காட்சியில் உயிர்த்தெழும் மகா ஆன்மா

காட்சியில் உயிர்த்தெழும் மகா ஆன்மா
                  ச. குழந்தைசாமி

                      தமிழில்: சின்னோடன் தம்பி

    ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ மறைந்த செய்தி, இந்திய அரசும், மக்களும் அவரை முறையாக பாராட்ட, அங்கீகரிக்க தவறிவிட்டோமா என்ற எண்ணத்தை மனதில் மீண்டும் ஏற்படுத்துகிறது.
     இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களை தமது ஆட்சியில் எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பதை திரைப்படம் வழியே பதிவு செய்த அந்நாட்டைச் சேர்ந்த ஆங்கில இயக்குநருக்கு  அரசு அளித்த விருது போதுமானதல்ல.
     முக்கியமாக இங்கே நாம் கவனம் கொள்ளவேண்டியது அமைதி மற்றும் அகிம்சையை பலநாடுகளின் எல்லைகளைத் தாண்டி பேசுகிற ஒரு திரைப்படமாக ‘காந்தி’ உள்ளது என்பதுதான். அகிம்சை என்பதை வசனமாக இல்லாமல் காட்சிரீதியாக திரைமொழியைப் புரிந்து கொண்டு வலுவான தாக்கத்தினை உண்டாக்கும் படி பயன்படுத்தியிருப்பார்.
     ‘காந்தி’ திரைப்படம் பலரது வாழ்க்கை முறையினை மாற்றியிருக்கிறது என்று உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் செய்திகளிலிருந்து உணர்கிறேன். என்னையும் இப்படம் பெரிதும் பாதித்தது. 1982 ஆம் ஆண்டு சென்னையில்  காந்தி அமைதி நிறுவனத்தின் செயலாளராக மாதம் ரூ.500 ல் வேலை கிடைத்தது. 1973 ஆம் ஆண்டில் கெமிக்கல் என்ஜீனியரிங் படிப்பை நிறைவு செய்த பின் கிடைத்த வேலை இதுவாகும். இளைஞனாக இருந்தபோதிலிருந்தே முழுநேரமும் காந்தியின் சிந்தனைகளை மக்களிடம் அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.
காந்தி திரைப்படம் வெளியானபோது என் ஒரு மாத சம்பளத்தை வைத்து அருகிலிருந்த முப்பது வீடுகளை வாடகைக்குப் பிடித்து அதில் அப்படத்தை திரையிட செலவழித்தேன்.
நாற்பது ஆண்டுகளாக காந்தியின் சிந்தனைகள், கருத்துக்களைப் பரப்புவதற்கான தொடர்ந்த ஆதரவினை அரசோ, பெரும்பாலான பள்ளி நிறுவனங்களோ தரவில்லை என்றாலும், சில தனி மனிதர்களும், சில பள்ளிகளும் இப்பணியில் பெரும் ஊக்கம் அளித்துவருகின்றனர்.
எனக்கு ஆச்சர்யம் தருவது என்னவென்றால் நாம் சுதந்திரம் பெற உதவியது அகிம்சைதான் எனும்போது, அதற்கான ஒரு மரியாதையை, மதிப்பை நம் நாட்டில் காணமுடியவில்லை என்பதுதான்.
நம் வாழ்வில் அகிம்சையை கடைபிடித்து அதனை மற்றவர்களிடமும் பரப்ப ஏன் தவறினோம்? மாணவர்களின் கல்வித்திட்டத்தில் அகிம்சை குறித்த கருத்துக்கள் ஏன் இடம்பெறவில்லை? பொருளாதாரம் மற்றும் அரசியலில் அகிம்சை குறித்த சிந்தனைகள், செயல்பாடுகள் இல்லாமல் போனது ஏன்?
இவற்றை இடம்பெறச்செய்யும்போது காந்தியின் வாழ்வும், சுதந்திரப் போராட்ட சித்திரங்களும் பாடத்திட்டத்தில் தன்னிச்சையாக இடம்பெற வாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நேர்மையின் மீதான மதிப்பும், உண்மை பற்றியும் தெரிவதில்லை என்று அவர்களின் பெற்றோர்களே புகார்களை முன்வைக்கிறார்கள். உண்மை பேச அவர்களை ஊக்குவித்தாலே போதும், அவர்களது வாழ்வு மிகச்சிறந்த மதிப்பு மிகுந்ததாக மாறிவிடும். காந்தியின் சத்தியசோதனை எனும்  நூல் இதற்கான தொடக்கமாக இருக்கக்கூடும். ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் சமூகத்தில் இளைஞர்களின் பங்கினை அவர்களுக்கு புரியவைக்க முயலும் என்று உறுதியாக கூறமுடியும்.
காந்தி அமைதி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளின் போது காந்தி திரைப்படத்தின் பல்வேறு காட்சிகளுக்கு நீக்கமற இடமுண்டு. எனது நோக்கத்திற்கு காந்தி திரைப்படம் பெரிதும் வரம்போல் அமைந்தது. அரசு திரைப்பட நிறுவனம் ரிச்சர்ட் அட்டன்பரோ பெயரில் ஒரு விருதினை அமைத்து, மாற்று வாழ்வியல் நெறிகளை முன்வைத்து திரைப்படம் உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு அதனை வழங்க முயற்சிப்பது காந்தியின் சிந்தனை, கூறிய கருத்துக்களின் படி வாழ்ந்த வாழ்விற்கு நாம் செலுத்துகின்ற நேர்மையான மரியாதையாக இருக்கும்.

                     நன்றி: ஹிந்து செப்.21, 2014

கருத்துகள்