தடைபடாத காலம்: முடிவில்லாத தன்மையும் ஒருநாளும் - தியோ ஏஞ்சலோ பவுலோஸ்








குழந்தைகளுக்கு கூட தாமாக எங்கும் வெளியே செல்வதற்கு நாம் அவர்களை அனுமதிப்பது இல்லையே?

      அதேதான். குறிப்பிட்ட வடிவிலமைந்த கல்வித்திட்டம் நாம் வாழ்க்கையுடன் பொருந்திப்போகும் தன்மையை அழித்துவிடுகிறது. மாறுதல்களை ஏற்காதவர்களாக மாறிவிட்டோம். வளைந்து கொடுக்காத அத்தன்மையிலேதான் முழு வாழ்க்கையும் நடைபெறுகிறது. நாம் இந்த தவறான முறைகள் மற்றும் தவறான சுய பாதுகாப்பு முறைகளை எதிர்த்து போரிட வேண்டியுள்ளது.

      என்னுடைய குழந்தைப்பருவம், என்னுடைய இளமைப்பருவம் என பல்வேறு உடைகளை நம்மேல் போட்டுக்கொள்கிறோம். ஆன்மாவின் மேல் உள்ள இந்த உடைகளை கழற்றி எறிய நமக்கு அதிகளவு நேரம் தேவைப்படுகிறது. நம்மிடம் வரும் விஷயங்களை அறியக்கூட நமக்கு நேரமிருப்பதில்லை. உண்மையிலே மதிப்பு மிகுந்த முக்கியமான விஷயங்கள் இந்த வகையில் உங்களை விட்டு வெளியேறுகின்றன.

நீங்கள் கூறிய மூன்று வார்த்தைகளில் முதலாவது, கனிவோடு கூடிய தாயின் அன்பு பற்றியது; இரண்டாவது, வாழ்வில் அகதியாக தன்னைக் கருதும் ஒருவரைக் குறித்தது. மூன்றாவதாக கூறும் அர்ஹதனி யின் பொருளான மிக தாமதமான இரவு என்பது எதனைக் குறிக்கிறது?

      முதலாவது வார்த்தையான காதல், நெருக்கம், மிக நெருக்கமான உறவு, பந்தம் என்பது அம்மாவுடனோ அல்லது காதலியுடனோ இருக்க முடியும். இரண்டாவது வார்த்தை வாழ்க்கையின் கடினமான ஒரு பகுதி பற்றிப் பேசுகிறது. மூன்றாவது வார்த்தை வெளிப்படுத்தும் பொருள் குறிப்பது நேரத்தைத்தான்.

நமது எதிரியாக..?

      என்னுடைய படத்தில் காலம்தான் முக்கியமான மையமாக உள்ளது. ஹெராகிலிட்டோஸ் கூறுவார்: காலம் என்பது என்ன? கடலின் முனைப்பகுதியில் நின்று நீர்க்குமிழிகளுடன் விளையாடும் குழந்தையைப் போன்றது என்பார். அர்ஹதினி என்பதன் அர்த்தம் காலம் கடந்துவிட, சிறுவனை சந்திப்பதற்கான வாய்ப்பு பிறகு வருகிறது என்கிற உண்மை இதில் முக்கியமானது ஆகும். மேலும் இந்த வார்த்தை சிறுவனிடமிருந்தே உருவாகி வருகிறது. மனிதனின் அனுபவங்களாக கணக்கிலெடுத்தால் அவை மிகச்சிறியனவே. (டெஸ் ப்ரேவ் ரீகன்ட்ரெஸ்) அவர் சந்தித்த கடைசி உண்மையான (லா ஸ்யூலே வ்ரெய்யே ரென்கான்ட்ரே) தவிர.

அது இப்போது அவனிடம் இறுதியாக மிகவும் தாமதமாக வருகிறது?

      ஆமாம். மிகவும் தாமதமாக வந்து சேர்கிறது. காரணம் அவர்கள் இருவரும் கிளம்பிவிடுகிறார்கள். சிறுவன் ஒரு கன்டெய்னர் வண்டியில் ஏறி அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள செல்லும் முயற்சியில் அவன் தனது விடைபெறுதலைக் கூறுகிறான்.

படத்தின் முடிவில் அவன் இறந்துவிடுகிறானா?

      இல்லை. இல்லை. அவன் மருத்துவமனைக்குள் நுழைகிறான். ஆனால் அதனுள்ளே செல்ல மறுக்கிறான். சாதாரண முறையில் நிகழும் முடிவை அவன் இம்முறையில் மறுத்துவிடுகிறான்.

