அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!

அறநெறி சார்ந்த கல்வியின் தேவை….!!!


                                                          இரா.முருகானந்தம்


            கல்வியளிக்கும் ஆசிரியர்கள் அறம் சார்ந்த பணியாக ஆசிரியர் பணியைக் கருதியும், கல்வி என்பது மதிப்பீடுகள் சார்ந்த வாழ்க்கை முறைக்காகப் பெறும் அறிவு என்கிற மாணவர்களின் எண்ணமும், கல்வியை ஒரு சமூக அறமாக கருத வைத்தன. நான் எனது தோழியுடன் காலச்சுவடு இதழின் நேர்காணல் ஒன்றிற்காக சுதந்திரப்போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியுமான கோபிசெட்டிபாளையம் ஜி.எஸ் லட்சுமண அய்யரை சந்தித்தபோது, தனக்கு ஆசிரியராக இருந்த கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி ஆசிரியரான தமிழறிஞர் பெரியசாமி தூரன் குறித்து மிகவும் மனம் நெகிழ்ந்து பேசினார்.

பிறகு பெரியசாமித்தூரன் அவர்களின் பணிகளைக் குறித்து நான் விரிவாக அறிந்தபோது அக்கருத்தின் பொருத்தப்பாடு குறித்து வியந்துபோனேன். தூரன் ஒரு தமிழ் பேரறிஞர் என்பது ஒரு புறம் இருக்க அவர் சிறந்த குழந்தை இலக்கியவாதியாகவும் இருந்திருக்கிறார். ‘’ அம்மா இங்கே வா வா !’’ எனும் நாம் நன்கறிந்த குழந்தைப்பாடல் அவர் இயற்றியதே. கடந்த ஆண்டுகள் முன்பு ‘குழந்தை உள்ளம்’, ‘குழந்தை மனமும் அதன் வளர்ச்சியும்’ ஆ    கிய குழந்தைகள் உளவியல் நூல்களையும் எழுதியுள்ளார். இன்று நமது ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை. இதை நான் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் நமது தாய்மொழிக்கல்வியை புறந்தள்ளியதன் விளைவே இவை என்பதைச் சுட்டிக்காட்டவே. இது சற்று அபத்தமாகக் கூட தோன்றலாம். ஆனால் இது உண்மையே.

பெரிதும் மொழிப்பாடங்களைப் போதிக்கிற, அதுவும் தாய்மொழியைப்போதிக்கும் ஆசிரியர்களே மாணவர்களுக்கு அறநெறிகளையும், விழுமியங்களையும் போதிக்கும் வாய்ப்பை பெற்றவர்கள். அவர்களால் மாணவர்களின் மனதுடன் நெருக்கமாக உறவிடமுடியும். இதனை எனது தனிப்பட்ட வாழ்வின் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன். நான் எனது மழலைக்கல்வியை ஆங்கிலப்பள்ளியின் வழியில் கற்றேன். கற்றேன் என்பது கூட ஒரு வார்த்தைக்காகவே. பிறகு ஆரம்பக்கல்விக்காக தமிழ்வழிப்பள்ளிக்கு மாறியபோதுதான் நான் உண்மையில் கற்க ஆரம்பித்தேன்.

