சொத்துக்காக சிறுமியின் உயிரைப் பறிக்க காஷ்மோரா பூதத்தை ஏவும் கும்பல்! துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

 









துளசிதளம் 
எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழில் கௌரி கிருபானந்தன்
அல்லயன்ஸ் 

துளசிதளம் நாவல் தலைப்பை அறிந்தவுடன் கோட்டயம் புஷ்பநாத் நாவல் போல இருக்குமோ என யாருமே நினைக்கலாம். ஆனால் உண்மையில் கதை அப்படி அமையவில்லை. 

ஶ்ரீதர், சாரதா, துளசி, அனிதா, நாராயணன் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. துளசி என்ற ஶ்ரீதர் - சாரதா தம்பதிக்கு பிறக்கும் மகளுக்கு ஶ்ரீதரின் நிறுவன முதலாளி சொத்துக்களை எழுதி வைக்கிறார். இந்த சொத்து துளசிக்கு பத்து வயது ஆனபிறகு  கிடைக்கும். அப்படி அவள் பத்து வயதுக்குள் இறந்துவிட்டால், சொத்து கிருஷ்ணா என்ற ஆசிரமத்திற்கு கிடைக்கும். சொத்துக்காக ஆசிரம தலைவர் செய்யும் அதீத செயல்பாடுகளும் அதற்கான எதிர்வினையாக ஶ்ரீதர், அவரின் நண்பர் நம்பூதிரி, வழக்குரைஞர் லட்சுமிபதி, மருத்துவர் பார்த்தசாரி, ஹிப்னாட்டிச பேராசிரியர் ஆகியோர் என்ற செய்கிறார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி. 

நாவலில் எண்டமூரி வீரேந்திர நாத்தின் புத்திசாலித்தனத்தை எங்கு வியக்கிறோம் என்றால் அது நூலின் இறுதிப்பகுதியில்தான்.அதில் காஷ்மோரா பூதம் அதிருப்தியடைந்து துளசியை விட்டுவிட்டதா, அவளைக் கொல்லும் முயற்சியை ஹிப்னாட்டிச பேராசிரியர் தாயத்தை அகற்றி தடுத்தாரா, மருத்துவர் பார்த்தசாரதி துளசிக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினாரா என மூன்று நோக்கிலும் பதில்கள் உண்டு. இதில் வாசகர்கள் தங்களுக்கு எது ஏற்போ அதை ஏற்றுக்கொள்ளலாம். அதற்கான வாய்ப்பை அவர் ஏற்படுத்தி தந்திருக்கிறார். 

இத்தனைக்கும் நூலின் முன்னுரையில் ஆசிரியர் சூனியம் வைத்த மந்திரவாதியை பார்த்து அதனால் நிறைய பிரச்னைகளை சந்தித்து இருக்கிறார். ஆனாலும் கதையாக எழும்போது முழுக்க அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என சாயாமல் நடுநிலை பிடித்து கதை எழுதியிருக்கிறார். நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பெரிய வித்யாசம் ஏதும் தெரியாது. 

நூலில் இறை நம்பிக்கை கொண்ட பாத்திரங்களோடு, பகுத்தறிவு கொண்ட பாத்திரங்களும் உண்டு. ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. குறிப்பாக ஶ்ரீதர் மட்டுமே சாரதா, தங்கை அனிதா ஆகியோரோடு போராடுகிறான். நாராயணனுக்கு பேச்சு வராது. அவன் மாமாவின் தங்கையான அனிதாவை மனதிற்குள் விரும்புகிற ஆள். அவளின் இறப்பு, அவனது வாழ்க்கையை நொறுக்கிப் போடுகிறது. 

நாவலில் ஆசிரியர் ஒடிஷாவில் உள்ள பிஸ்தா என்ற கிராமத்தில் சூனியம், ஏவல், பில்லி சூனியம் வைப்பதாக காட்டுவதோடு எப்படி பூதம், ஏவலை ஏவி விடுவது என்பதையும் விவரித்துள்ளார். அதனால் துளசி படும் வேதனையை பார்க்கும்போது வாசகர்களும் அதே துயரத்தை மனதளவில் படுவார்கள். அந்தளவு விவரிப்பாக எழுதியுள்ளார் எண்டமூரி. 

சரஸ்வதி என்பவரை சாரதா வீட்டுக்குள் ஏற்கும் இடம் நாவலில் பொருத்தமாக இல்லை. அதோடு மாரி அனிதாவை எளிதாக அணுகி அவளை ஏமாற்றுவதும் இப்படியுமா ஶ்ரீதர், சாரதா தனது குடும்பத்தை கவனிக்கிறார்கள் என ஆச்சரியமாக இருக்கிறது. சரஸ்வதி, மாரி, சுவாமியைக் கடந்து இன்னொரு ட்விஸ்டாக இறுதியில் தெரிய வரும் நிழல் போன்ற இன்னொரு நபர்தான் ஆச்சரியம் தருபவர். அதையும் இறுதிவரை சிறப்பாக கையாண்டு படிப்பவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். 

அறிவியலும் பகுத்தறிவும் அவசியம் தேவை என ஆசிரியர் கூறியிருக்கிறார். ஆனாலும் காஷ்மோர பூதத்தின் பலத்தை சொல்ல அதிக பக்கங்கள் எடுத்துக்கொண்டதால், அறிவியலை சொன்னாலும் பலருக்கும் மனதில் பதிவு கடினம்.  


சித்திரவதை காவியம் 


கோமாளிமேடை டீம் 










கருத்துகள்