ண்டைக்காரன் சிந்தனைகள் வர்ஷன் 3.0
  • ஈரோட்டான்

   சிறந்த செவ்வியல் தன்மை ஆக்கங்களின் கவனிப்பு கொண்ட வாசகர்களின் உளப்பாங்கினை உரமேற்றும் இந்த எழுத்துக்கள் இந்திய இலக்கிய உலகில் அரிதாக நிகழும் ஒரு அதிசயமென இதனை வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்ளமுடியும்.


 எலிப்புழுக்கை காயுதுன்னா எலி ஸ்டே வாட்?

பத்திரிக்கையில் வேலைக்கு சேர்வதற்கான முயற்சியில் சற்றும் மனம் தளராத நிக்கிற மாதித்தனாக ‘கிளப்ஸ் டுடே’ பத்திரிக்கைக்கு தொடர்பு கொண்டேன். காதே செவிடாகி அவிந்ததோ என பயப்படும்படி நடிகர்திலகம் பாவனையில் டிஎம்.எஸ் எட்டு கட்டையில் இந்தியநாடு எனப்பாட அடிவயிற்றில் உஷ்ணபேதிக்கான அறிகுறிகள் சடுதியில் உருவாகின. நான் கேட்கிறேன் உங்களுக்கு பிடித்த பாட்டை நீங்கள் கேட்டால் சரி. அடுத்தவரையும் கேட்கவைப்பது காது தாண்டிய பயங்கரவாதம் இல்லையா? ஏம்ப்பா..ஏய் இதெல்லாம் பாட்டா? இல்லை நூல்மில்லில் ஊதுகிற சங்கா? பெரிய வேறுபாடுகளெல்லாம் இல்லை.
  கடுமையான வேலைபளுவில் இருந்துவிட்டாற்போலும். வாழ்வின் ஆயாசம் என் காதருகே கேட்டது.
‘’ம் யாரு ஆவ்… ம்.. சொல்லுங்க…ஹாவ்வ்வ்…வ்(ஆயாசத்தால் அயர்ந்துவிட்டார்).கூட மூன்று ஆவ்.
‘’சார் நிருபர்,எழுத்தாளர் வேலைக்கு ஆள் வேணும்னு….உங்க பத்திரிக்கையில….’’
‘’அப்டியா? லேண்ட்லைன் நம்பர்ல பண்றீங்களா? அழைப்பு நிறைந்தது.
முப்பத்தி ஆறு பக்கம் கொண்ட இந்த புத்தகம் பதினைந்துரூபாயாம். சேவைச்செய்திகள் மட்டுமே கொண்ட இந்த இதழ் எப்படி விற்கிறதோ? நூலக பேரொளிகள் கட்டுரை எழுதினால் அதைப்போட்டுத்தான் பத்திரிக்கை ஓடுகிறது. கிளப்ஸ் டுடே ஹாலிடே இல்லாமல் ஓடுவதே கட்டுரை எழுதி புகைப்படத்துடன் அனுப்பும் கண்மணிகளால்தான். வேலை செய்வது பிரச்சனையில்லை. ஆனால் சம்பளம்!!! அதைத்தானே நாசூக்காக சேவைஉள்ளமும் அர்ப்பணிப்பும் என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி நாம் உழைத்தால்தானே பத்திரிக்கை முதலாளி சம்பாதிக்கமுடியும்!. அதிலும் பகுத்தறிவு பிதாமகர்களின் பத்திரிக்கையில் இன்னும் திடுக்கிடும் திருப்பங்கள் எல்லாம் உண்டு. மர்மநாவலின் இறுதிப்பக்கம் காணாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்? மாத இறுதியில் பத்திரிக்கையாளனின் வாழ்வும் அதேதான்.

