தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

 











நாகர்களின் ரகசியம்
அமிஷ் திரிபாதி
பவித்ரா ஸ்ரீனிவாசன்
வெஸ்ட்லேண்ட்


அமிஷ் திரிபாதி



குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார். 

சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது. 

இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் மக்களைக் கொல்வதில்லை. ஒரு கிராமத்தை தாக்கினால், அங்கு வாழும் அந்தணர்களை மட்டுமே கொல்கிறார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது மெலூகா நாட்டைச் சேர்ந்த தளபதி பர்வதேஸ்வரருக்கே தெரியவில்லை. இத்தனைக்கும் ராமபிரான் வகுத்த நூற்றாண்டு சட்டத்தை அப்படியே கடைபிடிக்க நினைக்கிறார்.  இதற்காக பல்லாண்டுகளாக திருமணமே செய்யாமல் வாழ்கிறார். பிறகுதான் அவரது முட்டாள்தனத்தை ஸத்வீபம் நாட்டின் இளவரசி ஆனந்தமயி சுட்டிக்காட்டுகிறாள். அவரை இடைவிடாமல் காதலிக்கச்செய்ய முயல்கிறாள். 

சதியை கடத்திப்போக நாகர்களின் மக்கள் தலைவன் முயல்கிறான். அந்த முயற்சி சிவனால் இருமுறை தட்டிப்போகிறது. முதல்முறை, சிவன் சதியை கோவிலில் பார்க்கும்போது நாகர்களின் முதல் தாக்குதல் நடக்கிறது. அடுத்து, மந்த்ரமலைக்கு சதி வந்து செல்லும்போது நடைபெறுகிறது. ஆனால் இந்த இரண்டு தாக்குதலிலும் சிவா ஒரு விஷயத்தை அடையாளம் கண்டுபிடிக்கிறார். அதுதான் பிறரை நாகர்கள் தாக்கினாலும் கூட சதியைக் காயப்படுத்தவே இல்லை என்பது... பிறகு சிவன் - சதி திருமணம் நடைபெறுகிறது. அந்த நேரம்தான் மந்த்ரமலை தாக்கப்படுகிறது. அங்கு நாகர் தலைவனான கணேஷின் கங்கணம் கிடைக்கிறது. இதனால் சிவன், நாகர்களை அழிப்பதென முடிவு செய்கிறார். ப்ரகஸ்பதியைக் கொன்று மந்த்ரமலையை ஏன் அழிக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான கதையின் மையம். 

இதற்கு என்ன காரணம் என்பதை சிவன் கண்டுபிடிப்பதுதான் நாகர்களின் ரகசியம் நூலின் அடிப்படையே. 

நன்மை, தீமை என்பது கருத்தா அல்லது மனிதர்களா என்பதை சிவன் அறிந்துகொள்ள நினைக்கிறார். இதன் பொருட்டு அவர் எடுக்கும் முடிவு, ஸத்வீபத்தைச் சேர்ந்த சந்திரவம்சி மக்களைக் கொன்று போடுகிறது. பெரும்பாலான போர்வீரர்கள் இறந்துவிடுகிறார்கள். அப்போதுதான் அவருக்கு தெரிகிறது. நீலகண்டர் என்பவர் சூரியவம்சிகளுக்கும் சந்திரவம்சிகளுக்கும் பொதுவான கடவுள் என்பதை. இதனால் ஏராளமான மக்களை அவசரப்பட்டு கொன்றுவிட்டதற்காக வருத்தப்படுகிறார். குற்றவுணர்ச்சி கொள்கிறார். அந்த நொடியிலிருந்து மெல்ல விஷயங்களை நிதானமாக அலசி ஆராயக் கற்கிறார். இவரை டெலிபதி முறையில் பண்டிதர்கள் வழிநடத்துகிறார்கள். 

தண்டகாரணிய காட்டைக் கடந்து அமைந்துள்ள பஞ்சவடியில் அமைந்துள்ள நாகர்களின் நாடு என்னென்ன ரகசியங்களை மறைத்து வைத்துள்ளது, அவர்களுக்கும் ப்ரங்க நாட்டினருக்குமான தொடர்பு, ப்ரங்க நாட்டுக்கு அருகில் உள்ள காட்டில் வாழும் அந்தண ஷத்ரியனான பரசுராமனின் வாழ்க்கை, ஸத்வீப நாட்டு இளவரசன் பகீரதன் வாழ்க்கை, ஆனந்தமயி காட்டும் காதல், திலீபரின் சுயநலம், தக்ஷரின் பலவீனமான புத்தியால் ஏற்படும் சிக்கல் என நிறைய விஷயங்களை நாவலில் கூறுகிறார்கள். 


கோமாளிமேடை டீம் 


புகைப்படம்

ELENA MIKHAILOVA - Photographer

கருத்துகள்