அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

 










  மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை  அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.  

காய்ச்சல்

குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்  என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.   

ரத்தப்போக்கு

உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,  வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும்.

சமூக காரணிகள்

குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், பட்டினியாக கிடப்போர் ஆகியோர் அவசர சிகிச்சைக்கு வருவது உண்டு. யாராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அவசரசிகிச்சைப் பிரிவினர் வழங்குவது முக்கியம். இதற்கு அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை வேண்டும். நோயாளிகள் அவர்களை கூட்டி  வரும் உறவினர்களை கவனமாக பார்த்து நோயைப் புரிந்துகொள்ள வேண்டும். அவசர சிகிச்சையில் ஒருவர் தனது உழைப்பிற்கேற்ப புகழைப் பெறுகிறார், பதவி உயர்வை பெறுகிறாரா என்றால் அது கடினம்.  

உடல் உறுப்புகளின் இயக்கம் பற்றிய தகவல்கள்

ஒருவர் தீவிபத்து, புகை, நீராவி பட்டு காயம் ஏற்பட்டிருக்கலாம். அப்போது அவரை எப்படி சோதிப்பது? மூச்சு, உடல் ஊனம், ரத்தவோட்டம், உடல் உணர்வுநிலை ஆகியவற்றை அவசர சிகிச்சை மருத்துவர்கள் சோதிக்க வேண்டும். மூச்சு என்றதும் பலரும் நுரையீரல் சரியாக இருந்தால் மூச்சு வந்துவிடும் என நினைக்கிறார்கள். மத்திய நரம்பு மண்டலம், இதயத்தசைகள் ஆகியவையும் சரியாக இயங்கவேண்டும். அப்படி இயங்காதபோது, மூச்சு விடுவதில் பிரச்னைகள் தொடங்கும். வெப்பம், நீர், நச்சு, பனி என நோயாளியை பாதித்து உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் காரணங்களை கண்டறிய சில அடிப்படை சோதனைகள் உள்ளன.

நோயாளி விபத்தில் அடிபட்டு வந்தால் அவருக்கு கண்களை சோதிப்பார்கள், பிறகு, அவரின் உணர்வுநிலை அதாவது வலியை உணர்கிறாரா, அவரது பெயரை சொல்ல முடிகிறதா, தான் எங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறோம் என தெரிகிறதா என சில கேள்விகளை மருத்துவர்கள் கேட்பார்கள்.  விரலை இடதும் வலதுமாக காட்டி பிறகு மேலிருந்து கீழ் வரை காட்டி அதை தெரிகிறதா என்று கேட்பது எல்லாம் கூட உறுப்புகளின் இயக்கம் சார்ந்த கேள்விகள்தான். 

இவையெல்லாம் பரிட்சித்து பார்த்துவிட்டால் ஒருவரின் உடலில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சற்று எளிதாக அடையாளம் காண முடியும். இதையெல்லாம் அவசர சிகிச்சை மருத்துவர் வேகமாக செய்யவேண்டும். நோயாளியின் அறிகுறிக்கு ஏற்பட மருந்துகளை வழங்க செவிலியர்களுக்கு  உத்தரவிடவேண்டும். இல்லையென்றால் அம்மா மர்கயா என அசல் கோளாறு பாடிய பாடலைப் பாட வேண்டியதுதான்.

இந்த சோதனைகளிலிருந்து ஒருவர் நோயாளிக்கு உள்ள பிரச்னை நரம்பியல் சார்ந்ததா அல்லது வேறு வகை பிரச்னைகளா என அடையாளம் காண முடியும். அதாவது அவர் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவராக இருந்தால்….

 

வரலாறு

ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்ட நோயைப் பற்றிய வரலாற்றை துல்லியமாக மருத்துவரிடம் கூற வேண்டும். ஹெக்கிமோக்ளு டிவி தொடரில், துறை தலைவரான ஹெக்கி மோக்ளூ நோயாளி எப்போதும் பொய்தான் சொல்லுவார். எனவே நாம் அவரது  வீட்டு முகவரியை பெற்று அங்கு போய் பார்த்து ஆய்வு செய்யவேண்டும் என்று கூறுவார். இந்த டிவி தொடர் புனைவுதான் என்றாலும் அவர் நோயைப் பற்றி நோயாளிகள் நேர்மையாக ஒப்புக்கொண்டு உண்மையைக் கூறுவதில்லை எனபதை நேரடியாக நிரூபித்தே காட்டுவார். 

