரிசோதித்துக் கொண்டார். அவருடைய கடுமையான முயற்சிகளைப் புரிந்து கொள்வது அவசியம். அது நம்மை குழம்பச் செய்யலாம்.
    காந்தியின் மரணத்தின் முன்தினம் இரவு நிகழ்ந்ததை நான் நினைவு கொள்கிறேன். அன்றிரவு தனது பேத்தியிடம் ‘’நான் நோயில் வீழ்ந்து அவதிப்பட்டு மரணமடைந்தால் நான் ஒரு போலி மகாத்மாவே’’ என்றார்.
‘’ சென்ற வாரம் நடந்தது போல் ஒரு வெடிகுண்டினாலோ, யாரோ ஒருவராலோ சுடப்பட்டு என் மார்பில் குண்டை ஏற்று வேதனையில் புலம்பாமல், ராம நாமத்தை என் உதடு உச்சரித்தபடி நான் மரணிப்பேனானால், அப்போது நீ துணிவுடன் என்னை உண்மை மகாத்மா எனலாம் ‘’ என்றார்.
    மறுநாள் ஜனவரி முப்பது 1948 காலை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ஒரு இந்துவால் சுடப்பட்டு  ராம நாமத்தை உச்சரித்தபடி இறந்தார். அப்போது அவரிடம் வெறுப்பில்லை. கோபமில்லை. அச்சமில்லை. தான் எதை போதித்தாரோ, அதேவகையில் மகாத்மா மரணத்தைத் தழுவினார்.













கருத்துகள்