தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

     தமிழன் முற்றத்து நாகரிகக் கொடிமரம்

·        அன்பரசு சண்முகம்


தமிழ் பழங்குடி மக்களின் மொழியான தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் தோன்றியது  ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும், தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கணவிலக்கியமும் தோன்றியது  இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனவும்,  தேவநேயப்பாவாணர் தமிழ் வரலாறு நூலில் தெளிவுற கூறியுள்ளார்..
தமிழர்களின் அடையாளம் வேட்டி என்பதைவிடவும் மொழி என்பதுதான் முக்கியமானது. அதோடு தமிழர்களின் மரபான உணவுப்பழக்கங்கள், கலாச்சாரங்களில் தாவரங்களுக்கும், மரங்களுக்கும் இருந்த பங்கு முக்கியமானது.
நகரங்கள் தோன்றியது உழவுத்தொழிலில் சிறந்த மருத நிலத்தில்தான். உழவுத்தொழிலில் வேளாண்மையும், பதினெண்பக்க தொழில்களும், பிறதொழில் செய்வோர்க்கும் போதிய உணவும், வாணிகமும் ஏற்பட்டன. பல்வேறு அடையாளங்களை தன்னகத்தே கொண்ட தமிழர்களுக்கு மிக நெருங்கிய உறவு கொண்ட அழிந்துவரும் பனைமரம் குறித்துப் பேசுவோம்.
பனை என்றால் நமக்கு மனதில் உடனே தோன்றுவது வெயில் காலத்தில் நாம் தள்ளுவண்டிக்கடைகளில் உறிஞ்சும் நுங்குதான். அதற்குமேல் அதில் அறிவது அதன் ஓலைகளில் செய்து வைத்திருக்கும் விசிறிகள் மற்றும் பனங்கற்கண்டு ஆகியவையே. அவற்றை நம்பி வாழ்ந்த சமூகம் ஒன்றுண்டு. பல மனிதர்களுக்கு தாயாக இருந்த பனைமரம் இன்று செங்கல்சூளைகளில் வெறும் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்பட்டு தரையில் அதன் பசிய குருதி வீச்சம் நாசியில் ஏற வெட்டப்பட்டு கிடக்கிறது. அதனை நம்பியிருந்தவர்கள் என்னவானார்கள்? அதனை மூலமாகக் கொண்டு இருந்த தெளுவு(பதநீர்), கருப்பட்டி ஆகிய தொழில்கள் என்னவாயின? என்று பேசுகின்றது இக்கட்டுரை.

பனையின் வரலாறு
பனை, ஒரு மரம் என்று பொதுவாக தமிழில் வழங்கப்பட்டாலும், தொல்காப்பியத்தில் கூறப்பட்டதுபடியும், இன்றைய தாவரவியல் அடிப்படையிலும் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்
இலங்கை, மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L.  என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart என்றும் அழைப்பார்.
     தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடங்கி குஜராத் வரையுள்ள பிரதேசங்கள், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடக்கம், திருநெல்வேலி, மதுரை போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பனை மரம் தமிழ் நாட்டின் மாநில மரமும் ஆகும்.

உலகிலுள்ள பனைமரங்களின் எண்ணிக்கை


     உலக அளவில் அதிகபட்சமாக நூற்று நாற்பது  மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இந்தியா:                                                                                         60 மில்லியன்
மேற்குஆப்பிரிக்கா                                            - 50 மில்லியன்
இலங்கை                                                               - 11.1 மில்லியன்
இந்தோனெசியா                                                  - 10 மில்லியன்
மடகஸ்கார்                                                           - 10 மில்லியன்
மியன்மார்                                                              - 2.3 மில்லியன்
கம்பூச்சியா                                                            - 2 மில்லியன்
தாய்லாந்து                                                            - 2 மில்லியன்

பனையின்  பயன்பாடுகள் என்னென்ன அறிவோம்.


1.பனைஓலை

குருத்து ஓலையில் இருந்தே அதிகமான பயன் தரும் பொருட்கள் செய்யப்படுகிறன்.

