செய்தியாளரை அழ வைத்த அதிபர் ட்ரம்ப் !



Image result for trump






லீகல் கஞ்சா!

உலகெங்கும் 125 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வந்தாலும் பெரும்பாலான நாடுகளில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருள் மரிஜூவானா. அண்மையில் கனடா ஜி7 நாடுகளில் முதல்நாடாக கஞ்சா மீதான தடையை நீக்கி மாற்றி யோசித்துள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமாக விற்பனைக்கு வரும். "செனட்டில் நாம் கொண்டுவந்துள்ள மசோதாவின் மூலம் கஞ்சா விற்பனையை சட்டவிரோத மனிதர்களின் கைகளிலிருந்து வெளிக்கொண்டு வந்துள்ளோம்" என்று ஏகத்துக்கும் பெருமைப்பட்ட  கனடா பிரதமர் ஜஸ்டின் மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதி இது.

லீகல் செய்தால் கருப்பு மார்க்கெட்டிலிருந்து கஞ்சாவை வெளிக்கொண்டுவந்து அரசு கண்காணிக்க முடியும். கஞ்சா அடிமைத்தனம் என்பது 9 சதவிகிதம் என்பதால் புகையிலை(32%), மது(15%), கோகைன்(16%) ஆகியவற்றை விட பாதிப்பு குறைவானதே. இத்தாலி மற்றும் இஸ்‌ரேல் கார்டல்களுக்கு செல்லும் பேரளவிலான வருவாய் இனி கனடா அரசுக்கு மட்டுமே சொந்தம். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதோடு வருமானமும் உயரும்.  



நியூஸ்‌ரீடரை அழவைத்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தன் நாட்டில் குவியும் சட்டத்திற்கு புறம்பான அகதிகள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதில் zero-tolerance" எனும் கொள்கை மூலம் ஆவணங்களில்லாத பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து தனித்தனி முகாம்களில் அடைத்துவருகிறது அமெரிக்கா.

இதுகுறித்து அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப், அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசினார். தற்போது அகதி குழந்தைகளின் முகாம் குறித்த செய்தியை ஒளிபரப்பிய எம்எஸ்என்பிசி சேனலில் அச்செய்தியை வாசிக்கும்போதே செய்தி வாசிப்பாளர் ரேச்சல் மேடோ கதறி அழுதது பலரின் மனதையும் தொட்டிருக்கிறது.  லைவில் செய்தியைப் படித்தவுடன் நம்பவே முடியவில்லை என்று பேசிய ரேச்சல் கண்கள் கசிய அதிர்ச்சியில் ஒரு நிமிடம் தடுமாறிவிட்டார். "டிவியில் உள்ளபோது செய்தியை வாசிப்பதே எனது வேலை. தவறுக்கு மன்னித்துவிடுங்கள்" என ரேச்சல் கேட்டது மக்களின் மனதை தொட இணையத்தில் வைரலாகி வருகிறது அவரின் செய்தி வீடியோ.


துபாய்க்கு இலவச விசா!

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பயணிப்பவர்களுக்கு இலவச விசா அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்்துள்ளது.

அமீரக அரசின் இலவச விசாவின் மூலம் இரண்டுநாட்கள் அந்நாட்டில் ஜாலி சுற்றுலா செல்ல முடியும். கூடுதலாக தங்கியிருக்க ரூ. 930 கட்டினால் போதுமானது. ஐக்கிய அரபு அமீரகம் வழியாக 75% விமான போக்குவரத்து நடைபெறுவதால் இலவச விசா மூலம் சுற்றுலாபயணிகள் அமீரகத்திற்கு குவிவார்கள் என்பது அரசின் எண்ணம். கடந்தாண்டு துபாய்க்கு சென்ற இந்தியப்பயணிகளின் எண்ணிக்கை 2.1 மில்லியன். இது முந்தைய ஆண்டைவிட 15 சதவிகிதம் அதிகம். இதேபோல அபுதாபிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும்(3.60 லட்சம்) கடந்தாண்டு 11% அதிகரித்துள்ளது. கத்தார் உள்ளிட்ட 46 நாடுகளில் விசா இன்றி 60 நாட்கள் தங்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.



 வாட்ஸ்அப்புக்கு வருகிறது தடை!

அண்மையில் ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகளை கைது செய்த காவல்துறை, 2016 ஆம் ஆண்டு நக்ரோட்டா ராணுவ முகாம்களை வாட்ஸ்அப் மூலம் செய்தி பரிமாறி தாக்கியது தெரிந்து ஷாக் ஆகியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய செய்திகளை பரப்பும் சமூகவலைதளங்களை கண்காணித்துவரும் உள்துறை அமைச்சகம், தீவிரவாதிகள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பை தடை செய்ய யோசித்து வருகிறது. செய்திகளை பிறர் தெரிந்துகொள்ள முடியாதபடி என்க்ரிப்ஷன் பாதுகாப்பு இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மற்றும் அழைப்புக்கு தடை உண்டு. பயனர்களின் பிரைவசி தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பு என்றாலும் தேச பாதுகாப்பு என்று வரும்போது விதிகளை மாற்றுவது அவசியம். தகவல் கொள்ளை விஷயத்தில் சிக்கிய வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகளை, இந்திய அரசு ஊடகத்துறை அதிகாரிகள் விரைவில் சந்தித்து பேசவிருக்கிறார்கள்.