நேர்காணல் ஜிதேந்தர் பார்க்கவா

     நேர்காணல்


ஜிதேந்தர் பார்க்கவா

''ஸ்பைஸ் ஜெட் கிங்ஃபிஷரின் நிலையை சந்திக்காது என்று நம்புகிறேன்''

பொருளாதார சிக்கல்களால் ஸ்பைஸ்ஜெட் தள்ளாடி நிறுவனத்தை மூடும் விளிம்பிற்கு வந்துள்ளதை அரசிடம் தெரிவித்து உதவி கோரியுள்ளது. விமானத்துறை நிபுணரும், ஏர் இந்தியா முன்னாள் நிர்வாக அதிகாரியுமான திரு.ஜிதேந்தர் பார்க்கவா ஸ்பைஸ்ஜெட் என்ன தவறுகளைச்செய்தது? என்ன பாடங்களை வருங்காலத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கமாகப்பேசுகிறார்.

ஸ்ரீதர் குமாரசுவாமி
தமிழில்: அன்பரசு ஷண்முகம்

1.ஸ்பைஸ்ஜெட் வேகமாக ஆச்சர்யமூட்டும் விதத்தில் முதலீட்டாளரை தேடி அடையுமா? அல்லது நிறுவனம் விரைவில் மூடும் வாய்ப்புகள் உண்டா?

ஸ்பைஸ்ஜெட் தற்போது சந்திக்கும் குழப்பங்கள் விமானத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு ஆச்சர்யம் தராது. இப்படியான நிலைமை வரும் என்று முன்பே அவர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். சில மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கைகளை பலர் கூறினாலும், விமானநிர்வாகம் அக்கருத்துக்களை புறந்தள்ளி, அக்கருத்துக்களை கூறியவர்களை நோக்கி தவறான யூகம் என்றார்கள். மேலும் இந்த ஆபத்தான நிலைமை தன் பணப்புழக்கத்தை அதிகரிக்கத்தொடர்ந்து தவறான முறையில் விமானக்கட்டணங்களை குறைத்து வந்ததும் ஒரு காரணமாகும். ஸ்பைஸ்ஜெட்டானது, 30 க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிக்கொண்டும், சந்தைமதிப்பை 20% கொண்டிருந்தபோதும் முதலீட்டாளரைப்பெறத் தவறிவிட்டது. தற்போதைய பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பெருமளவு பணத்தை தருவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். விரைவில் நிறுவனத்திற்கு முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள் என்று நம்புவோம்.

2.முன்னாள் பங்குதாரரான அஜய்சிங் நிறுவனத்தை இச்சூழலிலிருந்து மீட்டெடுப்பார் என்று நம்பப்படுகிறது. உங்களது கருத்து என்ன?

முன்னாள் பங்குதாரரான திரு.சிங் தேவையான தொகையை பணயம் வைக்க முடிவெடுத்தால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு புதிய வாழ்வு கிடைக்கலாம். நீண்டகால தீர்வினைப்பெற ஸ்பைஸ்ஜெட் மேலும் கவனம் கொண்டு தன்னை நேர்த்தி செய்துகொள்வதோடு, அரசிடம் வணிகத்திற்கு ஏற்றாற்போல செயல்பாட்டு கட்டணங்களை முன்னுரிமை அடிப்படையில் சில கொள்கைகளை மாற்றுவதற்கு அல்லது குறைப்பதற்கு வேண்டுகோள்களை வைக்கலாம். விமானத்துறையோடு சம்பந்தப்பட்ட நிலையானவையாக விமானநிலையங்கள், அரசு, மாநில, மத்திய எண்ணெய்நிறுவனங்கள், சுற்றுலா, மருத்துவ நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடர்ந்து வருவாய் ஈட்டுகின்ற நிலையில் விமானநிறுவனங்கள் நஷ்டப்பட்டு தம் வருவாயை இழக்கின்றன என்றால், அதற்கு காரணம் குறிப்பிட்ட அளவு மக்களை அதில் ஏற்றிச்செல்ல முடியாததே காரணமாகும்.

3.கிங்ஃபிஷர் நிறுவனத்தின் வீழ்ச்சியிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்வதிலிருந்து தோற்றுவிட்டோமா? இவ்விரண்டு பிரச்சனைகளிலும் ஏதேனும் ஒற்றுமை உள்ளனவா?