கைவினைப்பொருட்களான:
பூக்கள், பூச்சாடிகள், போன்றவையும்,
மேலும் சில பொருட்களான:
பெட்டி, சுளகு, பாய், கடகம், திருகணை, நித்துபெட்டி, இடியப்ப தட்டு என பல பொருட்கள் செய்ய உதவுகிறது.
முற்றிய ஓலை மாட்டுக்கு உணவாக பயன்படுத்த படுவதுடன், வீடு வேய, வேலிகள் அடைக்க, தோட்ட நிலத்துக்கு, பயன்படுத்தப்படுகிறது.

2.நார்

பனம் ஓலை/ இலையில் இருக்கும் தண்டு/ மட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நார் நீண்ட நாள் உழைக்கக்கூடிய தூரிகைகள் (Brush), துடைப்பங்கள் செய்யவும், கயிறு திரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.


3.மரம்/தண்டு

     கட்டுமான பணிகளுக்கு குறிப்பாக வீட்டு கூரைகளுக்கு  உத்திரம், கை, விட்டம் என்பவை தயாரிக்க பயன்படுத்தபடுகிறது.

4. பதநீர் (அ) தெளுவு

     நொதித்தல் அடையாத பனம்பாலைநீர் பதநீராக அருந்தவும், பனஞ்சீனி, பனங்கட்டிபனங்கற்கண்டு செய்யவும் பயன்படுத்தபடுகிறது. பதநீரை கருப்பணி என பேச்சு வழக்கில் அழைப்பது வழக்கம். பதநீர் காலங்களில் பச்சரிசி, பயறு என்பனவும், பதநீரும் கொண்டு கருப்பணி கஞ்சி தயாரிப்பதும் வழக்கம். பொதுவாக பதநீர் இறக்க சுண்ணாம்பிடுவார்கள். சுண்ணாம்பு  பதநீரின் நொதித்தல் செயற்பாட்டை கட்டுப்படுத்தும். சுண்ணாம்பு பதநீரின் சுவையை மற்றிவிட கூடியது. நாவல் பட்டையையும் நொதித்தல் செயற்பாட்டை கட்டுபடுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பதநீரிலுள்ள சத்துக்கள்

     பதநீரில் வெல்லம் 12-13% ம், அமினோ அமிலங்கள், விட்டமின் பி, கனியுப்புக்கள் ஆகியவை நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஈஸ்டினால் நொதித்தல் (Fermentation) அடைந்த பின் கள்ளு என அழைக்கப்படுவதுடன், இது சாராயம் வடிக்கவும் பயன்படுகிறது.

5.நுங்கு

     முற்றாத பனங்காயை நுங்கு என அழைப்போம். நுங்கு மிகவும் சுவையான ஒரு பானம். ஆனால் அதனை நாம் தொழில் முயற்சியில் பயன்படுத்துவது இல்லை. இரண்டு மில்லியன் பனைமரங்களே இருக்கும் தாய்லாந்தில் இருந்து நுங்கு தகரத்தில் அடைக்கப்பட்டு உலகம் எங்கும் ஏற்றுமதியாக அதிக பனைமர வளத்தை கொண்ட இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து எந்த முயற்சியும் எடுக்கப்படாமை நம் நாட்டில் பிறந்த காந்தி, குமரப்பா ஆகியோர் கூறிய தற்சார்பு பொருளாதாரம் குறித்து நமக்கிருக்கும் ஆர்வத்தை உலகுக்கே கூறும் முயற்சியாகும்

6. பனம் பழம்


பனம் பழத்தில் இருந்து பெறப்படும் பழ கூழ் (Fruit pulp) பழபாகு (ஜாம்), பனாட்டு, குளிர் பானம் என்பன செய்ய பயன்படுத்த படுகிறது. அதை விட சுவையான சிற்றுண்டியான பனங்காய் பணியாரம் ஈழத்தில் பிரபலம். அதை வைத்து. அதை விட பனம் பழம் தீயில் வாட்டி சாப்பிடுபவர்களும் உண்டு.
7.பனங்கிழங்கு
     பனம்கொட்டையை மண்ணில் புதைத்து நன்கு முளைப்பு வந்தபின் எடுத்தால் பனங்கிழங்கு மண்ணின் கீழ் விளைந்திருக்கும். இதனை வேக வைத்து உண்ணலாம்.