அவசர சிகிச்சையில் ஆய்வு செய்வதற்கு அதிக நேரமில்லை. எனவே நோயாளி கூறும் நோய் பற்றிய குறிப்புகள்தான் 85 சதவீதம் அடிப்படைத் தகவல். அதை வைத்துத்தான். மருத்துவர்  என்ன மருந்து கொடுக்கலாம் என பரிந்துரைப்பார். நோயாளியைப் பொறுத்தவரை அவர் ஒரு மனிதர் என்பதால், மருத்துவர் தன்மையான முறையில் கேள்வி கேட்டு பதில்களை பெறுவது சிறப்பு. முடிந்தவரை ஆம் இல்லை என பதில் கூறும்படி கேள்விகளை அமைப்பது சிறப்பு. இது நோயுற்றவருக்கு பதில் சொல்ல எளிதாக இருக்கும். மருத்துவர் நோயாளியைப் பார்த்து கேள்விகளைக் கேட்கும்போது நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவது சிறப்பு. அது நோயாளிக்கு உளவியல் ரீதியாக ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். தனது நோயைப் பற்றிய (தற்போதைய) நிலை பற்றி கூறுவார். இதை பயிற்சி மருத்துவர் அல்லது செவிலியர் குறிப்பெடுத்துக் கொள்வது சிகிச்சைக்கு உதவும்.

 

நோயை அறிவதற்கு கேள்விகளை கேட்கும் முறை உண்டு. கேள்விதானே கேட்கிறேன் பார் என தீராநதி கடற்கரய் போல ஒரு பாராவுக்கும் அதிகமாக ஆராய்ந்து கேள்விகேட்டால் நோயாளி பீதியடைந்துவிடுவார்.

நான் கூறியது போல அமைக்கப்பட்ட சில கேள்விகளைப் பார்ப்போம். இங்குள்ளது உதாரணம்தான். சூழலுக்கு ஏற்ப தகவல்களுக்கு பொருத்தமாக கேள்விகளை மாற்றிக்கொள்வது மருத்துவரின் சமயோசித சாமர்த்தியம்.

 

எதனால்  வலி ஏற்பட்டது, இப்போது பரவாயில்லையா?

வலியின் அளவை ஒன்றிலிருந்து பத்து என்ற எண்ணிற்குள் அளவிடக் கூறலாம். வலியின் இயல்பை விவரிக்கச் சொல்லலாம்.

உடலின் எந்தப்பகுதியில் வலி ஏற்படுகிறது, வேறெங்காவது வலி பரவுவது போல தோன்றுகிறதா?

வலி தொடங்கி எத்தனை நாட்களாகிறது? வலி உருவானபோது என்ன செயலைச் செய்துகொண்டிருந்தீர்கள்?

இப்படி கேள்விகளைக் கொண்ட முறைக்கு பிக்யூஆர்எஸ்டி என்று பெயர். இதன்மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள வலியை எளிதாக கணித்து சிகிச்சை தரலாம்.

இதற்கடுத்து ஒரு கேள்வி கேட்கும் முறை உள்ளது இதற்கு ஏஎமபிஎல் டிஓஇ என்று பெயர். அந்த முறையில் கேட்கும் கேள்விகள் எதைப்பற்றியது என பார்ப்போம்.

ஒவ்வாமைக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பருவகாலத்தில் மருந்துகள் சாப்பிட்டால் அதையும் மருத்துவர்களுக்கு கூறவேண்டும்.

ஆஸ்டாமினோபென், இபுபுரோஃபென், கர்ப்பத்தடை மாத்திரைகள், இன்சுலின், வைட்டமின் மாத்திரைகள், சித்த, ஆயுர்வேத மாத்திரைகள் ஆகியவை பற்றி கூறவேண்டும்.

ஏற்கெனவே ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்கு மருந்து சாப்பிட்டு இருந்தால் அதையும் மருத்துவருக்கு கூறவேண்டும்.

இரவில் சாப்பிட்ட அல்லது முந்தைய வேளை சாப்பிட்ட உணவு பற்றிய தகவலைக் கூறவேண்டும்.

டெட்டனஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பது பற்றிய தகவலைக் கூறவேண்டும்.

முன்பு செய்த அறுவை சிகிச்சை பற்றிய தகவல்களைக் கூறவேண்டும்.

எங்கு வாழ்கிறார்கள், எந்த சூழலில் வேலை செய்கிறார் என்பது பற்றிய தகவல்களை கூறுவது அவசியம். அப்போதுதான் அவருக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பை எளிதாக அறியலாம்.


கருத்துகள்