                                     புத்தகம்பேசுது
அகிரா-சுயசரிதம்   

அகிரா குரோசவா வின் சுயசரிதம் படித்தேன்.ஆங்கிலம் வழி தமிழில்,இளையபாரதி மற்றும் மு.நடராஜன்.புதுமைப்பித்தன் பதிப்பகம் 150ரூபாய். அவரது சிறுவயது அனுபவங்களிலிருந்து தொடங்கினாலும் பல விஷயங்கள் முன்னும் பின்னுமாக திரைப்படத்தின் காட்சிபோலவே பயணிக்கிறது படிக்க படிக்க காட்சிகளாகவும் விரியும் அற்புதத்தை நிகழ்த்துகிறது. பிம்பங்களைக்காட்சி படுத்தும் இயக்குநர்களுக்கு தங்கள் முன்னோடியாக கருதும் அகிராவை வாசிப்பது கற்பது போலத்தான். இதில் தன் வாழ்வைக்கூறியிருந்தபோதும் திரைப்படத்திற்கான பல விஷயங்களையும் பிரிக்கமுடியாது என்று கூறியே எழுதியுமிருக்கிறார். சிறுவயதில் படிப்பின் மீதிருந்த பயம், குறைபாடுகள், சகோதரரின் பரிவு, மரபின் மீதான கடும் பற்று கொண்ட தந்தை, எதையும் தாங்கிக்கொள்ளும் தாயின் அன்பான தன்மை, டோஹா ஸ்டூடியோ, குரு யமாசான் அறிமுகம்,உதவிஇயக்குநராக உழைப்பு, திருமணம், மதுஅருந்த திரைக்கதை எழுதியது, என பல விஷயங்களையும் நேர்மையாக பதிவுசெய்யும் எழுத்து வாசிக்கும் யாரையும் அகிராவின் திரைப்படங்களைப் பார்க்க பெரும் உந்துதலைத்தரும் என்பது வியப்பானதல்ல. திரைப்படத்திற்கான திரைக்கதை ஒரு நூலாக இருந்தபோதிலும் அதன் காட்சிஉருவாக்கம் செழுமையாக்கம் போன்றவற்றைச் செய்ய தன் வாழ்வில் கண்ட அனுபவங்களையே பயன்படுத்தியுள்ளார். ஒரு படம் வெற்றி பெற்றால் அதை இரண்டாம் பாகம் எடுக்கும் செயலை தான் செய்தபோதும் அது தனக்கு பிடிக்காத ஒன்று; அப்படிச்செய்ய அவசியமில்லை. அது சிறந்த ஒன்றல்ல எனக்கூறியுள்ளது பாஸ்ட் பார்வர்டு  இயக்குநர்களுக்கு புரியுமோ என்னவோ?
பல்வேறு இலக்கியங்கள் படித்தல், பல்வேறு திரைப்படங்கள் பார்ப்பது, பல்வேறு மனிதர்களுடன் பழகுவது, படிக்கும் நூல்களில் முக்கியமான கருத்துக்களை குறித்துவைப்பது என இயக்குநராக மாறியதற்கு பின்னிருக்கும் உழைப்பு சாதரணமானதல்ல என்று கூறும் அகிராவுக்கு தான் ஒரு முழுமையற்ற மனிதன் தான் தொடர்ந்து கற்றுக்கொண்டும் வளர்ந்துகொண்டும் இருக்கிறேன் என்று கூற தயக்கமேதுமில்லை.
                                      புத்தகம் பேசுது
கு.அழகிரிசாமி எழுதிய கடிதங்கள்
கி.ராவுக்கு எழுதியவை
உயிர்மை வெளியீடு.140ரூபாய்.
  
இந்த கடிதங்கள் படிக்கும்போது முதலில் ஒரு காதலன் தன் பிரிவுத்துயரால் வாடும் காதலியைத்தேற்றுவதன் வழி தன்னையே தேற்றிக்கொள்வதுபோல் தோற்றமளிக்கக்கூடும். தன் மண்ணைக்கரைத்து மனதில் ஊற்றிய மனிதர்கள் பிழைப்புகாரணமாக வெளியூர் சென்று வாழ நேர்ந்தால் மனம் ஒருபுறமும் உடல் ஒருபுறமுமாக வாழத்தலைப்படும் அவலமே இந்தக் கடிதங்களின் அடிநாதம். இவை மட்டுந்தானா என்றால் அவை மட்டுமல்ல. அன்பு, நேசம் ,வறுமை, நிறைய இசை, நிறைய கவிதை, என வாழ்வு எவ்வளவுதான் நிராசையுமாய் அவலமுமாய் அமைந்து போனபோதும் புத்தகங்களின் நிழல் தன்னைக்காத்த்தை பகிர்ந்துகொள்கிறார். கு.அ இருந்திருந்தால் நிச்சயம் இந்தக்கடிதங்கள் வெளிவருவதை விரும்பியிருக்க மாட்டார். இதையும் கி.ராவுக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருக்கிறார். கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு அதில் பல பாடல்களை இயற்ற முனைந்து இருப்பதை கடிதங்களில் காணமுடிகிறது. 1944- 48 காலகட்டம் வரையிலான கடிதப்போக்குவரத்தில் கு.அ பற்றி மட்டுமல்ல அந்தக்காலகட்டம் பற்றியும் தெரிந்துகொள்ளமுடிகிறது சிறப்பான முறையில் அதுவும் சூசகமாக. தன் வாழ்பனுபவ வெம்மைகளை கடந்து ஒருவன் பிறருக்காக வாழ்வின் அவலத்தை, துயரத்தை படைப்பில் காட்டிட கடுமையான முயற்சிகள் செய்திட வேண்டும். கு.அழகிரிசாமியின் கடிதங்களைப் படிக்கும்போது தன் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளையே தன் எழுத்துக்கான மையமாக கொண்டிருக்கிறார் என்பது நமக்கு தெரியவருகிறது. இப்படி எழுதுவது, எழுத்தாளனின் வாழ்வு குறித்து தெரிந்துகொள்வது அவசியமற்றது போல தோன்றினாலும் அந்த சூழல் படைப்புகளில் எப்படி வந்திருக்கிறது? என்று பார்ப்பதற்காக அல்லாவிடினும் சூழலின் வாழ்வின் வெம்மை படைப்புகளை பாதித்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ளவேண்டும். கு.அ மொழிபெயர்ப்பு பற்றிய கிண்டல் ஏறத்தாழ இன்றும் உயிர்ப்போடு இருக்க காரணம் அதை நாம் செய்யும் கவனம் குறித்துதான் என்பது உண்மை. இந்தக் கடிதங்களைப் படித்தவுடன் இன்னொருமுறை கு.அ வின் ஆக்கங்களைப் படிப்பது அவரை முழுமையாக உள்வாங்க இயலும்.