பழகூழ் (Fruit pulp)
1.கரோட்டினோயிட்(Carotenoids)

எனும் மஞ்சள் நிறபொருளை கொண்டிருக்கிறது. பனம் பழத்தில் 2-253 மில்லிகிராம் கரோட்டினொயிட் 100கிராம் பழத்தில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இது விற்றமின் யிற்கான ஒரு மூலமாகும்

2. பெக்ரின்

     இது உணவு உற்பத்தியில் உணவு பொருகளை உறுதியாக்க/கூழ் நிலையில் பேண உதவும்.


3. பிளேபிலிஃப்ரின் (Flabelliferin)


     இது பனம் பழத்தில் காணப்படும் கசப்பு, காறல் சுவைக்கு காரணமான பதார்த்தமாகும். இதனை பழ கூழில் இருந்து பிரித்தெடுப்பதன் மூலம், பழக்கூழை வேறு உணவு பொருட்கள், ஜாம் போன்றவற்றில் நிரப்பியாக பயன் படுத்த முடியும். அத்துடன் இந்த Flabelliferin எனும் பதார்த்தம் நுண்ணுயிரிகளை கொல்லும் இயல்பும் கொண்டது.

     பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருட்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் பனையோலைகளே எழுதப்பயன்பட்டு வந்தன. இன்றும் பல பழைய நூல்களைப் பனையோலைச் சுவடிகள் வடிவிலே காணலாம். இவற்றைவிடக் கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது


     பல தலைமுறைகளாக, தெளுவு இறக்கிக்கொண்டிருந்த, பனம் கருப்பட்டி தயாரித்துக்கொண்டிருந்த குடும்பத்தில் மூத்தவரான தொண்ணூறு வயதான பழனியம்மாளிடம் இதுபற்றிக் கேட்டபோது,
‘’ பனமரமே பனமரமே ஏ வளந்தே
நா வளந்த காரணம்
பசிக்கு பழமாவேன், பட்டினிக்கு நொங்காவேன்
கட்ட கயிறாவேன், கன்னு கட்ட தும்பாவேன்
தூரத்துப் பொன்னாளுக்கு கணக்கோலை நானாவேன் ‘’
என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலிலே பனைமரத்தின் பல பொருட்களும் வந்துவிட்டன என்பதைக் கவனியுங்கள்.
 ‘’ தென்ன மரம் ஏறறதுக்கு முன்னாடி பன மரம்தே ஏறமுடியும். ஏன்னா பன மரத்தோட அமைப்பு அப்படி. தென்னமரத்தவிட பிடிமானம் அதிகம். பதினாலு வயசிலிருந்து மரமேற பழக்குவாங்க அப்பத்தே உடம்பு பயமில்லாம பழவமுடியுங்கறதுதே காரணம். எங்க அப்பனெல்லா பன மரம் நெறையா ஏறினவருதே. எம்பையனு ஏறுறவந்தா. ஆனா ஐம்பது வயசாயிட்டா அப்பறமெல்லா மரத்துல அவ்வளவு ஒசராம ஏறமுடியாது. இப்ப யாரும் ஏறமாட்டீங்கறான்னா மரம் எங்க இருக்குது? தெளுவு எறக்கறக்கே லைசென்சுன்னு வாங்கணுங்கறாங்க. அப்பறமா இதுல இருக்கற வருமானங்கறது கம்மி. நிலையில்லாதது. பனம் கருப்பட்டி, இல்லன்னா பனங்கல்கண்டுனு விளைக்கிற நாம வெல சொல்ல முடியாது. தையிலிருந்து ஆடிமாச வரையில பன மரத்தில தெளுவிருக்கும்; அதுக்கப்பறம் ஒரு வருஷம் ஆனா அதாவது அடுத்த தையிலதே மரம் ஏறோணும் ‘’ என்று கூறும் இவரது மகன் தேங்காய் வியாபாரம் செய்கிறார். இந்த வயதிலும் தென்னை ஒலையைக் கிழித்து வாசல் கூட்டும் துடைப்பம் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.   இப்போதும் வேலை செய்யணுமா என்று கேட்டால் ‘’ தெம்பிருந்தப்ப ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்தனப்பா. இப்ப முடியில ஏதோ ஒரு வேல செய்யோணுமல்ல ’’ என்று பேசிக்கொண்டே ஈர்க்கமாறுகளை கவனமாக கிழிக்கிறார்.

