இந்திரா நகர் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட ஆதி திராவிடர் தெரு - அனுசுயாவின் சுயமரியாதை முயற்சி

 













பெயர் மாற்றம் ஏற்படுத்தும் சமூக மாற்றம்!



ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்கள் நாளிதழ்களில் படிக்க எப்படி இருந்தாலும்  அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? சமூக அந்தஸ்து சார்ந்து பார்க்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை வகுப்பறையில் அல்லது பொது இடங்களில், அரசு அலுவலகங்களில் கூறப்படும்போது தர்மசங்கடமாக உணர்வு எழக்கூடும். அதனால்தான் தலித்துகள் தங்கள் பெயர்களை நாகரிகமாக வைத்துக்கொள்வதோடு சாதியையும் வெளியே தெரிவிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.

கல்வி கற்பவர்கள் பொருளாதார ரீதியாகவும் உயர்ந்தபிறகு தங்கள் சமூகம் சார்ந்து பாடுபடுவது குறைவு. பெரும்பாலும் சாய்பாபா, ஐயப்பன் கோவில், மூகாம்பிகை கோவில் என சம்பாதித்த பணத்தைக் கொடுத்து தனது  அந்தஸ்தை மேல்சாதிக்கு இணையாக வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அப்படியல்லாமல் தான் சார்ந்த சமூகம், இனக்குழு சார்ந்து கவலைப்படுபவர்கள் தங்களால் முயன்ற செயல்களை செய்து வருகிறார்கள். அப்படி செயல்பட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அனுசுயா. நாகர்கோவில் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், ஹைதராபாத்திலுள்ள  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தலித்தான அனுசுயா சிறுவயதில் தீண்டாமையை உணர்ந்திருக்கிறார். தாழ்ந்த ஜாதிகள் யாவருமே பள்ளி செல்லும் காலத்தில் தான் எந்த சாதி என்பதை தெரிந்து கொள்ளாமல் வளருவதில்லை. அப்படி மேல்சாதி நண்பர்களின் வீட்டிற்கு செல்லும்போது அனுமதி கிடைக்காமல் வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட நிதர்சனத்தை அனுசுயா அனுபவத்திருக்கிறார். அனுசுயாவின் தெருவின் பெயர் ஆதி திராவிடர் தெரு. அரியலூரில் உள்ள ஆனந்தவாடி கிராமம்தான் அனுசுயாவின் பூர்வீகம்.

அனுசுயாவின் தெருவைச் சேர்ந்த மக்களை அவர்கள் வாழ்ந்த தெருவின் பெயரை சொல்லி அடையாளம் காட்டுவதே வழக்கம். ஆனால் இந்த முறையால், மக்கள் சொல்லமுடியாத அவமானத்தை அடைந்து வந்தனர். இதனால் அனுசுயா, தெருவிலுள்ள தனது சமுதாய மக்களிடம் பேசி தெருவின் பெயரை மாற்றுவது என தீர்மானித்தார். இதனால் அனைவரும் பேசி இந்திரா நகர் என்ற பெயரை முடிவு செய்தனர். பிறகு இதுபற்றி மனு ஒன்றை எழுதி அதில் தெரு மக்கள் கையொப்பமிட்டனர். பிறகு அதை அனுசுயா மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார். இக்கோரிக்கை மனுவை ஏற்ற மாவட்ட ஆட்சியர். அனுசுயாவின் மக்கள் வாழ்ந்த ஆதி திராவிடர் தெருவை இந்திரா நகர் என மாற்ற ஆணையிட்டார்.

இதன் காரணமாக இனிமேல் அரசு ஆவணங்களிலும் இந்திரா நகர் என்ற பெயரே இடம்பெறும் நிலை உருவாகியுள்ளது. வெறும் சட்டம், அரசு ஆணை மூலம் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுவிடாது. மக்களின் மனநிலையில் ஏற்படும் சாதி குறித்த இழிவு மட்டுமே தலித்துகளுக்கு உதவும். எதிர்காலத்தில் அந்த நிலைய நோக்கி ஆனந்தவாடி கிராமம் முன்னேறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 6.11.2022

 ராம்லட்சுமி சம்பத்

image pixabay

கருத்துகள்