வாடிக்கையாளர்களை உருவாக்குவதே நிறுவனத்தின் சாமர்த்தியம்!

 











வாடிக்கையாளர் தான் தெய்வம்!
 
அண்மையில் ஊடகவியலாளர் கோகுலவாச நவநீதன் ஒரு புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், மளிகை கடை ஒன்றில் வாடிக்கையாளர்களே தெய்வம். தெய்வத்திற்கு கடன் கொடுக்கும் தகுதி எனக்கில்லை எழுதியிருந்தது. இந்த வாசகத்தை எளிமையாக கடன் கிடையாது என்று எழுதலாம். ஆனால்  என மளிகை கடைக்காரர் கிரியேட்டிவாக யோசித்து வாடிக்கையாளரையும் உயர்த்திப்பிடித்து, தனது கடன் கிடையாது கொள்கையையும் சொல்லிவிட்டார்.
 
ஹூவெய்யின் வணிக சூத்திரமே இதுதான். ரென்  நடத்தும் நிறுவனம் தொலைத்தொடர்பு சேவை தொடர்பானது. தினசரி ஏராளமான கண்டுபிடிப்புகள், ஆய்வுகள் நடக்கும் துறை. இதில் எப்படி அவர் வாடிக்கையாளர்களை பொருட்படுத்தாமல் இருக்க முடியும். அப்படி செய்தால், அவரது நிறுவனம் விரைவில் வீழ்ந்துவிடும் அல்லவா? இந்த வணிக கொள்கைக்கு பெயர்தான் கஸ்டமர் சென்ட்ரிசிட்டி.
 
வாடிக்கையாளரின் சூழல், குணம், தேவை புரிந்து பொருட்களை தயாரித்து வழங்குவது. இதைத்தான் ஹூவெய் ரென் தனது ஊழியர்களுக்கு வகுப்பெடுத்து சொல்லித் தருகிறார். அதிக மாறுதல்களை சந்திக்காத அணுசக்தி துறையில் சில முதலீடுகளை ரென் செய்துள்ளார். துறையில் நடந்துகொண்டே இருந்தால் அதை கணிக்கிற திறமை இருக்கிறவர்தான் முதலீட்டாளராக இருக்கமுடியும். அப்படி இல்லாதபோது அதில் முதலீடு செய்வது பணத்தை நிதானமாக தெருவில் எறிந்துவிட்டு வேகமாக வீட்டுக்குள் செல்வது போலத்தான்.
 
பத்திரிகைகள் எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கியதோ அதனைத் தான் அதன் பெருமையாக சொல்லுவார்கள். வணிகத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களை உருவாக்குவது நிறுவனத்தின் தனித்துவம்தான். இதை சரியாக செய்வது முக்கியம். அப்படி செய்யும் நிறுவனங்கள் தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்துறையில் சாதித்து வருகின்றன. பழங்காலத்தை விடுங்கள். இன்று ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 3 ஆண்டுகளைத் தாண்டினாலே பெரிய சாதனைதான். அத்தனை நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
 
ஹூவெய் நிறுவனம் தனக்கான சந்தையை நகரங்களை விட கிராமங்களில் தேடி அடையாளம் கண்டது. இடிவிழுந்து, மின்னல் தாக்கியது, புயலால் சாய்ந்த, செயலிழந்த தொலைத்தொடர்பு சாதனங்களை முகம் சுளிக்காமல் மாற்றிக்கொடுத்தது. இதனால் மக்கள் ஹூவெய் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நகரங்களை நோக்கி நகர்ந்தபோது ஹூவெய் கிராமங்களை முக்கியமாக கருதியது. தனக்கான வாடிக்கையாளர்களை இந்த வழியில் பெற்றது. கூடவே ஹூவெய் தனது நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரிக்க ஐபிஎம் போன்ற நிறுவனங்களின் உதவிகளை நாடியது.
 
நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை, நிதி நிர்வாகம் என அனைத்திலும் ஒரு ஒழுங்குமுறையை ஏற்படுத்த ரென் நினைத்தார். இதற்காக அவர் ஆலோசகர்களை அமர்த்தினார். அவர்களுக்கான சம்பளம் 680 டாலர்கள். இது ரென்னின் மாத சம்பளம். ஆனால் ரென் இதற்காக தயங்கவில்லை. ஹூவெய் தொடக்கம் முதலே வருமானத்தில் பெரும்தொகையை ஆராய்ச்சிக்காகவே ஒதுக்கி வந்துள்ளது. அனைத்து நிறுவனங்களும் ஆண்டுக்கான இலக்கு என தீட்டும் போது ஹூவெய் பத்தாண்டுகளுக்கான திட்டங்களை உருவாக்கி உழைத்து வந்தது.
 
மேற்குலக நாடுகளின் வணிக உற்பத்தி திட்டங்களை ரென் நாடினர். அதற்கான சிறந்த பயன்களும் கிடைத்தது. ஐபிஎம் நிறுவனத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு ரென்னும் சென்றார். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். ஹூவெய் பல்வேறு சவால்களை சந்தித்தபோது கற்ற பாடங்களை பயன்படுத்திக்கொண்டார் ரென்.
 
ரென், முதலீடு செய்ய மூன்று தொழில்நுட்பங்கள் இருந்த பிஹெச்எஸ், சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம். முதலில் பிஹெச்எஸ் இல் முதலீடு செய்யத்தான் ஹூவெய் முதலில் நினைத்தது. ஆனால், அதில் எதிர்கால வளர்ச்சி இல்லை. எனவே, சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தார்கள். ஆனால் அப்போது ரென் ஜிஎஸ்எம்மில் முதலீடு செய்யவே நினைத்தார். செய்த முதலீடு என்பது தவறானது என பின்னர் உணர்ந்தார். தவறுதான். தவறிலிருந்து அவர் பாடங்களைக் கற்றுக்கொண்டார். இப்படித்தான் ஹூவெய் செயல்படுகிறது. செயல் தோல்வியோ, வெற்றியோ நிலையாக முன்னேறி வருகிறது. உடனே வெற்றி என்பதில் ரென் எப்போதும் நம்பிக்கை கொண்டதில்லை.
 
“சரியோ, தவறோ நான் வெளிப்புற அழுத்தங்களுக்கு எப்போதும் பணிய மாட்டேன். எனது இயல்பில் செயலை ஏற்றுக்கொண்டு முன்னேறி செல்வேன்” என உறுதியாக பேட்டி ஒன்றில் புன்சிரிப்போடு பேசினார் ரென்.
 
2000இல் ஹூவெய் சீன சந்தையில் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டது. தோல்வியிலிருந்து வெளிவந்து பசியோடு புதிய கண்டுபிடிப்புகளை செய்துகொண்டிருந்தார்கள். எனவே, வெளிநாடுகளில் ஏதாவது வாய்ப்புகள் கிடைக்குமா என தேடத் தொடங்கினர். அவர்களுக்கு வளர்ச்சிக்கு அப்போது வேறு வழியும் இருக்கவில்லை.
 
 

கருத்துகள்