அடிப்படையில் சோம்பேறியாகவும், உள்ளொடுங்கி யாருடனும் இயல்பாக பேசிப்பழகாத சுயகர்வம் மிகுதியும் பீடித்த என்னை அர்ப்பணிப்பும், அக்கறையும் கொண்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் மெல்ல மாற்றி அறவுணர்வு குறித்த பிடிப்பும், சமூக ஆர்வமும் உடைய ஒருவனாக மாற்றினார்கள். பள்ளிக்காலம் முழுவதும் சரியாக பள்ளி செல்லாத தான்தோன்றித்தனமாகவே நான் இருந்தேன் என்றாலும் ஒருபோதும் பிறரை புண்படுத்தாத நல்லியல்புகள் பால் பற்றுள்ளவனாக என்னை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் அளித்துள்ள மதிப்பீடுகளும், அறவுணர்வுமே அடிப்படை. இந்த வாய்ப்பை பெற்ற தலைமுறையின் கடைசி வரிசையைச் சேர்ந்தவன் நான் என்று நினைக்கிறேன். நான் மேல்நிலைக்கல்விக்காக பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது,  சில ஆண்டுகள் முன்பே கணிப்பொறிப்பிரிவு அறிமுகமாயிருந்தது. எங்கள் ஊரில் ஒரே பள்ளியில் 25 பேர் அதில் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

நான் 26 ஆளாக சேர பெரும் பரிந்துரைகளும், போராட்டங்களும் தேவைப்பட்டன. நான் இயல்பாகவே வரலாறு, சமூகஅறிவியல் பாடப்பிரிவிலேயே சேர விரும்பினேன். அதெல்லாம் படித்து பிழைக்கமுடியாது என்று எண்ணம் சமூகத்தில் வலுப்பெற்ற காலம் என்பதால் வலுக்கட்டாயமாக அப்பிரிவில் சேர்க்கப்பட்டேன். ஆனால் நான் கணினி வல்லுநராகிவிடவில்லை. என்போக்கில் அருகிலிருந்த நூலகத்திலேயே தவம் கிடந்து வரலாறு, கலை, இலக்கியம் என பாடப்புத்தகத்திற்கு வெளியே நிறைய படித்து மனதின் பாதையில் பயணித்தேன். ஆயினும் கூட எனது பெற்றோர் விருப்பத்திற்கு படிக்காத நான் அவர்களுக்கு எப்போதும் பாரமாக இருக்கக்கூடாது என்று உறுதியாக செயல்பட ஆரம்பித்தேன். மனதிற்கு நேர்மையானதைச் செய்யும் துணிவையும் எனக்கு அளித்தது நான் பெற்ற அறம் சார்ந்த மதிப்பீடுகளே என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

எனக்கு தொடர்ந்து இயங்கும் ஆற்றல் தந்தவர்களில் திரு. இரா.முருகானந்தம் அவர்களின் பங்கு மிகமுக்கியமானது. என் சிந்தனைகளை, எண்ணத்தை, செயல்பாட்டினை மெருகேற்றி ஒளிர வைத்ததில் அளப்பெரும் பங்குகொண்டவர் அண்ணன் முருகானந்தம் அவர்கள். தொடர்ந்து எழுதக்கூறினாலும் தன் இயக்கம் சார்ந்து பலவற்றையும் எழுதுகிறவர், ஏனோ இசை குறித்தும், ஆளுமைகள் குறித்தும் எழுதுவதை குறைத்துக்கொண்டார் என்பதில் எனக்கு அதிக வருத்தம் உண்டு. அவர் எனக்கு இரவலாக படிக்க அளித்த புத்தகங்கள் நிறைய உண்டு. அவற்றை நான் திருப்பித்தந்து நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன். நான் சந்தித்தவர்களில் எதைபற்றியும், எந்தக்கருத்திலும் பேச வாய்ப்பினை தருகிறவர் முருகானந்தம் அண்ணன் மட்டும்தான். முன்முடிவுகள் மற்றும் எவ்வித எதிர்பார்ப்புகளின்றி பேசுவார், பழகுவார். அமராவதி நீர் தொடர்பாக பல்வேறு கடும் களப்பணிகள் செய்து வந்தவர். இன்றுவரையும் பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு என் மனச்சுணக்கத்தருணங்களை கேலி செய்பவர் இவர் ஒருவரே. விசால மனம் கொண்ட இவரின் எழுத்துக்களை இந்த வலைப்பூவில் பிரசுரிப்பது மிகுந்த மகிழ்ச்சியே.


கருத்துகள்