பனங்கற்கண்டின் தயாரிப்பு முறை
பனங்கற்கண்டு எப்படித் தயாரிப்பது பற்றி. ‘’ மொதல்ல மரத்துல இருந்து தெளுவ கொண்டாந்து கொப்பறையில  கொட்டி ஒரு துளிப்பதம் வர்ற அளவு( நீரைத் தொட்டு பாவைக் கையில் எடுத்தால் கையில் படாமல் உருளும் பக்குவம்) காய்ச்சினதும் எடுத்து பாவுபுட்டியில்(வாயகன்ற ஒரு குடம் தண்ணீர் பிடிக்கும் பானை) ஊத்தி வெச்சிரோணும். பன மரத்துப் பட்டையை நல்லா கல்லுல அடிச்சு நாரை மோதிரம் மாரி பாவுக்குள்ள பக்குவம், நெறத்துக்கும், சீக்கிரமா வெளையறதுக்கும் போட்டுவப்பாங்க. ரெண்டு இல்ல மூணு நாளுல கல்கண்டு வெளஞ்சதும் மேலயிருக்கற பாவை வெலக்கிட்டு பானையை ஒடச்சு எடுத்துக்கலாம். பனங்கல்கண்டு ஆடி மாசக்கடசீல தெளுவு முடியிறப்போ வீட்டுல பிள்ளைவலெல்லாம் சாப்படறதுக்கு போட்டுக்கொடுப்பாங்க. கருப்பட்டி காச்சறதுன்னா பக்குவம் இன்னுங்கொஞ்சநேரம் காய்ச்சி ஊறுற தெளுவுக்கேத்தமாறி குழி பண்ணிவெச்சு அதுல நல்ல பருத்தித்துணி விரிச்சு வெச்சு அதுல ஊத்தி எடுக்கோணும். பன ஒலயில பாவ ஊத்தி பிள்ளைகளுக்கு குடுப்பாங்க. அதுதான் ஒலக்கருப்பட்டிம்போம். அவ்வளவு தித்திப்பா இருக்கும் பனந்தெளுவுல வர்ற கருப்பட்டி. தென்னங்கருப்பட்டி கொஞ்சோ உப்பொறச்சமாரி இருக்கறதுனால அத சாப்பிடமுடியாது. அதோட பனங்கருப்பட்டி மருந்து தயாரிக்கறக்கும் ஆவும். ஆனா இப்ப வர்ற கருப்பட்டில வெள்ளச்சர்க்கரைய கலந்தர்றாங்க. ஒரு கிலோ நூறு ரூபாயிக்கு போறதுனால சக்கரய கலக்கறதுக்கு விக்கறவங்களே சொல்லீர்றாங்க. நாங்க கருப்பட்டி செய்யும்போது எதையுமே கலக்கமாட்டோம் இந்தக்காலத்துல அந்த நேர்மைதா தவறிப்போச்சு ‘’ என்று பல உணர்வெழுச்சிகள் அலையடிக்க தொடர்ந்து பேசியபடி ஓலையை விடாமல் கிழித்துக்கொண்டிருந்தார்.
கருப்பட்டியில் கலப்படத்தை அறிய அதனை நன்கு கவனித்தாலே போதும் சர்க்கரை கலந்து கருப்பட்டி தயாரித்திருந்தால மினுமினுப்பாக இருக்கும்.
பனம்பழத்தை சாப்பிடுவது எப்படி?
முதிர்ந்து மரத்திலிருந்து விழும் பனம்பழத்தை எடுத்து தீயில் சுட்டு பக்குவப்படுத்தி சாப்பிடலாம். பச்சையாக சாப்பிட்டால் தலைசுற்றல், காய்ச்சல், வயிற்றுப்பிரட்டல் ஏற்படும். பனம்பழத்தை நடுத்தர பதத்தில் வெட்டி எடுத்தால் அதை வேக வைத்து சாப்பிட முடியும். சேவாய்காய் என்று குறிப்பிடும் இந்தப்பழம் முதிர்ந்த பழம்போல வாசம் வரும் பக்குவத்தில் இருக்கும். இதனை வெட்டி எடுத்து வந்து கொட்டை உள்ள பகுதிகளாக அரிந்து முந்தையகாலத்தில் சிவகிரி சந்தையில் ஒரு துண்டு இவ்வளவு காசு என விற்று வந்திருக்கிறார்கள். இது பற்றி பழனியம்மாள் ‘’ எங்க அம்மாவெல்லாம் மூட்ட