தத்துவங்களின் படி கல்வி அமைந்தால் என்னவாகும்? - ஜே கிருஷ்ணமூர்த்தி

 









கல்வி தத்துவத்தின் படி அமையக்கூடாது!


நெறிமுறைகள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் இயல்புகளை விட அவற்றை எவை என அடையாளம் காண்பது முக்கியம். கல்வியை கற்பிக்கும் ஆசிரியர் அவற்றை கற்பிக்கும் முறை என்பது அவர் கற்று அறிந்த விஷயங்களை விட முக்கியம். ஏனெனில் கல்வி கற்கும் முறையில்தான் ஒருவர் இன்னொருவரின் புத்திசாலித்தனத்தை மேம்படுத்த முடியும். ஊக்குவித்து வளர்க்க முடியும்.ம குறிப்பிட்ட விதிமுறைகள், நெறிகள், நுட்பங்கள் வழி கற்பிப்பது ஆசிரியருக்கு எளிதானதாக மாறுகிறது. இதன் வழியாக மாணவர்களுக்கு அவர் எளிதாக கற்பிக்கலாம். ஆனால் அமைப்பு முறை, கருத்துகளை வறட்சியுடன் கூறுவது ஆகியவை தவிர்க்கப்படுவது அவசியம்.

கல்வி என்பது குறிக்கோள்கள், லட்சியவாதிகளைக் கொண்டது அல்ல. கல்வி என்பதைக் கற்கும் பிள்ளைகளின் வழி பெற்றோர் அவர்களைப் புரிந்துகொள்வது நடக்கவேண்டும். விதிகளை, நெறிகளை, குறிக்கோள்களை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிக்கின்றனர். இதனால் பிள்ளைகள் சிறு வயதிலேயே மூடிய இயல்பு கொண்டவர்களாக இறுக்கமான மனம் கொண்டவர்களாக வளர்கிறார்கள். உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கு முன்னர், தங்கள் மனதில் எழும் முரண்பாடுகளை சமாளித்து வென்றெழ வேண்டியிருக்கிறது. இப்படி திணிக்கப்படும்  குறிக்கோள்கள், அதை அடிப்படையாக கொண்ட லட்சியவாதிகள் மூலம் பிள்ளைகளை ஆசிரியர், பெற்றோர் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது.

 

ஒரு குழந்தை உங்களிடம் பொய் சொல்கிறது என வைத்துக்கொள்வோம். அந்தக்குழந்தையிடம் பொய் கூறுவது தவறு என புரிய வைப்பீர்கள். இந்த இடத்தில் நாம் குறிக்கோள்களை விரிவாக விளக்கி அதை கூறமாட்டோம் அல்லவா? எளிமையாக பொய் சொல்லக்கூடாது என்போம். சிறிது நேரம் செலவு செய்து குழந்தையைப் புரிந்துகொண்டு ஆய்வு செய்தால் உண்மை வெளியே தெரிந்துவிடும். இதைச் செய்ய அன்பும் , புரிந்துகொள்ளலும் தேவை. ஆனால் இந்த இயல்புகள் இல்லாதபோது அவர்களை புரிந்துகொள்ள முடியாது. எனவே அவர்களை குறிக்கோள் நோக்கி ஓடுபவர்களாக எளிதாக மாற்ற முடிகிறது.

குறிக்கோள்கள், முன்மாதிரிகளை எடுத்துக்காட்டி பேசுவது நிகழ்காலத்திலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளும் வழி எனலாம். எதிர்கால லட்சியவாதிகளை விட நிகழ்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கும் குழந்தைகளே முக்கியம். அன்பை தனது மனதிலிருந்து வெளியேற்றிவிட்ட லட்சியவாதிகளால் மனித குலத்தில் எழும் எந்த பிரச்னைகளையும் தீர்க்க முடியாது.

 

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் சரியானவராக இருந்து முறைகளை நாடாதவராக இருந்தால் நல்லது. ஆசிரியர் தனது வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவரின் மீது தனி கவனம் செலுத்துவது அவசியம். இங்கு எந்திரங்கள் போல மனிதர்களை நடத்தகூடாது. மனிதர்கள் என்பதால், அவர்களை எந்திரங்கள் போல எளிதாக பழுதுபார்த்து சரி செய்ய முடியாது. அவர்கள் மனிதர்கள் என்பதால் பயம், காதல், வசீகரம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். பொறுமையையும் அன்பையும் கொண்டிருந்தால் மட்டுமே இவர்களை நேசிக்க முடியும். இந்த குணங்கள் இல்லாத மனிதர்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வை பிறரிடம் எதிர்பார்ப்பார்கள். மாற்றங்களையும் முடிவுகளையும்  கிடைக்கும் என நம்புவார்கள். எந்திரத்தனமான இவ்வகை சிந்தனை ஒருவரின் மூளையில் படிந்துவிட்டால், அவரே அறியாதபடி நிறைய பிரச்னைகளை அவர் எதிர்கொள்ளும்படி இருக்கும். இன்றைய கல்விமுறை இந்த திசையில்தான் பயணித்து வருகிறது.

இப்படிப்பட்ட சிந்தனைகளோடு வளரும் பிள்ளைகள் பல்வேறு நிபந்தனைகளைக் கொண்டு சந்திக்கின்றனர். பிள்ளைகளுக்கு சிறுவயதாக இருக்கும்போது, அவர்களுக்கு காயம் ஏற்படாதவாறு பாதுகாக்கிறோம். நாம் இதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. கூடுதலாக நமது எண்ணங்கள், சிந்தனைகள், கருத்துகளை அவர்களுக்கு கற்றுத் தருகிறோம். பிறகு, அவர்கள் எந்திரத்தனமான சிந்தனைகளோடு வளர்ந்து போரிடச் சென்றால், அதில் அவர்கள் இறந்தால் அவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறோம்.  அப்படி இல்லாதபோதும் பல்வேறு சிக்கல்களை முதிராத மனதுடன் சந்திக்கும் தமது பிள்ளைகளை நினைத்து கவலை கொள்கிறோம்.

 

தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் நூலிலிருந்து…. 

 


கருத்துகள்