குடும்ப வரலாற்றின் களங்கத்தை வெளிவராமல் தடுக்கும் மாயப்பபனின் கதை! - க்ரைம் - ரா கி ரங்கராஜன்

 







ரா கி ரங்கராஜன், எழுத்தாளர்



க்ரைம்

ரா கி ரங்கராஜன்

அல்லயன்ஸ் பதிப்பகம்

 

ஒரு முக்கியமான கதை வழியே ஏராளமான கிளைக் கதைகளைக் கூறும் முறையை எழுத்தாளர் ரா கி ர கையாண்டிருக்கிறார். அதில் பழுதும் இல்லை. வாசிப்பில் நீங்கள் எங்கேயும் குழம்பாமல் டோல்கேட்டே இல்லாத நெடுஞ்சாலைபோல சென்றுகொண்டே இருக்கலாம்.

பாலா, டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பவள். அவளுக்கு மாயப்பன் என்பவன் போன் செய்து. அவளது தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜனார்த்தனன் தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அதில் தனது மாயப்பன் குடும்பம் பற்றிய கதை, வரலாறு வரக்கூடாது. வந்தால் அவளது தந்தை கொல்லப்படுவார் என எச்சரிக்கிறான்.

 கதை இப்படித்தான் தொடங்குகிறது. பெரிதாக ரத்தம் வல்லுறவு என நீண்டு செல்லாத கதை. கதையின் போக்கில் ஏராளமான கிளைக்கதைகள் உள்ளன. இதில், சுப்புலட்சுமி தூக்கில் தொங்கிய கதை சுவாரசியமாக உள்ளது. இதில் நினைத்துப் பார்க்காத திருப்பங்களும் உள்ளன. இன்று வரும் கோர்ட் டிராமா படங்களை விட நன்றாகவே எழுதப்பட்ட கதை. இதற்கடுத்த கதையென தினேஷ், சபிதா என்ற பெண்ணால் கொல்லப்பட்ட கதையைக் கூறலாம். இதிலும் குற்றவாளிகளை யார் என்றே யூகிக்க முடியாது.  

 பாலாவுக்கு, அத்தை மகன் சுதீர் உதவுகிறான்.யோகா செய்யும் கோபக்கார இளைஞன். அவன் கோபத்தாலேயே இறுதியாக கொலை வழக்கில் மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து மீட்க உதவும் பாத்திரமாக ஜி கண்ணன் என்ற பாத்திரம் வருகிறது. இவரது பாத்திர படைப்புதான் சற்றே தெளிவில்லாமல் போய்விட்டது.

இறுதியாக குடும்ப வன்முறைக்கு உள்ளான மனைவி மரகதமே, மாயப்பனை கொன்றுவிட அவளைக் காக்க அவளின் சகோதரர்கள் முயல்கிறார்கள்.  உண்மையில் கொலையாக இருந்தாலும் கூட குடும்ப வன்முறை என்ற அடிப்படையில் அந்த பெண்ணுக்கு தண்டனை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது. இறுதியாக இந்த கொலைவழக்கில் சுதீர் விடுதலை ஆகிறான். ஜனார்த்தனம். மாயப்பனின் வேண்டுகோளுக்கு பின்னால் இருந்த தன்மானத்தை யோசிக்கிறார். இந்த பாத்திரம் கட்டிய மனைவியை அடித்து உதைத்து கண்காணிக்கிற சைக்கோட்டிக் பாத்திரம். இந்த பாத்திரத்தின் தன்மானத்தைப் பற்றி காவல்துறை அதிகாரி எதற்கு கவலைப்படவேண்டும்?

 மாயப்பனின் குடும்பத்தார் குற்றம் செய்தவர்கள், வன்முறை வரலாறு கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். அதனால் அந்த  வரலாறு உலகின் கண்களில் படக்கூடாது என மாயப்பன் நினைக்கிறார். ஆனால் அவர் நிகழ்காலத்தில் தனது மனைவிக்கு செய்வது என்ன? அநீதிதானே? அறையில் அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்திரவத செய்வது வன்முறையாகாதா? காவல்துறை அதிகாரி ஜனார்த்தனம் காட்டும் கருணை என்பது குற்றவாளிகளுக்குத்தான். அவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடையாது என எடுத்துக்கொள்ளலாம்.

பாத்திரங்களின் உளவியல் பார்வை சீராக இல்லை. மற்றபடி வேகமாக நூலை வாசிக்க வேண்டும் எனில் தாராளமாக நூலை படிக்கலாம்.

கோமாளிமேடை டீம்

நன்றி - இந்து தமிழ்திசை 


கருத்துகள்