படத்தின் சூத்திரமே நல்ல கதைக்கருதான்

    படத்தின் சூத்திரமே நல்ல கதைக்கருதான்


இயக்குநர் பிரகாஷ் ஜா தன் படங்களில் எப்போதும் தொடர்ச்சியாக எழுப்பும் கேள்விகள் குறித்து விளக்கமளிக்கிறார். தற்போது உருவாக்கி வரும் ஜெய் கங்காஜல் படம் குறித்தும் நம்மிடையே உரையாடுகிறார்.

ஆங்கிலத்தில்: அலோக் தேஷ்பாண்டே
தமிழில்: அன்பரசு சண்முகம்

















சத்யகிரஹா படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்தும், கங்காஜல் படத்தினை உருவாக்கி 12 ஆண்டுகள் கழிந்த பிறகு ஜெய் கங்காஜல் படத்தினை உருவாக்கி வருகிறார் பிரகாஷ் ஜா. முந்தைய படத்தில் பீகாரைச் சேர்ந்த மோசமான அரசியல்வாதி குறித்து காட்சிபடுத்தியிருப்பார்.  அஜய் தேவ்கன் நடித்த நேர்மையான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இப்படத்தில் தற்போது பரபரப்பாக அனைவரும் பேசி வரும் நிலம் கையகப்படுத்தல் குறித்து பேசப்பட்டுள்ளது. 

ஜெய் கங்காஜல் படத்தினை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இயக்குகிறீர்கள். திரையரங்கில் இப்படத்தினை எப்போது காணலாம்?

படப்பிடிப்பும், படத்தொகுப்பும் நிறைவடைந்துவிட்டன. படம் நன்றாக உருவாகி வந்திருக்கிறது. படம் மார்ச் 2016 இல் வெளியாகும். கங்காஜல் திரைப்படம் உருவாகிய பின் 12 ஆண்டுகள் கழித்து உருவாக்கியுள்ள படம் இது. காலத்திற்கேற்ப மாற்றங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தினை திரும்ப பார்க்கப்போகிறோம். பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது ஆன்மாவினை இதில் காணலாம். படத்தின் உருவாக்கம் குறித்து எனக்கு மிகவும் நிறைவாக உள்ளது. 

கங்காஜல் படத்தின் தொடர்ச்சியை உருவாக்க ஏன் நினைத்தீர்கள்? அப்படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்ற காரணத்தினாலா?

பிடித்தமானது என்று கூற ஏதுமில்லை. நான் உருவாக்கிய அனைத்து படங்களும் எனக்கு பிடித்தமானவைதான். தாமூல் படத்திலிருந்து சத்யகிரஹா வரை இவற்றினை கூறலாம். இப்படத்திற்காக கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதுமுள்ள காவல்துறையினரை சந்தித்து மக்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவினை அறிய முயற்சித்தேன். அந்த காவல்துறை அதிகாரிகள் செயலற்றவர்களாக ஏதும் செய்யாமல் இருந்தால் என்னவாகும்? குற்றவாளிகளை கைது செய்துவிட்டாலும் கூட அவர்களுக்கு விரைவில் பிணை வழங்கப்படும்போது காவல்துறையினரின் மனநிலை உதவியற்றவர்களாகவும், ஆண்மையற்றவர்களாகவும் அவர்களை அச்சூழல் உணர வைக்கும். காவல்துறை அதிகாரிகள் அந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்த சிந்தனைதான் என்னை இந்தப்படத்தை உருவாக்கத் தூண்டியது. 

உங்களை சுற்றியுள்ள சூழலை திரைப்பட இயக்குநராக எப்படி புரிந்துகொள்கிறீர்கள்? நல்ல திரைப்படத்தினை உருவாக்க அவை உதவுகின்றதா?

என்னைப் பொறுத்தவரை  நல்ல சினிமா என்பது நல்ல கதையை அடிப்படையாக கொண்டதுதான். அக்கதையில் வரும் தனி நபர்களுடன்தான் நம்மை தொடர்புபடுத்தியும் அடையாளப்படுத்தியும் கொள்கிறோம். கதையின் அடிப்படையில் அமைந்த சூழல் என்பது என்பது முதன்மையான இடம் பெறுகிறது.  இன்றைய கால சூழல் கதையில் அரசியல், சமூகம்,அந்தரங்கமான வாழ்வு என பல்வேறு புதிய முரண்பாடுகள் உருவாகி வருகின்றன. இந்த அமைப்பு வலிமையான ஒரு அதிகாரி (அ) புலனாய்வாளர் என யார் உருவாகி வருவதையும் விரும்புவதில்லை.  

