அவசர சிகிச்சையில் பங்குகொள்ளும் மருத்துவரின் தகுதிகள்

 





















மருத்துவர்களின் தகுதி

தொழில் திறமை

 ஆய்வு செய்யும் இடத்தில் சுத்தம் முக்கியம். மருத்துவர், செவிலியர் என அனைவருமே நேர்த்தியாக உடை அணிந்திருப்பதோடு தங்களது அடையாள அட்டையை வெளியே தெரியும்படி வைத்திருக்க வேண்டும். மருத்துவ சேவையைக் கொடுப்பதே முக்கியம். நோயைத் தெரிந்துகொள்வது முக்கியம். நோயாளியை வைத்திருக்கும் இடத்தில் மதுரை முத்துவின் ஜோக்குகளை சொல்லி சிரித்துக்கொண்டிருக்க கூடாது.  ஒருவரை காப்பாற்ற வேண்டும் என இதயத்தால் நினைத்தால் பற்றாது. மூளையும், விரல்களும் சரியாக வேலை செய்தால்தான் அவசர சிகிச்சையில் நோயாளிகளை காப்பாற்ற முடியும். நோயாளியின் நிலையைப் பற்றி உறவினர்களுக்கு கூறும்போது முடிந்தளவு அதில் கருணையான தொனி இருப்பது அவசியம். சிறந்த மருத்துவர், நல்ல மருத்துவர் என இரு வகைகள்  உண்டு. அவசர சிகிச்சையில் நீங்கள் சிறந்த மருத்துவராக இருக்கவேண்டும்.   

நிதானம் முக்கியம்

காரை எடுத்தவுடனே நான்காவது கியரில் ஓட்ட முடியாது அல்லவா? அதேதான். நோயாளிக்கு  தரும் சிகிச்சை பற்றி உறவினர்களிடம் சரியான வகையில் மருத்துவர் அல்லது பயிற்சி மருத்துவர் பேசி புரிய வைப்பது முக்கியம். நோயாளியை அவரின் மார்பு, பிறப்புறுப்பு, இடுப்பு பகுதியில் சோதிக்கும்போது, நோயாளியின் பாலினம் சார்ந்த உறவினர் கூடவே இருந்தால் நல்லது. வழங்கும் சிகிச்சை பற்றி நிதானமாக எளிமையாக காது கேட்காத நோயாளி என்றால் சத்தமாக கூட சொல்ல தயாராக இருக்கவேண்டும்.

 

துல்லியமான முடிவு

காலில் எலும்பு முறிந்தவருக்கு கண்ணில் சோதனைகள் செய்துகொண்டிருந்தால் சிகிச்சை  தாமதமாகும். எனவே, ஒருவரை ஸ்ட்ரெசரில் வைத்து தள்ளிக்கொண்டு வரும்போதே என்ன பிரச்னை என கணித்து சிகிச்சைக்கான கட்டளைகளை சொல்லத் தொடங்கிவிடவேண்டும். ஏனெனில் அவசர சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் உடலையும் முழுமையாக சோதிப்பது கடினம்.  நோய் பற்றிய சுருக்கமான வார்த்தைகளை பயிற்சி மருத்துவர்களிடம் கூறுவது சரி. ஆனால் என்ன சிகிச்சை செய்கிறோம் என்பதை தெளிவாக நோயாளி, நோயாளியின் உறவினர் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்.

அவசரம் கூடாது

 

ஒருவர் உடலில் குறிப்பிட்ட பகுதி வலிக்கிறது என்றால் உடனே அதற்கு ஊசி போட்டு மருந்து கொடுப்போம் . அடுத்த வேலையைப் பார்ப்போம்என கிளம்பிவிடக்கூடாது. முதலில் அடிபட்ட பகுதியை ஆராய்ந்து பிறகு அதை தொந்தரவு செய்யும் இறுக்கமான உடை அல்லது நகையை, கயிறுகளை வெட்டி எறிய வேண்டும். மூட்டுகளில் அடி என்றால் அதற்கு மேல் உள்ள பகுதியை மெல்ல தளர்த்தி சோதித்து பார்க்க வேண்டும்.

அறிவிப்பு

நோயாளி பற்றி ஏதேனும் ஆய்வு செய்து கண்டுபிடித்தால் அதை உடனே நோயாளியின் உறவினர்களிடம் கூறவேண்டும். அப்போதுதான், நோயாளியின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள  மேம்பாடுகளைப் பற்றி அவர்களுக்கும் தெரியும். அடுத்தகட்ட முயற்சிகளுக்கு எளிதாக மருத்துவர் செல்ல முடியும்.  சிலர் ஏற்கெனவே சில மருத்துவர்களிடம் நோய் பற்றி கருத்துக்களைக் கேட்டுக்கொண்டு வந்திருப்பார்கள். அதையும் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.

