வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்


 









வலசை செல்லும் பறவைகளின் 
வாழ்விடச்சிக்கல்கள்
ஏ.சண்முகானந்தம்
பாரதி புத்தகாலயம்
160


காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.  

நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும். 

வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம். 

வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை நாம் தெரிந்துகொண்டுவிடலாம். 

அடிப்படையாக பறவைகளின் வலசை செல்லும் பழக்கம் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர், இந்த நூலை வாங்கி வாசிக்கலாம். நூலின் இறுதிப்பக்கங்களில் நூலாசிரியருக்கு கம்யூனிச கருத்துகள் பிடிக்கும் என்பதை அறிந்துகொள்ள வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆறு பக்கங்களில் இதை நிறைவேற்றியிருக்கிறார்கள். நூலின் மையக்கருத்துக்கு அந்த பக்கங்களில் கூறப்பட்ட விஷயங்கள் நியாயம் செய்யவில்லை. பாரதி புத்தகாலயத்தைப் பொறுத்தவரை இதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. பிழைத்திருத்தம் கூட பார்க்க நேரமில்லாமல் வேகமாக நூல்களை அச்சிட்டு மக்களின் அறியாமையைப் போக்க உழைத்து வருகிறார்கள். அவர்களின் பணி பாராட்டத்தக்கது. 

நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பறவைகளின் படங்களும் அழகாக உள்ளன.  தடாகம் பதிப்பகத்தில் முதல் பதிப்பு வெளிவந்ததாக நினைவு. அந்த நூலை வடிவமைத்தவர் மெய்யருள். ஆனால் அதே நூலை அப்படியே எடுத்து பாரதி புத்தகாலயத்தில் பக்கத்தை மட்டும் சரியாக பொருத்தி வைத்து அச்சிட்டுவிட்டார்கள். இதனால் படங்கள் சில மங்கலாக தெளிவின்றி மாறியுள்ளன. 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்