 மேலிருந்து கீழ்வரை அனைவரும் யாரோ ஒருவரை பின்தொடர்ந்தவாறு இருக்கிறார்கள். படத்தின் கதை இவற்றையே பிரதிபலிக்கிறது. தாத்ரியில் நடந்த சம்பவம் ஒரு மனிதத்தன்மையற்ற செயலாகும். ஆனால் அப்படி நிகழ்வது உடனே முடிவுக்கு வந்து விடுமா? ஏன் நாம் திடீரென அதீத செயல்பாடுகளின் உயரங்களை எட்டிவிடுகிறோம்?  இது இரு புறங்களிலுமே நடைபெறுகிறது. ஒரு திரைப்பட இயக்குநராக இந்த வேறுபட்ட எதிரெதிரான தன்மைகளை புரிந்துகொள்வது என்பது எனக்கு சுவாரசியமானதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருக்கிறது.

உங்களது படங்களில் ஏன் சமூகம் தொடர்பான பிரச்சனைகளே பேசு பொருளாக உள்ளன?

என்னைச் சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளை நான் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். ஜெய் கங்காஜல் படத்திற்காக நான்கு ஆண்டுகள் காவல்துறையினரை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். இதன் ஆழத்திற்கு செல்லும்போது கதையினை நீங்கள் பெற முடியும். இன்றைய சூழலில் நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை எதுவென அறிவீர்களா? நிலத்தின் உரிமையாளராக இருப்பதுதான். இது நாட்டின் ஏழ்மையான மனிதர்களிலிருந்து செழிப்பான பணக்காரர்கள் வரை இதன் ஆதிக்கம் பரவியுள்ளது. அரசியல், பொருளாதாரம், சமூகம்ஐ தொடர்பான சிக்கல்களும் நிலத்தை மையப்படுத்தியவையாகவே உள்ளன. 

தற்போது நீங்கள் கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்கு வந்து வாழ்கிறீர்கள். ஏனெனில் அங்கு உங்களுக்கு நிலம் என்று ஏதுமில்லை. அப்படி நிலம் இருந்தால் அரசும், தொழில்துறை நிறுவனங்களும் நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் அதனை தமக்கு சொந்தமாக்கிக்கொள்கின்றன. ஆயிரக்கணக்கில் நிலத்தை வைத்துக்கொண்டு அரசியல்வாதி ஒருவர் என்ன செய்வார்?ஏன் பல்வேறு நிறுவனங்களும் நிலங்களை விரும்புகின்றன? நிலம் கையகப்படுத்தல் ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாகிறது? நிலம் தொடர்பான இந்த சிக்கல்களைத்தான் எனது திரைப்படம் பேசுகிறது. 

கங்காஜல் படத்தில் ஆண்தான் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் பெண் ஒருவர் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இதற்கு தனிப்பட்ட ஏதாவது காரணங்கள் உண்டா?

ஆம் நிச்சயமாக. இந்த சமூக அமைப்புமுறை வலிமையான மனிதர்களை விரும்புவதில்லை. தன்னைப் பின்தொடர்பவர்களை மட்டுமே விரும்புகிறது. எனவேதான் இங்கு பெண் கொண்டு வரப்படுகிறாள். அவள் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. மேலும் துரதிர்ஷ்டவசமாக அவள் தனக்கான சொந்த புத்தியை கொண்டிருக்கிறாள். அவள் இந்த முறையில் இயங்கும்போது அது பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது. இதுதான் எனது படத்தின் மையம்.

தங்களது படத்தின் மூலம் இன்றைய வளர்ச்சி திட்டங்களை கேள்வி கேட்கிறீர்களா?

நான் கேள்விகளை உருவாக்குகிறேன். நான் இதனை எந்த முறையில் எப்படி உருவாக்குகிறேன் என்பதே என் உணர்வுநிலையாக இருக்கிறது. இங்கு வெளிப்படுத்தப்படுவதெல்லாம் அனைத்தும் அரசியலாகத்தான் உள்ளது. இங்கு அரசியல் என்பது இல்லையென்றால் சமூகத்தின் உள்ளே ஏற்படும் எதிரிடையான பயம் என்பதற்கே அவசியமிருக்காது. அரசியல்வாதிகள் தம்மை அதிகாரம் செலுத்தும் இடத்திற்கு வர விரும்புகிறார்கள். எனவே அவர்கள் அறம் குறித்துப் பேசி பேசி தங்களைச் சுற்றி ஒருவித புனித புலத்தை தோற்றுவிக்க முயல்கிறார்கள். 


