சைலண்ட் தீபாவளி!
அமைதியான தீபாவளி! உலகெங்கும் தசரா, தீபாவளி பண்டிகைகளில் பட்டாசுகளை விண்ணதிர வெடிப்பது சாதாரணம். வெளிநாட்டு பறவைகளின் இனப்பெருக்கத்திற்காக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புனரி, கொல்லுகுடிப்பட்டி மக்கள் பல ஆண்டுகளாக சைலண்ட் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இவ்விரு கிராமங்களுக்கும் சைபீரியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் கருப்புத்தலை இபிஸ் பறவை, ஸ்ட்ரோக்ஸ், கார்மொரண்ட், எக்ரெட் உள்ளிட்ட பறவைகளை வரவேற்கும் விதமாக மக்கள் பட்டாசுக்களை வெடிப்பதில்லை. நீர்நிலைகளுக்கு பண்டிகை காலங்களில் வரும் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்து மார்ச் மாதத்தில் குஞ்சுகளோடு குடும்பமாக பறந்துசெல்வது வழக்கம். “பறவைகளின் இனப்பெருக்க காலத்தை இடைஞ்சல் செய்யக்கூடாது என்று நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பட்டாசு வெடிக்க விரும்பும் சிறுவர்கள் பறவைகளின் ஏரியாக்களை கடந்து இரண்டு கி.மீ தள்ளிச் சென்று பட்டாசுக்களை வெடிக்கிறார்கள்.” என்கிறார் பறவையியல் வல்லுநரான எஸ்.பால்பாண்டி.