போதைப்பொருட்கள் அதிகரிப்பு- ஐ.நா கவலை







செம போதை உலகம்!

போதைப்பொருட்களின் தயாரிப்பு மருத்துவப்பயன்பாடு கடந்து கிடுகிடுவென அதிகரித்து வருவது குறித்த கவலையை ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

"கோகைன், ஓபியம், மெதாம்பெட்டமைன் சந்தையானது முந்தைய ஆண்டுகளை விட விரிவாகியுள்ளது." என்கிறார் ஐ.நா அமைப்பின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றத்துறையின் இயக்குநர் யூரி ஃஃபெடோடோவ். 2000-2015 காலகட்டத்தில் போதைப்பொருட்களால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 2005-2013 ஆம் ஆண்டு குறைந்த கோகைன் தயாரிப்பு அளவு 2016 ஆம் ஆண்டு 1,140 டன்களாக உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது. கொலம்பியாவே போதைப்பொருட்களின் தயாரிப்பு தாயகம். வட அமெரிக்காவில் ஃபெனடனியல், ஆப்பிரிக்காவில் ட்ராமடால் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவப் பயன்பாடு கொண்ட ஓபியாய்டுகளும், ஹெராயின்களை கடத்தும் குற்றங்களும் குறைவற நடைபெறுகின்றன. 2015 இல் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் போதைப்பொருட்களுக்கு பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஆறில் ஒருவருக்கு போதை அடிமைத்தன பாதிப்பு உள்ளது.