இது போன்ற பிரச்சனைகளை மையமாக வைத்து இந்திப் படவுலகில் திரைப்படங்களை உருவாக்குவது கடினமானதாயிற்றே?

ஆனால் என் முன் இருக்கும் சவாலே அதுதான். சமூகம் என்பதை ஒரு கதாபாத்திரமாகவே நான் பார்க்கிறேன்.  எனது படங்களை திரைப்படத்துறையில் குறிப்பிட்ட சில சூத்திரங்களின் படி உருவாக்குகிறேன். அப்படி உருவாக்காவிட்டால் இங்கு அவை பலனளிக்காமல் போய்விடும். 

உண்மையில் படத்திற்கு அடிப்படை நல்ல உள்ளடக்கமும் அதனை சரியாக கூறுவதும்தான். இன்று வெற்றி பெறும் படங்கள் எந்த சூத்திரங்களையும் கொண்டிருக்காதவை. முந்தைய கற்பனைகள் உடைந்துவிட்டன. பல்வேறு உறவு கொண்ட கதாபாத்திரங்கள், அவர்களின் கதைகள் என்று கூறிச்செல்லும் தன்மை எனக்கு பெரும் ஆர்வமூட்டுகின்றன. ஜாதிகள், சமூகத்தின் மாகாணப் பிரிவினைகள், ப்யூடலிசம், திறந்த சந்தை, அரசியல் குற்றங்கள் என இங்கு நிகழ்பவையெல்லாம் அனைத்தும் கதைகள்தான். எனக்கிருக்கும் சவாலே இவற்றை பிரதிபலிக்கும்படியான படத்தினை உருவாக்கி இவை குறித்து ஏதுமறியாத மக்களிடம் இதனை கொண்டு செல்வதுதான். இந்த முறையில் திரைப்படங்களை அனுபவித்து உருவாக்க முடியும். 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பேசினால் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி என்றல்லவா உங்களுக்கு முத்திரை குத்தப்படும்?

உண்மையின் மாற்றம் குறித்த நம்பிக்கை எனக்குண்டு. எது நடந்தாலும் சரி. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஏன் கஜேந்திர சவுகான் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சம காலத்தில் அவர் என்ன தகுதியின் காரணத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதை மறைக்கவே முடியாது. இந்த தன்மைக்கு எதிராக நீங்கள்  போராட்டம்  நடத்தலாம். இதன் முடிவு என்ன? போராட்டம் தேவைப்படுகிறது என்றாலும் அது தேவையான முடிவை நமக்குத் தரப்போவதில்லை. 

நீங்கள் உண்மையில் அரசியலில் ஈடுபட்டுள்ளீர்கள்?

நான் எந்த கட்சியிலும் அல்லது கருத்தியலிலும் என்றும் பங்கேற்றது இல்லை. குறிப்பிட்ட விஷயம் குறித்து புரிந்துகொண்டு என்று கருத்தினைக் கூற விரும்புகிறேன். நாம் எதனையும் மாற்றிவிட முடியாது. நடப்பது அதன் போக்கில்தான் நடைபெறும்.

தாங்கள் உருவாக்கும் படங்களின் தன்மையினை கருத்துக்களை மக்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா?

பார்வையாளர்களிடம் இவை குறித்த விழிப்புணர்வு நிச்சயம் உண்டு. மக்கள் புதிய உள்ளடக்கங்கள் கொண்ட படங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் படத்தை உருவாக்குபவர்களோ ஒரே கதையினை திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருக்கிறார்கள். கோர்ட் படத்தை  எடுத்துக்கொள்ளுங்கள். நாட்டிலுள்ள மக்களுக்கு இப்படி படங்கள் வருகிறது என்பதை உணர்கிறார்கள். நாளை இதுபோன்ற படங்கள் அதிகம் உருவாகும் சூழ்நிலை உருவாகலாம்.

இந்த படங்கள் மிக குறைவான தொகையில் படமெடுப்பதால் ஆர்வமூட்டுபவர்களுடன் இணைந்து பணிபுரிவதால் தாங்கள் செலவிடப்பட்ட தொகையையும் மீட்க முடிகிறது. இந்தப்படங்கள் பெரும் பிரகாசத்தை ஏற்படுத்தி வருகின்றன.

நன்றி: தி இந்து ஆங்கிலம் அக்டோபர் 11, 2015