பேராசையைத் தூண்டி குற்றம் செய்யவைக்கும் ஏஐ ஆப்!

 








கோட் – ஜப்பான்

பிரீஸ் ஆஃப் விஷஸ் (code –japan price of wishes)

J drama

Rakutan viki

 

மினாடோ, காவல்துறையில் வேலை செய்கிறான். தான் நம்பும் விஷயத்தை வன்முறையான வழியில் நிரூபிக்க முயலும் பாத்திரம். இவனை அவனது குழு தலைவர் தாமி, நண்பன் மோமோடோ, காதலி யுகா ஆகியோர்தான் பாதுகாத்து வருகிறார்கள். யுகா, தான் கர்ப்பிணி என்ற தகவலைக் கூறும்போது மினாடோ ஆனந்தமாகி அவளை மணந்துகொள்ள முடிவெடுக்கிறான். அவர்கள் காதலித்து ஐந்து ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நாளின் இரவில் திடீரென யுகாவிற்கு தடய அறிவியல் துறையில் இருந்து  அழைப்பு வருகிறது.

 இரவு என்பதால்,, அவளை தனியாக அனுப்பாமல் மினாடோ தானும் கூடவே சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டு காத்திருக்கிறான். ஆனால் யுகா, பிணமாக திரும்ப வருகிறாள். லிஃப்ட் விபத்தில் இறந்துபோகிறவளின் வழக்கை விபத்து என காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் மினாடோ அதை நம்பவில்லை. கொலைவழக்காக நினைத்து ஆராயத் தொடங்குகிறான். இதற்கிடையில் அவனது பள்ளி நண்பன் கோட் எனும் ஆப் ஒன்றை அறிமுகப்படுத்துகிறான். அதில்  ஒருவர் நிறைவேற நினைக்கும் ஆசைகளை டைப் செய்து நிறைவேற்றிக்கொள்ள முடியும். பதிலுக்கு அந்த ஆப் சொல்லும் வேலையை ஒருவர் செய்யவேண்டும். இதனால் மினாட்டோவின் வாழ்க்கை என்னவாகிறது.அவனது காதலியைக் கொன்றவர்களை ஆப் பயன்படுத்தி கண்டுபிடித்தானா என்பதே கதை.

டிவி தொடரில் செயற்கை நுண்ணறிவைப் பற்றிய மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை விளக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். நிறைய இடங்களில் லாஜிக் பொருந்திவரவில்லை. குழப்பங்களும் உள்ளன.

கோட் என்ற ஆப்பை காவல்துறை அதிகாரி மினாடோ சோதித்துப் பார்க்கிறார். தனது காதலி யுகா இறுதியாக பேசியதை வீடியோவாக பார்க்கிறார். அந்த வீடியோ, யுகா தான் கருவுற்றிருப்பதை தனது போனில் வீடியோவாக பதிவு செய்யும்போது பேசியது. அதை எப்படி ஆப் காட்டுகிறது என்ற சந்தேகம் அவருக்கு வந்திருந்தாலே தொடர் சற்று வேகமாக முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் அப்படி யோசிக்காமல். தனது காதலி பற்றிய வழக்கு விவரங்களை கோட் ஆப்பிடமே கேட்டுப் பெறுகிறார். இதில் அவரது உயரதிகாரி மீது சந்தேகம் வருகிறது. அவரை கைது செய்ய முயல்கிறார். உண்மையில் கோட் ஆப்பின் உரிமையாளர் யார், அவரின் நோக்கம் என்ன, எதற்காக கோட் ஆப்பை பயன்படுத்துபவர் குற்றச்செயல்களை செய்ய வற்புறுத்தப்படுகிறார் என்பதையெல்லாம் அறிந்தால் தொடர் முடிந்துவிடும்.

தொடரின் இறுதியில் நாயகன் இறந்தால் பொருத்தமாக இருக்கும்  என நினைக்கும்போது, அதை இயக்குநர் நிறைவேற்றிவிடுகிறார். ஒருவகையில் அதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கதையில் அவனது உலகமாக இருந்த நண்பன், காதலி, வழிகாட்டி என அனைவருமே இறந்துவிடுகிறார்கள்.

ஜப்பான் டிவி தொடரில் வில்லன் செயற்கை நுண்ணறிவுதான். அதை நாயகன் மினாடோ தெரிந்துகொள்ளும் இடம் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தான் செய்வது என்ன, தன்னைக் காத்துக்கொள்வது எப்படி, ஒரு மனிதர் இறந்தபிறகு அவரின் நண்பர்களுக்கு எப்படிதானியங்கு முறையில் சென்று பெருகுவது என்பதை செயற்கை நுண்ணறிவு அறிந்திருக்கிறது. இறுதிக்காட்சியில் அதை உருவாக்கியவரையே சாமர்த்தியமாக சிறைக்கு அனுப்புகிறது. தனக்கு பிரச்னை தந்த நாயகனை சூழ்ச்சி செய்து கொல்கிறது. செயற்கை நுண்ணறிவு இருக்கிறது. ஆனால் அதற்கு எதிராக மனிதர்கள் இல்லை என்ற நிலையில் தொடர் முடிகிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த காட்சிகள் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம். அதை நன்றாக காட்சிபடுத்தியிருந்தால் சுவாரசியமாக இருந்திருக்கும். நாயகனை, அவனது பத்திரிகையாளர் நண்பனை பில்ட் அப் செய்ய ஏராளமான காட்சிகள் வைத்து மனம் நோக வைக்கிறார்கள். தொடர் தொடக்கத்தில் சுவாரசியமாக இருந்தாலும் பிறகு வளவளவென மாறுகிறது தொடர்கிறது.