உங்களது படங்களை ஒன்றன்பின்னாக பார்க்கும்போது அதில் பொதுவாக காணப்படுவது நம்பிக்கையற்ற நிலையின் அடர்த்தியான தன்மையா? அல்லது அதற்கு முரணான விஷயங்களா?

      முரண்பாடுகளின் பரிணாம வளர்ச்சி நிச்சயம் நம்பிக்கையற்ற தன்மைக்குள் உள்ளே செல்வதில்லை என்றே கருதுகிறேன். என் படத்து கதாபாத்திரங்கள் தமக்குள்ளே செல்லும் பயணத்தினை பகுத்தறிவின் காரணமான விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவனது நிலைப்பாட்டில் பலரும் கரைந்துபோகும் திசையில் முதல் முறையாக அவன் செல்ல மறுத்துவிடுகிறான்.

எப்படியாயினும் தனிப்பட்டவர்களை சாடுவது போல சமூகத்தினை நீங்கள் சாடுவதில்லை அல்லவா?

      நீங்கள் அரசியலைக் குறிப்பிடுகிறீர்களா? இயல்பிற்கு மாறான சாதாரணமாக கொள்ளமுடியாத கணக்கிட முடியாத பல விஷயங்களுடன் சுயம் தொடர்ந்து போரிட்டுக்கொண்டே இருக்கிறது. தனிப்பட்ட ஒருவர் வாழ்க்கையில் மாயை போல் உருவாக்கப்பட்டு இருக்கும் அர்த்தம், இலக்கு என்பதோடு தொடர்ந்து போராட வேண்டியதாக உள்ளது. ஆனால் உண்மையில் இதற்கு எந்த அர்த்தமுமில்லை. பயன்பாடு என்பதும் இல்லை. வாழ்க்கையில் அதற்கேயான போராட்டம் என்பது ஒன்றுண்டு. அரசியல் மற்றும் அது தொடர்பான கருத்துக்களுடன் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. நான் அவற்றைப் புரிந்துகொள்வதை நிறுத்திவிட்டேன்.

படத்தினை உருவாக்குவது என்பது உங்களைப் பொறுத்தவரையில் அது ஒரு கவிதையின் வடிவம் என்பதாக கருதுகிறீர்களா? ‘சினிமா டி போஸியாஎன பசோலினியும்சினிமா டி ப்ரோஸாஎன அன்டோனியோனி கூறியதையும் கூட இதற்கு ஒப்புமைப்படுத்தலாம். மேலும் இலக்கியம் கவிதை மீதான தீவிரம்கொண்டவராக உள்ளதை நான் கவனித்திருக்கிறேன்.

      இது மிகவும் பெரிய கேள்வி. நான் விரும்புகிற வகையில் படங்களை உருவாக்குகிற வகையில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்று எளிமையாக கூறலாம். நான் உருவாக்கிய விஷயங்களோடு எனக்கு என்ன உறவிருக்கிறது என்றால், அவற்றில் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. படத்திற்கு செய்த முதலீட்டைக்கூடத்தான்(படத்திற்கான நிதி கிடைப்பது என்பது ஒரு நாடகம் போன்றது). விமர்சகர்கள், திரைப்பட விழாக்கள் என யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

      படத்தினை திரையிடும் விளையாட்டை விளையாட நான் ஒப்புக்கொண்டாலும் அது எனக்கு ஆர்வமூட்டுவதில்லை. எது என்னுடைய படைப்புகளுடனான எனது உறவு மற்றும் அதன் வெளிப்பாட்டுத்தன்மைகளுடன் வலுவான தொடர்பினை ஏற்படுத்தி மேம்படுத்துகிறது? எனது வாழ்க்கையில் நான் கண்டடைந்தவற்றை மிகச்சில வார்த்தைகள் வெளிப்படுத்திவிடுகின்றன. நான் இல்லாதபோதும் என்னை நினைவுபடுத்தியபடி அவை நிற்கும்.

படத்தினை யாருக்காக உருவாக்குகிறீர்கள்?

      போர்ஹேய்ஸ் கூறிய கருத்து ஒன்றினை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். ‘‘நான் எழுதுவது எனக்காகவும் எனது நண்பர்களுக்காகவும்தான் அவர்கள் குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். அவர்கள் காலத்தை கடக்க இவ்வெழுத்துகள் உதவுகிறது.’’

தியோ ஏஞ்சலோ பவுலோஸ் நேர்காணல்களில் 14 வது அத்தியாயம் நிறைவு பெறுகிறது.