வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் கல்வியை பெறும் வழி- லைப் அகேட் -ஜேகே

 








லைப் அகேட்
ஜே.கிருஷ்ணமூர்த்தி
ஜேகே பவுண்டேஷன்
ரூ.230
ஆங்கிலம்



கல்வி பற்றிய ஜே கேவின் எழுத்தில் வெளியான நூல் இது. நூலில் கல்வி கற்பவர் எப்படி இருக்கவேண்டும், கற்பிப்பவர் எப்படி தன்னை கற்பித்தலுக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என பலவற்றையும் கூறுகிறார்.

நூலில் பல்வேறு அத்தியாயங்களிலும் ஜேகே சொல்லுவது நிர்பந்தங்களால் மாணவர்களுக்கு மனதில் ஏற்படும் பயம் பற்றியதே. பிறகு இதற்கு அடுத்த இடத்தை பெற்றோரின் குறிக்கோள்கள் பிடித்துக்கொள்கின்றன. இவற்றையெலாம் கடந்த எப்படி ஒரு விஷயத்தை உணர்வது, பார்ப்பது, புரிந்துகொள்வது, கல்வி முறை எப்படி அமையவேண்டும் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.

ஒருவர் தனக்குப் பிடித்தது போல வாழ்வதே நல்லது. பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப வாழ்ந்தால் அதுவே வாழ்க்கையில் பெரிய சாபமாக மாறிவிடும் என அதற்கான காரண காரியங்களை விளக்கியிருப்பது முக்கியமானது. இன்று ஒருவரை சிறுவயது முதலே சாதனை, வீடியோ, இணையம் என பல்வேறு வகைகளில்  எதையாவது செய்யவேண்டுமென முடுக்குகிறார்கள். நிர்பந்தம் செய்கிறார்கள். இதனால் பாட்டு, நடனம், இசை என பிடிக்கிறதோ இல்லையோ பிள்ளைகள் சென்று வருகிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் அவர்களுக்கு பிடித்த விஷயமென்று ஏதாவது இருக்குமோ என்று ஜேகே சொல்லுகிறார்.

பெற்றோரை இறுதிக்காலத்தில் கவனிப்பது உங்கள் கடமைதான். ஆனால் அதற்காக பிடிக்காத வேலை ஒன்றை செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்த மனம் விரும்பும் வேலையைச் செய்யுங்கள். அதில் கிடைக்கும் பணத்தை பெற்றோருக்கு செலவிடுங்கள் என்று சொல்லுகிறார். நூலில் அனைத்து அத்தியாயங்களிலும் சில கேள்விகளை பார்வையாளர்கள் கேட்கிறார்கள். இவை பெரும்பாலும் கடவுள் உண்டா, இல்லையா, பெற்றோரின் கடமை, வேலை, மனதில் ஏற்படும் மகிழ்ச்சி, உதவி செய்வது தேவையா, அதில் கிடைக்கும் பயன்கள், தினசரி செய்யும் சிலவகை பழக்கங்கள், குறிக்கோள், கடவுள் நம்பிக்கை, பகுத்தறிவு வாதி, மதம், அரசின் செயல்பாடு, மதவாத நிறுவனங்கள், அமைப்பு என பலவற்றைப் பற்றியும் ஜேகே ஆழமான முறையில் விளக்கம் கொடுத்து பேசுகிறார்.

இவற்றை வாசிப்பவர்கள் தாம் இதுவரை செய்து வந்த செயல்பாடுகள் எப்படியோ, இனிமேல் தங்களை வேறுவிதமாக மாற்றிக்கொண்டு செயல்பட குறைந்தபட்சம் யோசிக்கவேணும் வாய்ப்பு உள்ளது.  பயமின்றி, பதற்றம் இன்றி உலகின் சவால்களை சந்திக்க குழந்தைகளை எப்படி தயார்படுத்த வேண்டும் என்பதை அறிய பெற்றோருக்கு நூல் உதவும்.

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்