மினாடோ அவரது காதலி, நண்பன் கொலைசெய்யப்பட காரணமாக இருந்த பெண்மணியை மன்னித்து, அவரது குழந்தையைக் காப்பாற்றுகிறார். அப்படியெனில் கர்ப்பிணியாக இருந்த நிலையில் லிஃப்ட்டில் படுகொலை செய்யப்பட்ட காதலிக்கு எப்படி நீதி கிடைக்கும். நீதியெல்லாம் இல்லை. அவருக்கு இறுதியாக பூங்கொத்து வைக்கிறார். அதோடு அவரது ஆயுள் முடிவுக்கு வருகிறது. கோட் ஆப் விளையாடும் ஆளே நாயகனை சுட்டுக்கொல்கிறார். கோட் ஆப் தன்னை எதிர்த்த, பீதியூட்டியவனை புத்திசாலியை நியாயந்தீர்க்கிறது. தன்னை அழிக்க முயன்றவனை உரிமையாளனை சிறைக்கு அனுப்பி வைக்கிறது.

குழந்தைகளுக்கு கோமாளி வேடம் போட்டு நாடகம்போட்டு ஆடுபவர்தான் லான்ரி என்ற நிறுவனத்தின் தலைவர். இவர்தான் கோட் ஆப்பை உருவாக்குகிறார். அதாவது, இவரே பாம் வைப்பாராம், இவரே எடுப்பாராம் ரக கதைதான். மோசமான சூழலை இவரே கோட் ஆப் மூலம் உருவாக்குகிறார்.  பிறகு அதை அழிக்கும் தொழில்நுட்பத்தை அரசுக்கு பிராபெட் என்ற பெயரில் தயாரித்து விற்கிறார். இதில் இடையில் வந்து கலவரம் செய்யும் சின்னஞ்சிறு பூச்சிகள்தான் நாயகன், பத்திரிகையாளர், அவரின் கணினி டெக் தோழி எல்லாம்.

மனிதர்களின் மனத்தில் பேராசையை உருவாக்கி அதை தீர்த்து வைப்பதாக ஆசை காட்டி அவர்களை குற்றவாளிகளாக கோட் ஆப் மாற்றுகிறது. கூடவே, போனில் உள்ள அனைத்து தொடர்புகளையும் நகல் செய்துகொண்டு ஒருவர் இறந்துவிட்டால் பிறருக்கு தானாகவே அறிமுகமாகிறது. இந்த காட்சிகளை சற்றேனும் சுவாரசியமாக்கி எடுத்திருந்தால், காட்சிபடுத்தியிருந்தால் ஆக்சன் டிராமாவை ரசித்திருக்கலாம். அப்படியான சந்தோஷத்தை பார்வையாளர்கள் பெறக்கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.

டெக்னிக்கலான ஒரு மையப்பொருளை எடுத்துக்கொண்டு அதை எப்படி நாயகன் எதிர்கொள்கிறான் என்பதை சரியாக காட்சிபடுத்தாத காரணத்தால் தொடர் சுவாரசியமாக தொடரவில்லை. ஐடியா நன்றாக இருந்தாலும் வண்டி செல்ஃப் எடுக்கவில்லை.

செயற்கை நுண்ணறிவு மனிதனை எதிர்த்து நிற்கிறது என்றால் என்னென்ன செய்யும் என்பதை இவ்வளவு மோசமாகவா காட்சிபடுத்துவது? வெடிகுண்டுகளை நகரமெங்கும் வெடிக்க வைக்கிறது. நாயகனை பின்தொடர்ந்து கொலை  செய்ய ஆட்களை அனுப்புகிறது. இணையத்தை தடை செய்கிறது. ஆனால் இதற்கு எதிராக நாயகன் செய்வது ஒன்றுமில்லை. துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு உறைந்துபோய் நிற்கிறார். பத்திரிகையாளர் அணிந்த வெடிகுண்டு ஜாக்கெட் கல்லூரியில் வெடித்தால்தான் என்ன என்று கூட தோன்றிவிடுகிறது. எடுத்துக்கொண்ட மையப்பொருள் பெரியது. ஆனால் பட்ஜெட் சிறியது என தொடர் இயக்குநர் மனம் உடைந்துபோயிருக்கலாம்.

 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்