இறுதியான முடிவு

ஆய்வுகளை மேலோட்டமாக பார்த்து உடனே எந்த முடிவுக்கு வந்துவிடமுடியாது. இன்று நிறைய பெண்கள் குடும்ப வன்முறை காரணமாக மருத்துவமனைக்கு சென்று வருகிறார்கள். அவர்களின் உடல் காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைப் பார்த்து மருத்துவர் அறிக்கை கொடுத்தால்தான் வன்முறையான நபரை காவல்துறையினர் பிடிக்க முடியும். எனவே காயங்கள் பற்றிய மருத்துவரின் கருத்து முக்கியமானது.

  வைட்டல் சைன்ஸ் பற்றி பார்ப்போம்.

ஒருவருக்கு வாயில் மூச்சு விடும் இயல்பு இருந்தால், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு உடல் வெப்பநிலையை சரியாக கவனிப்பது முக்கியம்.

இதயத்துடிப்பு

ஆக்சிஜன் அடர்த்தி, மூச்சு துடிப்பு

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்த அளவு சோதிக்கப்படுவது அவசியம்.

வலி அளவுகோல் எந்தளவு உள்ளது என்பதைக் கேட்கவேண்டும்.

பார்வைத்திறன், உணர்திறன், நினைவுத்திறன் ஆகியவற்றை சோதிக்க வேண்டும்.

கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்களின் இதயத்துடிப்பை சோதித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

செயற்கையாக சுவாசம் கொடுத்தவர்களுக்கு கார்பன் டை ஆக்சைடு வெளியாவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒருவர் நினைவோடு இருக்கிறாரா அல்லது நினைவிழந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

ஆய்வக சோதனைகள்

பெரும்பாலும் அவசர சிகிச்சை வார்டுகள் இப்போது நவீனமாக மாறிவிட்டன. அதனால் நோயாளியின் உயிரை எளிதாக காப்பாற்றி விட முடியுமா என்று கேட்க கூடாது. காப்பாற்ற வாய்ப்புள்ளது. திறமையுள்ள மருத்துவர் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டுமே?

நோயாளியை ஆம்புலன்சில் இருந்து கொண்டு வந்து மருத்துவமனை வார்டில் உள்ள படுகைக்கு மாற்றியவுடனே அருகிலேயே பாய்ன்ட் ஆப் கேர் என்று சொல்லும் நிறைய ஆய்வுக் கருவிகள் வந்துவிட்டன. மருத்துவர் செய்யவேண்டியதெல்லாம் எதை எப்போது செய்யலாம் என்று முடிவு எடுத்து செவிலியர்களுக்கு உத்தரவிட வேண்டியதுதான். ரத்த சோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே என்பதெல்லாம் ஆய்வக சோதனைகளுக்குள்தான் வரும்.

இசிஜி எலக்ட்ரோ கார்டியோகிராபி

ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது மருத்துவமனையில் அதை தீர்ப்பதற்கான மருந்து கொடுக்கிறார்கள். அப்போதைக்கு சரியாகிவிடுகிறது. ஆனால் மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி வருகிறது. இப்போது என்ன செய்வது?  அதற்குத்தான் இதயத்துடிப்பை கணிக்க இசிஜி உதவுகிறது. பலவீனம், சோர்வு, வயிற்றுவலி, முதுகுவலி, மனநிலை ஒருவருக்கு மாறிக்கொண்டே இருக்கிறது என அறிகுறி காட்டினால் நீங்கள் அவருக்கு இசிஜி செய்வது முக்கியம்.

அவசர சிகிச்சை விதி – பொது

அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஒருவர் வந்ததும் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம். பிறகு, அவர் நோயுற்றவரா, இல்லையா, சமநிலையாக உள்ளாரா, இல்லையா என்பதை கணிக்க வேண்டும். அதைப்பொறுத்து அவருக்கான சிகிச்சைகளை உருவாக்க வேண்டும். ஒருவரின் மூச்சு, ரத்த வோட்டம், நினைவுத்திறன் ஆகியவற்றை செவிலியர் அல்லது பயிற்சி மருத்துவர் கவனிக்க வேண்டும். அடுத்து இன்னொருவர் நோயாளிக்கு சலைன் பாட்டில் ஏற்றுவதோடு, அவருடைய உடலின் இயக்கங்களை கவனிக்கும் மருத்துவ உபகரணங்களை உடலில் பொருத்தவேண்டும்.


கருத்துகள்