மூட்டயா சேவாயக்கொண்டுபோய் சந்தையில் துண்டு இருபத்தைந்து காசுன்னு பத்துரூபா, பன்னண்டு ரூபாவுக்கு வித்துட்டு வருவாங்க. நானும் ரெண்டு மூணு தடவை கூட போயிருக்கேன். சேவாய்க்காயை  கொட்டைகொட்டையோடு அரிஞ்சிக்கிட்டு பாத்திரத்தில் போட்டு வேகவைக்கோணும். வேகவைக்கும் நீர் பாவு மாரி மாறுன ஒடனே சேவாய எடுத்து ஆற வைக்கோணும். ஆறினதும் மேல்தோல உறிச்சிட்டு சாப்பட வேண்டியதுதான் ’’ என்கிறார்.
கருப்பட்டிதயாரிப்பின் இன்றைய நிலை
தனியாக வாங்குகிறவர்களிடம் கருப்பட்டி போடுபவர்கள் கருப்பட்டியில் சர்க்கரை கலக்கச்சொல்வது எதற்கு என்று கேட்டால் ‘’ வேறென்னங்க எட கூடி வரதுக்குத்தே வாங்கற ஆளுங்களே இப்பிடிச் செய்யச் சொல்றாங்க. அதோட சக்கர போடாம பண்ணற கருப்பட்டிய பக்குவமா வெச்சுக்காட்டி கெட்டுப்போயிரும். சக்கர கலந்துட்டா அவ்வளவு சீக்கரம் கொட்டுப் போகாதுங்கறதும் ஒரு காரணம். இன்னொண்னு என்னன்னா இந்த வேலய செய்யறக்கு ஒரு ஆளு பத்தாது. இரண்டுபேராட்ட செய்யோணும். மரமேறறதுக்கு கூலி, பாவு காய்ச்சி கருப்பட்டி பண்றதுன்னு வேல அதிகம். கிடைக்கற காசு ரொம்ப கம்மி. அதுக்கு பயந்துட்டே எங்க பயங்கூட இந்த வேலயிலிருந்து ஒதுங்கீட்டான்.  கமிட்டில கொண்டீ போட்டா நல்ல காசு கெடைக்குமுன்னாலும் போயிட்டு வர்ற செலவு இருக்குது. அப்பறம் நம்மு வேல கெடும். அதுதா பக்கத்துலயே கருப்பட்டியக் குடுத்துட்டு கெடைக்கற காச வாங்கிக்கறது.  ஈஸியா இருக்குதல்லோ அதனாலதான் இப்படி செய்யறோம் என்கிறார் பல ஆண்டுகளாக கருப்பட்டி காய்ச்சி வரும் வள்ளிபுரம் கருக்கம்பாளையத்தை சேர்ந்த சண்முகம். அரசின் கூட்டுறவு விற்பனையகத்தில் பனம் கருப்பட்டி பத்து கிலோ அதாவது ஒரு மனு ஆயிரத்து இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவே தனியாரிடம் மனுவுக்கு எழுநூற்று ஐம்பது ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பணத்திற்கு விற்பது தவிர இழப்பைத் தவிர்க்க பணமில்லாமல் ஐந்து கிலோ கருப்பட்டியை தனியார் பெற்றுக்கொள்வார்கள் என்பதும் இதில் கவனிக்க வேண்டும்.
பனம் பொருடகள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மிக குறைவாகவே நடைபெறுகிறன. அப்படி செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து பல பயனுள்ள தகவல்கள் கிடைக்கப்பேற்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தேவையாக உள்ளது.
பனைமரமும்,மரமேறிகளும்
நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னரும் நெடுங்காலத்துக்குப், பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரத்தை ஒத்தது என்கிறார்கள்.


