குற்றம் செய்தது யார் என கண்டறிவது எப்படி?

 







ரத்தசாட்சி

ஒருவர் இன்னொருவரை கத்தியால் குத்திக்கொல்கிறார். சுத்தியால் தலையை சிதைக்கிறார். அல்லது கோடாரி வைத்து நெஞ்சை அல்லது கபாலத்தை பிளந்து கொல்கிறார். இப்படி கொல்லும் முறையைப் பொறுத்து சில பாணிகள் அமைந்துவிடும். செல்வராகவன் படம் என்றால் நெருப்பு டான்ஸ் எங்கேப்பா என்கிறார்களே அதுதான். ஆனால் இப்படி இந்த பாணி கொலை என்று சொல்ல முடியாதபடி கொலைகளும் நிறைய நடந்தபடி உள்ளன. காவல்துறையினரும் ஏபிசி என வரிசைமுறைப்படி பழகிவிட்டதால், இது அவனாக இருக்குமோ, இல்லை இவனாக இருக்குமோ என குழம்பும்படி ஆகிவிட்ட வழக்குகளும் ஏராளம் உண்டு. இங்கு நாம் அதுபோல சில விஷயங்களைப் பார்ப்போம்.

நியூயார்க்கில் ரோசெஸ்டர் நகரம். 2005ஆம் ஆண்டு. இங்கு ராபர்ட் ஸ்பாஹால்ஸ்கி என்பவர் தான் நான்கு கொலைகளை செய்ததாக கூறி சரண் அடைந்தார். காவல்துறையினருக்கு எப்போதும் ஈகோ அதிகம். நீ வந்து சரணடைந்தால் நாங்கள் விசாரிக்காமல் இருக்க முடியுமா விசாரித்து, முதலில் இரண்டு வழக்கு, பிறகு இரண்டு வழக்கு என சோதித்து உண்மையை அறிந்தனர்.

மூன்று கொலைகள் நடந்த ஆண்டு 90 முதல் 91 என ஓராண்டு என்றால் அடுத்த கொலை பதினைந்து ஆண்டுகள் கழித்து நடைபெற்றுள்ளது. கொலைக்குற்றச்சாட்டு உறுதியானால் ராபர்ட்டை தொடர் கொலைகார ர் என்ன ஸ்டாம்ப் குத்திவிடலாம். ஆனால் ராபர்ட்டை பார்த்தால் கொலைகார ர்கள் எப்படி இருப்பார்களோ அந்த தன்மையில் இல்லை. அதாவது, இவரே பாதிக்கப்பட்டவர் மாதிரிதான் தெரிந்தார்.

இதுபோல தொடர் கொலைகாரர்களுக்கு கொலை செய்வதில் ஆசை அல்ல பேராசை இருக்கும்.  மேலும், பிறர் தன்னை கொன்றுவிடாதே நான் வாழவேண்டும் என்று சொல்வதையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் நெத்தியில் சுத்தியலை அல்லது நெஞ்சில் கத்தியை இறக்குவார்கள். குற்றவுணர்ச்சி என்பதெல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாது. வலி என்ற உணர்வு தவிர பிற விஷயங்கள் சற்று குறைவு. இருந்தாலும் அதை வெளிப்படுத்த மாட்டார்கள்.

ராபர்ட் சமாச்சாரத்துக்கு வருவோம். அவர் மூன்று பெண்கள், ஒரு ஆணை கொன்று இருந்தார். எதற்கு சார் கொலை செய்தீர்கள் என காரணம் கேட்டால் அதற்கு ராபர்ட் சொன்ன பதில் அதிகாரிகளை தலைசுற்ற வைத்தது. கொலைகளுக்கான காரணங்கள் குறிப்பிட்ட ஃபார்முலாப்படி இல்லை.

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவது, குடும்ப வறுமை, சுமாரான அறிவு, காம பசி என தொடர் கொலைகாரர்களுக்கு நிறைய காரணங்களை ஆய்வாளர்கள் அடுக்குவார்கள். ஆனால் இதெல்லாம் காலப்போக்கில் காலாவதியான கருத்துக்களாக மாறவே வாய்ப்பு அதிகம்.  இவற்றை எல்லாம் வைத்து அ, ஆ, இ, ஈ என்ற வரிசையில் தொடர் கொலைகாரர்களைக் கணிக்க முடியாது. அது மிகவும் கடினம். அமெரிக்காவின் எஃப்பிஐயில் வேலை செய்த குற்றவாளிகளின் தகவல் தொகுப்பாளரான ராபர்ட் கே ரெஸ்லர், குற்றவாளிகள் பற்றி தகவல் சேகரிக்கும்போது எளிமையாக உண்மையை மட்டும் சேகரித்து வந்தால் போதும் என்கிறார்.   

கருத்துகள்