புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

 









புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன?

வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ...


பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங் 

5 வயதுக்கும் மேற்பட்டவர்கள்


நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபாய் தனது  கணக்கில் வரும் என நினைத்து கனவு காணும் மூன்று இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் பொய் சொல்லி கன்வின்ஸ் செய்து தேசிய பெருமிதத்தை நிலைநாட்ட வேண்டும். சிறந்த நாட்கள் அவர்கள் வாழ்க்கையில் இனிமேல் வரும். வரலாம். வருமா என பல்வேறு சாத்தியங்களைச் சொல்லி சுவற்றியில் சாணியை அடிப்பது போல சொல்லால் அடிக்கவேண்டும். அப்படி செய்பவர்கள்தான் பாரத் மகான் என போற்றப்படும் சிறந்த பொய் சொல்லி.  

இதற்கான கட்டணம் ரூ.85 ஆயிரம் மட்டுமே - ஜிஎஸ்டியோடு சேர்த்து...


சமையல் வகுப்பு 

12 வயதுக்கும் மேற்பட்டவர்கள்

சமையல் வகுப்பு என்றால் பலரும் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட் என தேட ஆரம்பித்துவிடுவார்கள். இல்லை அப்படியெல்லாம் ஏதும் செய்யக்கூடாது. டேட்டாவின் உலகம் இது. இங்கு சமையல் என்பது அரசு செய்யும் பல்வேறு புள்ளிவிவர ஆய்வுகளை சமைத்து பரிமாறுவதுதான் முதல் பணி. அரசு எப்படி கேட்கிறதோ அதற்கேற்ப புள்ளிவிவரங்களை ஐ என்ற எழுத்து போல முடிந்தளவு வளைக்க வேண்டும். கோவிட் -19 நோய்த்தொற்றால் மக்கள் இறக்கவே இல்லை என்று புள்ளிவிவரங்களை உருவாக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் புதிய இந்தியாவில் எப்படி வாழ்வது என கற்றுக்கொள்ள முடியும். பெட்ரோல் விலை ஏறுகிறதா, அதை வாங்க காசில்லையா இப்போது என்ன செய்வது? உடனே வரலாற்று பாட நூல்களை கையில் எடுத்து ஔரங்கசீப் ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை உச்சம் தொட்டிருந்ததை ஆதாரமாக காட்டி விலை உயர்வை ஓகே பரவாயில்லை என மக்களையே ஏற்றுக்கொள்ள வைக்கவேண்டும். விலை உயர்வை எதற்கு இந்த வடிவில் பார்க்கவேண்டும்? அதை தலைகீழாக பார்த்தால் விலை குறைவாகத்தானே இருக்கிறது. இப்படி நேர்மறையாக நாட்டின் பிரச்னைகளைப் பார்க்கவேண்டும். 

ரூ.95,0000 

பணவீக்கத்தைப் பொறுத்து கட்டணம் அனுசரித்துப் பெறப்படும். 

உறிஞ்சுவது, சப்புவது பற்றிய அறிவியல்

13 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இதை திறமை என்று கூறலாமா என்று தெரியவில்லை. வளர்ச்சி, வெற்றி, செல்வம், துணைவேந்தர் பதவி , ராஜ்யசபா உறுப்பினர் பதவி ஆகியவற்றை எதிர்காலத்தில் பெறுவதற்கான பயிற்சி. இதற்காக மாம்பழம், ஐஸ்க்ரீம் ஆகியவற்றை முதலில் நக்கி சாப்பிட்டு பழக வேண்டும். இதன் இறுதியில் களப்பணியாக ஒருவரின் ஷூ கால்களை நக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை முன்னாள் கேபினட் அமைச்சர் நடத்தி வைப்பார். இந்த நிகழ்ச்சி மூலம் மாணவர்களுக்கு குற்றவுணர்ச்சியும் அவமானமும் ஏற்படாது. எதிர்காலத்தில் சிறந்த ஆல் ரவுண்டர்களாக வாழ்க்கையை நடத்த உதவும் பயிற்சி இது. 

99,000 மட்டுமே 

ஆக்ரோஷ கத்தல் பயிற்சி 

அனைத்து வயதினருக்குமானது. 

போலிச்செய்திகளை சொல்லும் டிவி சேனல்கள் இப்படி பயிற்சி பெற்ற ஆட்களை வைத்துத்தான் பிழைப்பை செய்கிறார்கள். குழந்தை பிறந்ததும் வீல் என்று என்று கத்துகிறதே அதுதான் பயிற்சி. வெளிப்படைத்தன்மை, கருணை, பிறருக்கு இடம் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் பேசுவதையும் கேட்க கூடாது. ஒரே வீச்சாக நாமே கத்தவேண்டும். காதே கிழியவேண்டும். டிவி சேனலில் பேசினால் பிறர் பேசுவதை மக்கள் கேட்கவே கூடாது. அந்தளவு கத்தில் மக்களை மிரட்ட வேண்டும். இதில் ஒருவரின் நுரையீரல் எந்தளவு வலுவாக இருக்கிறோ அந்தளவு அவர் வலுவானர், வெல்வதற்கு அவரே தகுதியான மனிதர். 

இந்தியாவின் மானுடவியல் பயிற்சி 101

அனைத்து வயதினருக்குமானது

ஆப்பிரிக்காவில் இருந்து மனித மூதாதையர்கள், தோன்றினார்கள் என ஆராய்ச்சி சொல்லியிருக்கிறது. அதனால் என்ன, இந்தியாவில் தான் மனித மூதாதையர்கள் தோன்றினர். அதிலும் குறிப்பாக ஆஸ்ட்ராலோதிகஸ், ஜின்ஜான்த்ரோபஸ் ஆகிய மனித இனங்கள் இரண்டுமே பசு இறைச்சி மற்றும் ஹிஜாப் ஆகியவற்றுக்கு எதிராக இருந்தனர். இதனால் இடதுசாரி வரலாற்று நூல்களை, ஆதாரங்களை குழிதோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்கு உண்மையான இந்திய வரலாற்றை கற்றுக்கொடுப்பது முக்கியம். இந்த பயிற்சி மேற்சொன்ன பயிற்சிகளில் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 

பத்திரிகையாளர் ஜி சம்பத், தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது. 





கருத்துகள்