மதமும், மாந்த்ரீகமும் மனிதர்களை வேட்டையாடியபோது....










அசுரகுலம் -

ரத்தசாட்சி 






நிறைய கொலைகளை செய்ய திட்டமிட்டுள்ள தொடர் கொலைகாரர், நான்கு இடங்களையாவது தேர்வு செய்து கொல்வார்.  உள்ளூர், வெளியூர் என இடங்கள் மாறுபடுவது உண்டு. செய்யும் கொலைகளுக்கான இடைவெளி என்பது மெல்லல குறையும். இது கொலை செய்வதன் மகிழ்ச்சி காரணமாக ஏற்படுவது. மகிழ்ச்சியும் அதிகம் கிடைக்கவேண்டுமென்பது அழுத்தமாக மாறும்போது கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொலை செய்வதற்கான இடைவெளி இருக்கிறதென்றால், கொலைகாரர் நேரம், தயாரிப்பு, திட்டமிடல் ஆகியவற்றை செய்துகொண்டிருக்கிறார் என உறுதியாக கூறலாம்.

கொலை செய்யும் தொடர் கொலைகாரர்களுக்கு நோக்கம் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். கொலை செய்தால் மனது சந்தோஷமாக இருக்கிறது என ஒருவர் சொன்னால் அவரை நீங்கள் என்ன சொல்வீர்கள்? புணர்ச்சி, திருட்டு, கொள்ளை என லட்சியத்திற்காக மனிதர்களை கொல்பவர்களே அதிகம்.

முதல் சீரியல் கொலைகாரர் யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வந்திருக்கும். இங்கிலாந்தில் மக்களை இரவில் தெருவிறங்கி நடக்கவே யோசிக்கவைத்த கொலையாளி  ஜேக் தி ரிப்பர்.ஆறு வாரங்களில் நான்கு கொலைகளை செய்து உலக ஊடகங்களை லண்டனின் ஒயிட்சாப்பல் பகுதியை நோக்கி திரும்ப வைத்தார் ஜாக்.

கி.மு. 54இல் தொடர் கொலைகாரர் உருவாகிவிட்டார். அவரது பெயர் லோகஸ்டா. பாலின சமநிலை காரணமாக கொலைகாரி என்று கூறாமல் கொலைகாரர் என்று கூறுகிறேன். இவர் அன்று ராணியின் செல்வாக்கான கருத்துக்கு காது கொடுத்து காசு வாங்கிக்கொண்டு பேரரசர் கிளாடியசிற்கு விஷம் கொடுத்தார். அவர் பரலோகம் சேர்ந்தபிறகு, ராணியின் விருப்பத்திற்குரிய மகன் நீரோ பேரரசரானார். அவரும் லோகஸ்டாவிற்கு நன்றிக்கடனாக தனது விஷ| வியாபாரத்தை செய்ய அனுமதித்தார். ஆனால் அதற்குள் லோகஸ்டா பற்றி நிறைய விஷயங்கள் மக்களுக்கு தெரிய வந்துவிட்டன. நீரோ மன்னர் இறந்துபோனதும் லோகஸ்டாவுக்ககு தூக்கு தண்டனை விதித்து கொன்றனர்.

இதற்குப்பிறகு பிரான்சில் கில்லெஸ் டி ரெய்ஸ் என்ற மந்திர தாந்த்ரீகத்தில் பேராசை கொண்ட மனிதர் வந்தார். பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதி. செல்வச்செழிப்பான ஜமீன்தார். ஜோன் ஆப் ஆர்க் கதையை பலரும் படித்திருப்பீர்கள். அந்த சிறுமி ராணுவத்தை நடத்தியதை கில்லெஸ் சாத்தியம்தான் என ஆதரித்தார். பிறகு, ஜோன் கட்டி வைத்து நெருப்பிட்டு எரிக்கப்பட்டபிறகும் கூட அந்த அதிசயத்தின் மீது கில்லெஸிற்கு ஆர்வம் குறையவில்லை. பேசிக்கொண்டிருந்தால் எப்படி பறையின் சத்தம் வெளியே கேட்கும்? அடித்துக்காட்டினால்தானே தெரியும்? எனவே, தாந்திரீக முறையில் முக்ககுளித்து எழுந்தவர், குழந்தைகளை நரபலி கொடுக்கத் தொடங்கினார். தனது பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளில் குடும்பங்களில் உள்ள சிறுவர் சிறுமிகளை பிடித்து வந்து வல்லுறவு செய்து பலி கொடுத்தார். இந்த வகையில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை பலி கொடுத்ததன், அடையாளமாக அவரது மாளிகைகளில் எலும்புகளை ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர்.

