பொதுவாக்கெடுப்பில் இயற்கையை காக்க முயன்ற மக்கள்! - ஈகுவடார் எண்ணெய்க்கிணறு வாக்கெடுப்பு

 




 


யாசுனி தேசியப்பூங்கா எண்ணெய் கிணறு

ஈகுவடார் நாட்டில் தேசியப்பூங்காவில் பெட்ரோலிய கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை இயற்கை செயல்பாட்டாளர்கள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். எனவே, அரசு வேறுவழியின்றி இதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது. அதில், மக்கள் பெட்ரோலியத் திட்டத்தை கைவிடவே அதிகளவு வாக்களித்தனர். இதனால், அரசு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. உண்மையில் இதை பெருநிறுவனங்கள் விரும்பவில்லை. ஆனால், மக்கள் முழு முயற்சியாக நின்று இந்த சாதனையை செய்திருக்கிறார்கள்.

அரசு நிறுவனம் 12 இடங்களில் துளையிட்டு எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து வந்தது. மொத்தம் 225 கிணறுகள். ஒரு நாளுக்கு 57 ஆயிரம் பேரல்களை நிரப்பி வணிகம் செய்து வந்தனர். இந்த திட்டத்திற்கு இஷ்பிங்கோ – தம்போகோச்சா என்று பெயர். அமேசான் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இத்திட்டத்திற்காக இரண்டு பழங்குடியினங்களை அப்புறப்படுத்தியிருந்தனர்.

தொடக்கத்தில் இருந்தே எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பாக வந்த எதையும் அரசு பரிசீலிக்கவே இல்லை. எண்ணெய் கிணறு தோண்டி அதை வணிகம் செய்வதிலேயே குறியாக இருந்தது. இதனால்தான், திட்டத்திற்கு எதிர்ப்பாக அதை நிறுத்தச் சொல்லி வந்த மனு, ஏழு லட்சத்து 50 ஆயிரம் கையெழுத்துகளை களை கூட ஏற்கவில்லை. ஆனால் பொது வாக்கெடுப்பில் காடுகளை பாதுகாக்கும் அமைப்புகள் செய்த பிரசாரத்தால் 5.4 மில்லியன் வாக்குகள் திட்டத்தை நிறுத்தக்கூறி விழுந்தன. 3.7 மில்லியன் வாக்குகள் எண்ணெய் திட்டத்திற்கு ஆதரவாக பெறப்பட்டன. அதிபர் குயிலெர்மோ லாஸோ, சூழலியலாளர்களுக்கு இறுதிவரை எதிராகவே இருந்தார். அரசு எண்ணெய் நிறுவனத்திற்கு இப்போது 13.8 பில்லியன் நஷ்டமாகும் என கூறிப் பேசி வருகிறார். ஆனால், இயற்கை சிதைந்து அதனால் ஏற்படும் இழப்பை கணக்கிட்டால் அரசுக்கு ஏற்படும்  இழப்பு மிகச்சிறியதுதான் என சூழலியலாளர்கள் கூறி வருகிறார்கள். 2007ஆம் ஆண்டு எண்ணெய் இருப்பது ஈகுவடார் அரசால் கண்டறியப்பட்டது. அப்போதைய அதிபரான ரஃபேல் கொரியா, ஐ.நா சபை, தங்கள் நாட்டிற்கு தேவையான தொகையை கொடுத்தால் எண்ணெய் கிணறு தோண்டமாட்டோம் என உறுதி கொடுத்தார். ஆனால், அவர் நினைத்த அளவுக்கு யாரும் நன்கொடைகளை அள்ளிக்கொடுக்கவில்லை. எனவே, எண்ணெய் கிணறுகளை தோண்டும்பணியை தொடங்கினர்.

இந்த இடத்தில் உள்ள காடுகளில் 1300 இன மரங்கள், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பூச்சிகள் வாழ்கின்றன. யுனெஸ்கோ இந்த இடத்தை உயிரியல் பகுதியாக கருதி அங்கீகரித்துள்ளது. காடுகள் அழிவதை தடுத்து அங்கு எண்ணெய் எடுப்பதை ஈகுவடார் மக்கள் ஏற்காமல் இருப்பது முக்கியமான செயல்பாடு. இதை பெரு, பிரேசில், கயானா ஆகிய நாட்டு அரசுகள் புரிந்துகொண்டு எண்ணெய் கிணறு தோண்டுவது பற்றி முடிவெடுப்பது முக்கியம். காலநிலை மாற்றம் அதிகரிக்கும் சூழலில், எண்ணெய்யை தேசிய பூங்காக்களில் இருந்து உறிஞ்சுவது முக்கியமல்ல. மக்கள் அதைத்தான் வாக்களிப்பு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்வது முக்கியம். பாடம் கற்பது அவசியம்.

ஜொனாதன் வாட்ஸ்

கார்டியன் இதழ்

கருத்துகள்