உள்ளிருக்கும் பேரொளி

உள்ளிருக்கும் பேரொளி

                        -சேதனா திவ்யா வாசுதேவ்


                        தமிழில்: ஏஆர்ஏ

                   பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு ஒன்று அடித்தட்டு மக்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து கல்லூரி வரை படிக்கவைக்க கட்டணம் செலுத்தி உதவிவருகிறது.

                        அடித்தட்டு வாழ்நிலை கொண்ட குழந்தைகளின் உள்ளே இருக்கும் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு தரும்  பெங்களூரில் உள்ள ‘பரிக்ரமா’ மனிதநேய அமைப்பிற்கு இது பதிமூன்றாவது ஆண்டாகும். தொடர்ந்து நம்பிக்கையோடு செயல்பட்டு வரும் இவ்வமைப்பு ஓவியங்கள் தொடர்பான (அனைத்தும் இவ்வமைப்பின் பள்ளிக்குழந்தைகள் வரைந்தது) கண்காட்சி ஒன்றினை சில நாட்களுக்கு முன் நடத்தியது. அமைப்பின் செயல்பாட்டிற்கு கிடைத்த நல்ல முன்னேற்ற நிலையாக இதனைக்கொள்ளலாம் என்கிறார் அமைப்பின் நிறுவனர் சுக்லா போஸ்.

                        பெங்களூரில் நான்கு பள்ளிகள் எளிமையாக தொடங்கப்பட்டு அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகள் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள், அனாதை இல்லங்கள், குற்றவாளிகளின் குழந்தைகள் ஆகியோர் கல்வி கற்று வருகின்றனர். ‘’ முதலில் சமையல் மேஜைதான அலுவலகமாகவும், கோரமங்கலாவிலுள்ள குழந்தைகள்தான் என் முதல் மாணவர்களாக அமைந்தார்கள் ‘’ என்று பழைய நினைவுகளின் பூரிப்பில் முகம் மலர்கிறார் சுக்லா.
                        2000 ஆம் ஆண்டில் எம்பிஏ படித்து பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுக்லாவிற்கு தன் மனதில் ஏதோ போதாமையை, அர்த்தமின்மையை உணர்ந்திருக்கிறார். ‘’ பன்னாட்டு நிறுவனங்களின் வேலை என்பது பயனில்லாத ஒன்று என்று கூறமுடியாவிட்டாலும் சில சமயங்களில் அர்த்தமின்மையை தோற்றுவிக்கிறது ‘’ என்கிறார் சுக்லா.

                        2003 ஆம் ஆண்டு லாபநோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமாக அமைப்பை தொடங்கியபோது, முன் செய்த வேலையில் கற்ற பயன்படும் விஷயங்களையும், டார்ஜிலிங்கில் பள்ளிச்சிறுமியாக ஏழுஆண்டுகள் மதர்தெரஸா அறக்கட்டளையில் பணிபுரிந்த விஷயங்கள் அவருக்கு பயன்பட்டிருக்கின்றன.

                        பரிக்ரமா அமைப்பு பல்வேறு ஆழமான சிந்தனைகளின் வாயிலாக குழந்தைகளுக்கான வகுப்பறையினை கற்கும் சூழல் கொண்ட உத்வேகம் பெருகும் இடமாகவும், சுவாரசியமான ஆர்வம் கொண்டு இயங்குமாறும் மாற்ற சிந்திக்க வைத்தது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் பின்பற்றப்படும் பள்ளியான இவர்கள் நிர்வாகம் செய்யும் பள்ளியில் கல்வி என்பதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட எல்லை எதுவும் கிடையாது.
                        ஜெய நகர் பள்ளி வளாகத்திற்குள் யாரும் சிறுவர்கள் தம் கைப்படத்தீட்டிய பளிச்செனும், வண்ணம் கொண்ட அலங்காரம் செய்யப்பட்ட சுவர்களை கண்டால் ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்கமுடியாது.
                        ‘’ இறுதியாக இந்தியா தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியது என்றாலும், பள்ளியில் நிகழ்ந்தது என்னவென்றால் ஏமாற்றம்தான். தேர்வுகளில் அல்லது போட்டித்தேர்வுகளிலோ அதிக மதிப்பெண் எடுப்பது என்பது போதுமானதாக, சரியான தன்மையாக நான் கருதவில்லை. மதிப்பெண் குழந்தைகளுக்கு முக்கியம் என்றாலும் அவர்கள் மனிதர்கள் அல்லவா, அவர்களிடம் இயல்பாக திறன்களை மலர வைக்கவேண்டும் கல்வி’’ என்று விரிவாக தங்கள் பள்ளிக்கல்வி குறித்து உரையாடுகிறார் சுக்லா.