ஸ்பைஸ்ஜெட் மற்றும் கிங்ஃபிஷர் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மெல்ல தன் நிறுவனத்தில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையை குறைத்தல் அல்லது நிறுத்தம், பெரிய அளவிலான விமான புறப்பாடுகளை குறைத்தல் அல்லது நிறுத்தம், விமானங்களுக்கான வாடகையை தரமுடியாதது, எண்ணெய்நிறுவனங்களுக்கு தொகை தராதது, விமானநிலைய இயக்குநர்களுக்கு ஊதியம் அளிக்காதது, வரிகட்ட தாமதிப்பது, இறுதியில் பணியாளர்களுக்கான ஊதியங்களை தரமுடியாது போவது ஆகியவை நிகழுகின்றன. பிறகு அதீத தன்னம்பிக்கையில் முதலீட்டாளரை தேடுவது போல காட்சிகள் காட்டப்படும். கிங்ஃபிஷரின் நிலை ஸ்பைஸ்ஜெட்டிற்கு வராது என நம்புகிறேன். கிங்ஃபிஷரின் அனுபவத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் ஏதாவது பாடங்களைக் கற்றுக்கொண்டதா என்றால் இல்லை எனலாம். ஏனெனில் அந்தநிறுவனம் எந்த புத்திசாலித்தனமான முடிவையும் கிங்ஃபிஷரின் அனுபவம் நடந்தபின் எடுக்கவில்லை. மிகத்தாமதமாக இப்போது நிறுவனம் கண்விழித்துள்ளது. நிதிநிலைமை குறித்த ஒரு அவசரமான கண்காணிப்பினை விமானநிறுவனங்கள் ஏற்படுத்தவேண்டும். தொடர்ந்து கண்காணித்து பிரச்சனையை குறிப்பிட்ட காலத்திலேயே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட் என இரு நிறுவனங்களுமே அதீத தன்னம்பிக்கையால் பிரச்சனையில் மாட்டிக்கொண்டவை.

4.அரசு நிதிச்சிக்கலில் சிக்கித்தவிக்கும் தனியார் விமானநிறுவனங்களுக்கு உதவி செய்ய நேருமா? குறிப்பாக ஏர் இந்தியா நிதிச்சிக்கலில் சிக்கித்தவித்தபோது, அரசு உதவியதற்கு காரணம் அது அரசு நிறுவனம் என்பதுதானா?

அரசு தனியார் விமான நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தன் உதவிகளை விரிவாக்கவேண்டும் என்பது சிறிதும் நியாயமற்றது. தனியார் விமானநிறுவனங்கள் அரசின் தலையீடு இன்றி வெவ்வேறு தனிமனிதர்களின் வழிகாட்டுதலில் இயங்குகின்றன. ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்குவதை அவற்றோடு ஒப்பிடுவது சரியானதல்ல. ஏர் இந்தியாவினை வழி நடத்துவது அரசு அதாவது, மாறன் எப்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கோ (அ) ராகுல் பாட்டியா எப்படி இண்டிகோவிற்கோ (அ) நரேஷ் கோயல் எப்படி ஜெட் ஏர்வேஸிற்கோ அப்படித்தான். மேலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் அரசே அனைத்து முக்கியமான முடிவுகளையும் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர்குழு உள்ளிட்டவற்றை தீர்மானிக்கிறது. ஏர்இந்தியா அரசின் கொள்கைகளை உறுதியாக கடைபிடித்து பணிவாய்ப்புகள், பதவியுயர்வுகள், செலவுகள் ஆகியவற்றை நிறுவனம் எப்படி லாபமாக இயங்குகிறதோ இல்லையோ கடைபிடித்தாகவேண்டும். தனியார் நிறுவனங்கள் போல ஏர்இந்தியா முழுக்க வணிகமயமானதல்ல.





5.ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நிதிச்சிக்கல் மற்றும் இயங்க முடியாத நிலைமை ஆகியவற்றினால் இந்தியாவின் அடையாளம் மற்றும் நிறுவனம் சார்ந்துள்ள 10000 குடும்பங்களையும் பாதிக்கும் என்று கூறியிருக்கிறதே? இது அரசினை நெருக்கடிக்கு உள்ளாக்குமா?

கிங்ஃபிஷர் நிறுவனத்தையடுத்து மற்றொரு நிறுவனம் இவ்வளவு விரைவில் வீழ்ச்சியடைவது இந்தியாவின் அடையாளத்தை உலகளவில் பாதிக்கும்தான். ஆனால் அதற்காக அரசு அந்நிறுவனத்திற்கு உதவிகள் செய்வதற்கான காரணமாக அதனைக்கொள்ள முடியாது. மீட்டெடுக்கும் அப்பொறுப்பு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகக்குழு இயக்குநருக்கே உள்ளது. அரசு புதிய தொழிற்சாலைகளுக்கான விதிகளை இயற்றி (விமானம் சார்ந்ததல்ல) லாபம் வருமளவு செயல்பாடுகளைச் செய்ய உதவலாம். 10000 குடும்பங்களுக்கான பிரச்சனையை ஸ்பைஸ்ஜெட் நிர்வாக இயக்குநர்தான் முன்வந்து தீர்க்கவேண்டுமே தவிர அரசல்ல.

