இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

 









இந்தியாவின் இருண்டகாலம்

சசிதரூர்

தமிழில் ஜே கே ராஜசேகரன்

கிழக்கு பதிப்பகம்







நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன. 

இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார். 

ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்களே அப்படித்தான், இந்திய வரி வருவாய் பிரிட்டிஷாருக்கு நிறைய செலவிடப்பட்டது என ஏராளமான நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி பேசுகிறார் சசிதரூர்.  இந்தவகையில் தொழில், கல்வி, இயற்கை வளம் எப்படி சுரண்டப்பட்டது என அன்றைய கால ஆங்கிலேய ஆட்சியாளர்களின் குறிப்புகளிலிருந்து எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டுகிறார் சசிதரூர். 





நூலின் இறுதிப்பகுதியில், காலனி ஆட்சிக்குப் பிறகு நேர்மையில்லாத அரசுகளால் காலனிகாலத்தை விட மோசமான நிலைக்கும் கூட நாடு செல்லும் என்ற பீதியை சில கருத்துகள் ஏற்படுத்துகின்றன. இன்று நடப்பது அப்படித்தான் என்பதை சசிதரூர் வரலாற்று நூல்களிலிருந்து பெற்ற அனுபவங்களிலிருந்து அடையாளம் கண்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. நூலில் பஞ்சம் ஏற்படுவது எப்படி, அகிம்சை எங்கு பயன்படும், தொழிலை சர்வாதிகாரம் அழிக்க எப்படி திட்டமிடுகிறது, அன்றைய குறுநில மன்னர்களின் மனநிலை என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பொதுவாக ஆங்கிலேயர்கள் சில கட்டமைப்புகளை ஏற்படுத்தியது பற்றிய நன்றியுணர்வு இந்தியர்களுக்கு உண்டு. ஆனால் சசிதரூரின்  இந்த நூலை படித்துமுடித்தவர்கள் நிச்சயம் தங்கள் மனதிலுள்ள கருத்தை மாற்றிக்கொள்வது நிச்சயம். 

தமிழ் மொழிபெயர்ப்பில் சசிதரூர் சொல்லிய வார்த்தைகள் அதிக சேதாரமின்றி கச்சிதமாக பொருந்துகின்றன. பல்வேறு நூல்களின் எடுத்துக்காட்டுகளை இதற்கு ஆதாரமாக கூறலாம். 


கோமாளிமேடை டீம்



கருத்துகள்