குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

 










குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம்.

பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

குற்றங்களை செய்யும் மனிதர்களின் புத்திசாலித்தனம் பற்றிய கருத்தும் நிறைய மாறியுள்ளது. புத்திசாலிகளாக இருந்தால் ஏன் எளிதாக மாட்டிக்கொள்கிறார்கள் என்று கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். சார்லஸ் கோரிங்  என்ற குற்றவியல் ஆய்வாளர் செய்த ஆய்வில், ஆங்கிலேயர்களில் மரபணு சார்ந்த புத்திசாலித்தனம் கொண்ட குற்றவாளிகள் என்ற கோட்பாட்டில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

உயிரியல், சூழல், உளவியல் ஆகிய மூன்றையும் லாம்ப்ரோசா கருத்தில் கொண்டு செயல்பட்டார். ஒருவகையில் குற்றவியல் துறைக்கான அடிப்படையான கோட்பாடுகளை உருவாக்கினார். அதேசமயம் அறிவியல் ரீதியாக நடைபெற வேண்டிய விவாதங்களை, ஆய்வுகளை லாம்ப்ரோசா மதம், தத்துவம் என வேறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றார்.

குற்றவியல் சார்ந்த ஆய்வுகள் மரபணு என்ற இடத்திலிருந்து வெகுவாக மாறிவிட்டன. குடும்பம், இரட்டையர்கள், வளர்ப்பு பிள்ளைகள் என குற்றங்களைப் பார்க்கும் கோணம் மாறியுள்ளது.

குற்றவாளிகளாக பெற்றோர் இருந்தால், பிள்ளைகள் உருக்கி வார்த்த சொக்கத் தங்கம் போல உருவாகி வளர வாய்ப்புகள் குறைவு. இந்த வகையில் செய்த ஆராய்ச்சியில் ஆஸ்பர்ன், வெஸ்ட் ஆகியோர் 40 சதவீத குற்றவாளிகளுக்கு பெற்றோர் வழியில் குற்றத் தொடர்பு இருந்தது. வெறும் பதிமூன்று சதவீத குற்றவாளிகளுக்கு மட்டுமே பெற்றோர் வழியில் எந்த குற்றத் தொடர்புகளும் இல்லை என ஆதாரங்கள் கிடைத்தன. பின்னாளில் வந்த ஆராய்ச்சியாளர்கள், மரபணுக்களை விட ஒருவரின் வாழும் சூழல், பொருளாதாரம், நட்பு வட்டம் ஆகியவையே ஒருவர் குற்ற உலகில் மீண்டும் சிக்கிக்கொள்ள அல்லது நாடிச்செல்ல காரணம் என்று ஆதாரத்துடன் கூறினர்.

இரட்டையர்கள் கோட்பாடு ஒன்று இதில் கவனிக்க வேண்டியது இருக்கிறது. மோனோஸைகோடிக் ட்வின்ஸ் எனும் வகையில், ஒரே கருவை இருவர் பகிர்ந்துகொள்கிறார்கள். எனவே, இந்த வகை இரட்டையர்கள் வளரும்போது அவர்களின் குணங்கள் ஒரே மாதிரியானவையாக இருக்க வாய்ப்பு அதிகம். டைஸைகோடிக் ட்வின்ஸ், இவர்களின் உடலில் 50 சதவீத மரபணுக்கள் மட்டும் ஒரே மாதிரி இருக்கும். மீதி இருப்பவை மாறுபடும். இவர்களின் குண இயல்புகள் அதற்கேற்ப மாறுபாடு கொண்டவை. இந்த இரட்டையர்கள் முறையை வைத்துத்தான் ஒருவருக்கு குண இயல்புகளில் பெற்றோரின் தாக்கமுண்டா என அறிகிறார்கள். மேலும் மன அழுத்தம், குடிப்பழக்கம், ஸிஸோபெரெனியா ஆகிய பிரச்னைகளை இரட்டையர்கள் மரபணு ஆய்வு மூலம் அறியலாம். இரட்டையர்கள் பற்றிய ஆய்வைச் செய்ய கைரேகை, ரத்தவகை, புரதம் ஆகியவற்றை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இந்த ஆய்வில் உள்ள சவால் என்பது எம்இசட், டிஇசட் இரட்டையர்களில் ஒரே பாலினமாக இல்லாமல் ஆண், பெண் என இருக்கும்போதுதான் சிக்கல்கள் அதிகம் உருவாகும். குற்றச்செயல்பாடுகளை உருவாக்கும் ஒற்றை மரபணுவைத் தேடித்தான் ஆய்வாளர்கள் அதிகம் போராடி வந்தனர். குற்றங்களை உருவாக்குவது ஏதேனும் ஒற்றை மரபணு என அன்றைய உளவியல் ஆய்வாளர்கள் நம்பினர்.