6.விமானத்துறையில் வலிமையுள்ளதே எஞ்சும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறீர்களா? (அ) விமானநிலையம் பொது சொத்து ஆனால் அது தனியாருக்கு சொந்தமானது அதனை நிதியுதவி அளித்து காப்பாற்றவேண்டும் என்று நம்புகிறீர்களா?

வலிமையுள்ளதே எஞ்சும் என்பதை தீவிரமாக ஆதரிப்பவன் நான். அரசின் கொள்கைகளை வேகமாக மாற்றி சூழலை ஆரோக்கியமானதாகவும், போட்டியிடக்கூடியதாகவும், சிறப்பானதாகவும் மாற்றலாம். அனைத்து விமானநிறுவனங்களையும் அரசு சொத்தாக மாற்றுவதற்கு பதில் அவற்றை வணிக போட்டியாளராக திறம்பட மாற்ற முடியும். நிதியுதவி என்பது  கட்டணஅட்டவணை மிகவும் கீழே இருக்கும் தருவாயில் தொழில்முனைவோர் அதனால் பாதிக்கப்பட்டால் அரசு அளிக்க நியாயமுண்டு. விமானநிலையக்கட்டணங்கள், விமான எரிபொருள் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் செயல்பாட்டுச் சூழல், அரசின் கொள்கை முடிவுகள் காரணமாக பல்வேறு ஆண்டுகளாக மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.

7.அரசின் கொள்கைகளின் வழி புதிய விமான நிறுவனங்களை தற்போது இருக்கும் விமானநிறுவனங்களுக்கும் மேலாக அனுமதிப்பது சரியானதாக இருக்குமா?

அதிக எண்ணிக்கையிலான விமான நிறுவனங்களை இந்த சூழலில் கொண்டுவருவது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல. தற்போது இருக்கும் ஏர் ஆசியா, இந்தியா, விஸ்தாரா ஆகிய நிறுவனங்களைத்தாண்டி அறிமுகப்படுத்தப்படும் புதிய ஆறு நிறுவனங்கள் வரும்போது குறிப்பிட்ட வழித்தடத்தில் அதிக விமானங்களை இயக்க அனுமதி கேட்கும் பிரச்சனை இன்னும் பெரியதாகும்.
தேவையைவிட அதிகமான உற்பத்தி போல புதிய விமான நிறுவனங்கள் சந்தையில் நுழையும்போது, நிதிநிலையில் நல்ல இடத்தில் உள்ள நிறுவனங்கள் அல்லது புதிய நிறுவனங்கள் கவர்ந்திழுக்கும் (கட்டணக்குறைவான) திட்டங்களை சந்தையைப் பிடிக்க அறிவிப்பார்கள். இதன் பின் நிகழ்வாக மற்ற நிறுவனங்களும் கட்டணப்போரில் தம் நிறுவன சந்தைமதிப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக குறைவான கட்டணத்திட்டத்தை அறிவித்து நஷ்டமடைவது தொடங்கும். கடந்த காலத்தில் இப்போக்கு பல்வேறு நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு காரணமாகி உள்ளது.

8.குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கி சந்தைமதிப்பை பெறுவதில் என்ன தவறு இருக்கிறது? குறைந்த விலை(மலிவான) என்பதன் பின் உள்ளதாக தாங்கள் கருதுவது என்ன?

குறைந்த செலவு கொண்ட விமானம் பொறுத்தவரையில் எதுவும் தவறில்லை. ஆனால் அதனை குறைந்த கட்டணம் என குறிப்பிட வேண்டுமே தவிர குறைந்த செலவு என்று குறிப்பிடக்கூடாது. 

குறைந்த கட்டணம்  கொண்ட நிறுவனங்கள் சிக்கலான குறைந்த கட்டணஅட்டவணையினை அறிவித்து, ஏர் இந்தியா போன்ற இவற்றை விட அதிக கட்டணஅட்டவணை கொண்ட நிறுவனங்களோடு் போட்டியிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன. குறைந்த கட்டணஅட்டவணையை அறிவிக்கும் நிறுவனங்கள் எந்த வித முன்யோசனையும் இன்றி, சந்தையை தவறான ஊக்கமூட்டுதலை செய்து சந்தை மதிப்பு உயர்வு அல்லது அதிக பயணிகளின் வரவு ஆகியவற்றை செயல்பாட்டு செலவினமாக செய்கிறார்கள். இதுபோன்ற தவறான சாகசப்பயணங்களின் முடிவை நாம் அனைவரும்தான் பார்க்கிறோமே!

நன்றி: டெக்கன் கிரானிக்கல், 21.12.2014

கருத்துகள்