கில்லெஸின் வாரிசு போல 1560ஆம் ஆண்டு ஒரு பெண்மணி உருவானார். எர்ஸ்பெட் பாத்தோரி அவரது பெயர். இவர் கணவர், பிறரை அடித்து உதைத்து அதில் மகிழ்ச்சி பெறும் வினோதமான நபர். அவர் பாத்தோரிக்கு சித்திரவதை செய்து அதில் மகிழ்ச்சி பெறுவதை கற்றுத்தந்தார். கணவர் இறந்தபிறகு, கணவரை நினைத்து பார்க்கும் விதமாக சிறுமிகள், இளம்பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து தனது உடலுறவுக்கு பயன்படுத்தினார் பாத்தோரி. பிறகு அவர்களின் கைவிரல்களை வெட்டுவது, ரத்தத்தை தொட்டியில் விட்டு அதில் குளித்து எழுவது, செயினை கழுத்தில் கட்டி அவர்களை அடிமைகளாக்கி காமத்திற்கு பயன்படுத்துவது என பாத்தோரி செய்யாத விஷயங்கள் இல்லை. இதனால் அவர் நீதி விசாரணையில் மாட்டிக்கொண்டு தனது வீட்டில் சிறைவைக்கப்பட்டு இறந்தார்.

ஐரோப்பாவில் அறிவியலின் ஒளி பரவாத காலகட்டம். அப்போது கத்தோலிக்க மதம்தான் அங்கு ஆட்சி செய்தது. இதனால் நிறைய மூடநம்பிக்கைகள் இருந்தன. அதுவும் பணக்காரர்கள் அதை நம்பியதால், தங்களுக்கு தோன்றியதையெல்லாம் செய்தனர். மந்திரவாதி, சூனியக்காரி, ஓநாய்கள் என குற்றம்சாட்டி ஏராளமானவர்களை அரசு அதிகாரிகள் கொன்றனர். கில்லெஸ் கார்னியர் என்பவர், திருப்பால் போன்ற ஆயின்மெட்டை தனது உடலில் தடவியிருக்கிறார். பிறகு தனது உடல் அமைப்பு ஓநாய் போல மாறி வருவதாக நம்பத் தொடங்கினார். எனவே, சிறுவர் சிறுமிகளை பின்தொடர்ந்து சென்று கொன்று அவர்களின் உடலை நகம், பற்களால் கிழித்து வீட்டுக்கு கொண்டு வந்து மனைவியிடம் சமைக்க கொடுத்தார். இது ஒருவகையில் ஒரு மனிதர் தன்னை கரப்பான் பூச்சி போல நினைத்துக்கொள்ளும் மனநோய்தான். ஆனால் இதற்கான முடிவு அப்போதைக்கு உயிரோடு நெருப்பு வைத்துக் கொளுத்துவதுதான். கில்லெசும் சொக்கப்ப்பனைபோல வைத்து கொளுத்தப்பட்டார்.  நெருப்பு கொளுந்துவிட்டு எரியும் போது மனிதர்கள் பெறும் மகிழ்ச்சியை எதனாலும் அளவிடவே முடியாது. பேரானந்த நிலை.

நாம் இதை எழுதும் சூழலில்தான் இந்தியில் வருண் தவான் நடித்து பேடியா என்ற படமும் வருகிறது. அதிலும் ஓநாய் கடிப்பதால் நாயகன் எப்படி உருவம் மாறி விலங்காகிறான் என்பதே கதை.