வளர்ப்பு பெற்றோர் என்பதும் குற்ற ஆய்வுகளில் முக்கியமானது. உயிரியல் ரீதியாக பெற்றோர் வேறாக இருக்கும்போது, குழந்தைகளை காப்பகத்திலிருந்து எடுத்து வளர்ப்பு பெற்றோர் பராமரித்து வருவதுண்டு. இதில் அந்த குழந்தைகள் எப்படி வளர்கிறாரகள், அதில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா, மாறுபாடு ஏற்படுகிறதா என்பதும் முக்கியமானது.

பொதுவாக ஒரு பிள்ளை எப்படி காப்பகத்திற்கு வருகிறது? அவர்கள் வீட்டில் அப்பா, அல்லது அம்மா ஏதோ ஒரு காரணத்தால் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பார்கள். இதற்கு, குற்றம், வறுமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். பெரும்பாலும் பெற்றோர் குற்றச்செயல்களை செய்வதால் நிறைய பிள்ளைகளை காப்பகத்தில் வாழ நேரிடுகிறது. இப்படி இருக்கும் பிள்ளைகளை சிலர் தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இப்படி வளர்ப்பவர்களில் குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக உண்டு. அமெரிக்காவில் 1970களில், செய்த ஆய்வில் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பவர்களில் 50 சதவீதம் பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக இருந்தனர். இப்படி வளர்ப்பதில் குழந்தைகள் வளரும் சூழலும் முக்கியமானது. அதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

குற்றவாளிகளுக்கு பிள்ளைகளாக பிறந்து தம் பெற்றோரின் வழிகளைப் பின்பற்றி குற்றவாளிகளாக மாறுபவர்களும் உண்டு. அதேசமயம், அப்படி இல்லாமல் நேர்மையாக வாழ்பவர்களும் உண்டு. இதில் நிறைய முரண்பாடுகளும் உண்டு. குற்றம் செய்வதற்கான காரணங்களாக ஒருவர் எதைக் கூறுவார்? ஒருவரின் ஆளுமைச் செயல்பாடுகள், குடிப்பழக்கம், புத்திசாலித்தனம் ஆகியவையும் முக்கியமானவை.

இதில் எக்ஸ் ஒய்ஒய் சிண்ட்ரோம் பிரச்னையும் உள்ளது. ஒருவரின் உடலில் உள்ள கூடுதலான ஒய் குரோமோசோம், அவரின் ஆளுமையை, பழக்கத்தை மாற்றியமைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவரின் மூளையில் நடக்கும் வேதிமாற்றங்கள், அவரின் செயல்பாடுகளுக்கு பின்னால் மறைந்திருக்கும். ஒருவகையில் செயல்பாட்டை மூளையில் நடைபெறும் வேறுபட்ட செயல்பாடுகளே தீர்மானிக்கின்றன. இதை அடையாளம் காணவென இசிஜி ஆய்வுகளை உளவியல் ஆய்வாளர்கள் அடையாளம் காட்டினர். ஒருவரின் மூளையில் ஏற்படும் சேதம், புற்றுநோய் கட்டிகள் ஆளுமையை மாற்றுகின்றன என்று கிளெட்ச்கா, மன்ரோ ஆகிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர். அதேசமயம், இசிஜி மூலம் பெறும் முடிவுகளை வைத்து ஒருவரின் குண இயல்புகளை அடையாளம் காண்பது தவறு என்றும் சில ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள்.  

அடுத்து நாம் ஷெல்டன் என்ற ஆய்வாளர் கூறிய மூன்று வகை ஆளுமை வகைகளைப் பார்ப்போம்.

 படம் - ஃபைன்ஆர்ட் அமெரிக்கா



கருத்துகள்