                        பரிக்ரமா பள்ளிகளில் விளையாட்டு மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஊக்குவிக்கப்படுவதோடு, முதலாம் வகுப்பிலிருந்தே கணினியின் அடிப்படை பயிற்சிகள் கற்பிக்கப்படத் தொடங்கிவிடுகின்றன.

‘’ அடித்தட்டு மக்களின் குழந்தைகள் பற்றிய பிம்பங்கள் பள்ளியில் அதிகமாக இடைநிற்பவர்கள், அதிகமாக பள்ளிக்கு விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரிக்கு செல்லாதவர்கள் என்பதாகவே அதிகம் இருக்கிறது ’’ என்று தீவீரமாக பேசுகிறார் சுக்லா.  
             
                   பரிக்ரமா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 98% விழுக்காடு பள்ளிக்கல்வியை முடிப்பதோடு பல்கலைக்கழக கல்வியைக் கற்கச் செல்கிறார்கள் என்பதோடு வருகைப்பதிவு 96% விழுக்காடாகவும், இடைநிற்றல் 1% விழுக்காடாகவும் உள்ளது. ‘’மத்திய அரசின் மனிதவளத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்ற கேள்வியைத்தான் இவை எழுப்புகிறன்றன ‘’ என்கிறார் சுக்லா.
                        பரிக்ரமாவில் கலைகளின் மீதான ஊக்குவிப்பு என்பது அதனைக் கற்பது என்பதைத் தாண்டிய ஒன்றாக கருதி பேணி வளர்க்கப்படுகிறது. ‘’பல்வேறு கீழ் நிலையிலுள்ள சூழல் கொண்ட இடங்களிலிருந்து மாணவர்கள் வருவதால் அவர்களின் மோசமான குணங்களை நீக்க கலை பேதிமருந்து போல செயல்படுத்தப்படுகிறது. எங்கள் பள்ளிகளில் உள்ள மனநல ஆலோசகர்கள் தொடர்ந்து மாணவர்கள் தங்கள் மன உணர்வுகளை கலையின் வழியே வெளியே கொண்டு வர உதவுகிறார்கள் ’’ என்று கலையின் ஊக்குவிப்பு காரணங்களைப் பட்டியலிடுகிறார் சுக்லா.

                        ‘’இவர்கள் அனைவருமே எங்கள் பிள்ளைகள்தான். பள்ளியில் பிரிகேஜி யிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை எங்களோடு பயணிக்கிறார்கள். பள்ளிக்குப் பிறகு நீங்கள் அவர்களிடம் இவ்வளவு நாட்கள் நாங்கள் உன்னைப் பார்த்துக்கொண்டோம், இன்று நீ வளர்ந்துவிட்டாய்; உன்னை நீ கவனித்துக்கொள்ள முடியுமல்லவா? என்று இந்தியாவில் கேட்பது எவ்வளவு சரியானது? அதற்கு காலம் வரவில்லை’’ என்ற சுக்லாவிடம் அவர்களது மாணவர்கள் குறித்து கேட்டதும் பெருமையாக ‘’எங்களது பழைய மாணவர் சிஸ்கோவில் மென்பொருள் பொறியியலாளராகவும், மற்றொருவர் ஹில்டன் இன்டர்நேஷனலில் தலைமை சமையற்கலைஞராகவும் இருக்கிறார்கள்’’ கூறுகிறார். பரிக்ரமாவின் பணி பள்ளி முடித்தவர்களுக்கு கல்லூரிப்படிப்பிற்கான கட்டணத்தைச் செலுத்தி அவர்களை ஊக்குவிப்பது என்று தொடர்ந்து நீண்டு பயணிக்கிறது.

                        நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (28.10.2014)



கருத்துகள்