நம்பிக்கை வளர்த்தெடுப்பு பயிற்சி
ஆக்கம் ‘முன்னேறு’ பழனிச்சாமி
மூணு நாளு கோர்ஸூ மூவாயிர ரூவா பீஸூ
வழங்குபவர்கள் – சித்தப்பா சிட்பண்ட் பி.லிட், சோரகான் செருப்புகள், முன்னேற்ற இதழ்கள் பல.
  • நம்பிக்கையை அதிகரிக்க  அருகிலுள்ள டுடோரியல் காலேஜுக்குச் சென்று தேர்வில் தோற்றவர்கள் பிட் எழுத முயற்சிக்கிறார்கள் என்பதை கவனித்து நம்பிக்கை பெறலாம்.
  • அடுத்தவனை உசுப்பேற்றவென ஊர் டீக்கடையில் நாலுபேர் இருப்பார்கள்.ஏதோ நாப்பது பேரை ஐ.ஏ.எஸ்சுக்கு தயார் பண்ணுவது போல் பேசுவார்கள் பின் இறுதியாக அதே டீக்கடையில் வேலைக்குச்சேரச் சொல்லி உந்துசக்தியை மனதில் தாராளமாக வளர்த்து விடுவார்கள். டீக்கடைக்காரன் மட்டும் நல்லா இருந்திரலாமா என்ன?
  • நூலகங்களில் உள்ள பாதிக்கும்மேலான நூல்கள் நெம்புகோல் தத்துவத்தையும் மீறி உந்துசக்தியைத் தந்துவிட நமது எதிர்காலத்தை புரட்டிப்போட முயற்சிக்கும் முன்னேற்ற மூஞ்செலிகளை முன்னேற்ற சிறிது அப்புத்தகங்களையேனும் படிக்கலாம்.
  • ஊர் முழுவதும் சுற்றிவருவதற்கான தேவையை எப்படியிருந்தாலும் கைவிடுதல் கூடாது. பஞ்சராகி கிடக்கும் ஏதாவது வண்டியைத் தள்ளும்போது நமது மனதில் தள்ளும் வண்டியே முன்னாடி செல்லும்போது நாம் முன்னே போனால்  என்ன என ஒரு உந்துசக்தி சிரங்காய் மனதை அரிக்கும். கபால்னு புடிச்சு கப்புசுப்புன்னு ஏறவேண்டாமா!
  • பஸ் ஸ்டாப்பில் எந்த பஸ் வந்தாலும் வெவ்வேறு பஸ்ஸுக்காக காத்துஇருப்பவர்களை எப்படியாவது அதில் ஏற்றி முன்னேறி  வழிவகை செய்தால் மக்கள் நமக்கு ஒருவழி கண்டறிவார்கள். நாம் முன்னேறுவதைவிட மற்றவர் முன்னேற்றத்தை தானே பலரும் விரும்பகிறார்கள்.

  


கருத்துகள்