     பனைமரம் தொடர்ந்து செங்கல்சூளைகளுக்கு அதன் ஆயுளைக்காட்டிலும் குறைவான தொகைக்கு வெட்டப்படுவதோடு மரம் ஏறும் ஆள்களுக்கு சமூக அந்தஸ்து குறைவு என்பதால் யாரும் அதுபோன்ற வேலையில் இருப்பவர்களுக்கு பெண்கொடுக்க தயங்கிவரும் நிலையில் பலரும் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டார்கள். மரம் ஏறுபவர்களுக்கு கருப்பட்டி கொண்டுபோய் விற்கும் கூட்டுறவு விற்பனையகத்திலே சாதிசங்கம் சார்பில் தெளுவு இறக்குவதற்கு உரிமம்பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு அறுநூறு ரூபாய் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படுகிறது. மற்றபடி அரசின் உதவிகளில்லாமல் இவர்கள் காப்பீடு போன்றவையும், மரம் ஏறுவதற்கான கருவிகள் முதற்கொண்டு முந்தைய காலத்தில் வழங்கிவந்திருக்கிறார்கள்.
    
 அரசின் பனைவாரியம் தொடர்பான எந்த தகவலும் மக்களுக்கு தெரியவில்லை. அதைக்காப்பாற்றுவதற்கு எடுத்த முயற்சிகளும் நடைமுறையில் என்ன பலன் கொடுத்தது என்பதும் தெரியவில்லை. தென்னை மரம் ஏறுபவர்களுக்கு இன்று ஏக கிராக்கி என்றாலும், பணம் அதிகம் கிடைக்கிறது என்றாலும் யாரும் அதைச்செய்ய வருவதில்லை. செய்துகொண்டிருப்பவர்களும் வயதான மூத்த தலைமுறைதான். விதிவிலக்காக சிலர் இளம்வயது ஆட்கள் செய்தாலும் கூடவே விவசாயத்தையும் செய்துகொண்டு இதனையும் ஓரிருவர் செய்கிறார்கள். இது வெறும் ஒரு மரத்தின் கதையாக மட்டும் முடிவதில்லை. அதன் மேல்  படர்ந்துள்ள கொடி போல, அதில் வசிக்கும் பறவை போல  அதனை வாழ்க்கையாக கொண்ட ஒரு சமுதாயத்தின் முழு வாழ்வையுமே சொல்ல வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. பனைமரத்திலிருந்து பெறும் கச்சா பொருளிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புகூட்டப்பட்ட அதன்பொருட்களும் வேலைவாய்ப்புகளும், அதிகரிக்கும் தருணத்தில் பனை மரம் வெட்டுதலையும், அதை நம்பியவர்கள் வேறு வேலைக்கு செல்வதையும் தவிர்த்து அவர்களையும், மிச்சமிருக்கும் பனைமரங்களையும் காப்பாற்ற தமிழக அரசின் பனைவாரியம் முழுமனதுகொண்டு செயல்பட்டால்  நிகழும்.


கருத்துகள்