முட்டையின் சுவை மாறுபட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம்! - மிஸ்டர் ரோனி பதில்கள்
cc மிஸ்டர் ரோனி கால்பந்து போட்டிகளை நாம் பார்வையாளர்களின் கூச்சல் இன்றி பார்ப்பது ஏன் வினோதமாக தோன்றுகிறது ? விளையாட்டு மைதானத்தில் நேரடியாக பார்க்க எதற்கு செல்கிறார்கள் . அந்த நேரத்தில் குழுவாக மக்கள் எழுப்பும் பரவசமான கூச்சல் , சந்தோஷம் , கோபம் என உணர்ச்சிகளின் பீறிடலுக்காகத்தான் . அந்த தன்மை டிவியில் பார்க்கும்போது கிடைக்காது . அதேசமயம் பார்வையாளர்களே இல்லாத மைதானத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு அந்த சூழ்நிலையை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கும் . இனிமேல் நேரடி போட்டியை ஒளிபரப்பினாலும் கூட அதில் செயற்கையான ஒலியை உருவாக்கி பார்வையாளர்களை டிவி சேனல்கள் பார்க்க வைப்பார்கள் . ஆனால் அது நிச்சயம் பொருந்தாத ஒன்று . ஆனால் இன்றைய பெருந்தொற்று சூழலில் நமக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது ? உயிரைக் காத்துக்கொள்வதே முக்கியம் . அதற்குப்பிறகுதான் மற்றவை . பொதுமுடக்க காலத்தில் பலரும் தினசரி நடக்கும் பத்தாயிரம் அடிகள் என்பது ஏழாயிரமாக மாறியுள்ளது . இது ஆரோக்கியத்திற்கு கெடுதலா ? தினசரி பத்தாயிரம் அடிகள் நடக்கவேண்டும் என்பது ஒன்றும் மந்திரச்சொல் அல்ல .