1680ஆம் ஆண்டு பதினைந்தாம் லூயிசின் குடும்பத்தைச் சேர்ந்தவர் கேத்தரின். இவர் பாதிரியாருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை நரபலி கொடுத்து அந்த ரத்தத்தை குடித்து வந்தார். விஷம் வைப்பபது கொல்வதில் முக்கியமான நுட்பம். இந்த டிரெண்டு தொடங்கியது, 1719ஆம் ஆண்டு. மத்தியகாலகட்டம். பிரான்சில் லா டோபியானா விஷம் வைத்து 600 க்கும் மேற்பட்டவர்களை தெய்வத்தின் பாத த்தில் சேர்த்தார். ஜெர்மனியில் ஜெசினா காட்ஃபிரைட் பதிமூன்று ஆண்டுகளாக மக்களுக்கு விஷம் கொடுத்து வந்தார். நாம் இங்கு சொல்வதெல்லாம் பிறருக்கு அறிய வந்தவை. இப்படி அறிய வராமல் விஷம் வைத்து ஆப் தி ரெக்கார்டாக முடித்து வைக்கப்படும் சம்பவங்களும் நிறையவே நடந்துள்ளன. அதையெல்லாம் நாம் பதிவு செய்தால் ஜெயமோகனின் வெண்முரசு போல 26 தொகுதிகளுக்கும் மேல் எழுத வேண்டி வரும்.

அமெரிக்காவில் தொடர் கொலைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மிகாஜே, வில்லி ஹார்பே என்ற சகோதரர்கள்தான். இவர்கள் எல்ஐசி ஏஜெண்டுகள் எப்படி சொந்தக்காரர்களைக் குறிவைத்து காசு சம்பாதிக்கிறார்கள் அதேபோலத்தான் உறவுகள், அறிமுகமில்லாதவர்கள் என குறிவைத்து கொன்றார்கள். கென்டக்கி, டென்னசி பகுதிதான் இவர்களது ராஜ்யம். தங்களுக்கு பிறந்த குழந்தைகளைக் கூட கொன்றவர்கள். பிறகு அரசால் கண்டுபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள்.

நவீன அறிவியல் மதத்தால் கட்டுப்படுத்த முடியாதபடி வளர்ந்துவிட்டது. அந்த நிலை இப்போதுதான். முன்னர், நிலை பெரிதாகவெல்லாம் மாறவில்லை. அதிகாரத்திற்கு இணங்காதவர்களை இறைவனை வைத்து மண்டியிடச் செய்தது பலரும் வரலாற்றில் அறிந்த செய்திகள்தானே? அப்படி ஒரு நூல் பைபிள். அறிவியல் வளர்ந்தபோதும், உடலை ஆராய்ச்சிக்கென கொடுக்கும் அளவுக்கு மனிதர்கள் முதிர்ச்சி பெறவில்லை. இப்போதும் கூட இறந்தபிறகு உடலை சிதைப்பது என்றே ஆராய்ச்சியை பலரும் நினைக்கிறார்கள். அக்கால மருத்துவர்கள் மனித உடலை விலைக்கு வாங்கியேனும் ஆராய்ச்சி செய்து தன்னை நிபுணத்துவமாக மாற்றிக்கொள்ள துடித்தார்கள். உடல் எங்கே கிடைக்கும்? நேராக கிடைக்கும் பதில் சுடுகாடு. இதை வியாபாரமாக மாற்றி மருத்துவர்களுக்கு உடலை நிறையபேர் விற்றனர். 

சிலர் சுடச்சுட உடல் என மக்களைக் கொன்றுகூட மருத்துவர்களுக்கு உடலைக் கொடுத்தனர். வில்லியம் பர்கே, வில்லியம் ஹரே ஆகியோர் இப்படித்தான் தங்கள் வணிகத்தைச் செய்தனர். யாராவது ஒருவருக்கு மதுபானத்தை தொண்டை வரை ஊற்றி பிறகு அவரது கழுத்து நெரித்து, மூச்சுதிணறச்செய்து கொன்று உடலை மருத்துவர்களுக்கு விற்றனர். ஒன்பது மாதங்களில் பதினாறு பேர்களை கொன்று சம்பாதித்தனர். 1828ஆம் ஆண்டு உடலை மருத்துவரிடம் விற்க செல்லும்போது மாட்டிக்கொண்டனர். 

 

 

 

 

 

 

 

கருத்துகள்