கிராமத்து முத்துவீரன் பாம்பேவில் முத்து பாயாக மாறும் கதை! - வெந்து தணிந்தது காடு - கௌதம்

 





வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு




வெந்து தணிந்தது காடு

இயக்கம் கௌதம்

இசை – பாடல்கள் - ஏ ஆர் ஆர்

 பாடல்கள்-  தாமரை

கதை – ஜெயமோகன்

நடுவக்குறிச்சி அருகே கிராமத்தில் முள்வேலிகளை விறகுக்கு வெட்டி பிழைக்கும் முத்துவீரன், மும்பைக்கு பிழைக்கச் செல்கிறான். அங்கு நேரும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையை மாற்றிப்போடுகின்றன. அப்படி அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை.

முத்துவீரன் பாத்திரம்தான் படத்தில் முக்கியமானது. வன்முறை வழி அவனை பிடிக்கும் என ஜாதகத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவனது அம்மா, ஊரில் அல்லாமல் வேறு மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்புகிறாள். சேர்வத்துரை என்பவர்தான் முத்துவை மும்பைக்கு கூட்டிச்செல்வதாக ஏற்பாடு. ஆனால் அவரே கூட எதிர்பாராத சிக்கலால் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஆனால் அவர் மூலமாக முத்துவுக்கு துப்பாக்கி கிடைக்கிறது. அதை எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிறான். ஏன் அப்படி செய்தான் என அவனுக்கு புரிவதில்லை. ஆனால் சேர்வதுரை மாமாவுக்கு கெட்டபெயர் ஆக கூடாது என அந்த நேரத்தில் யோசிக்கிறான். ஊரில் துப்பாக்கி மீது கைவைப்பது அவனது வாழ்க்கையை மாற்றுகிறது.

இசக்கி புரோட்டா கடையில் அவன் வேலைக்கு சேருகிறான். ஹோட்டல் வேலையை விட அதிக ஆட்கள் இருப்பதாக தோன்றுகிறது. அதைப் பற்றி கேட்டாலும் கூட யாரும் அந்த கேள்விக்கு பதில் சொல்வதில்லை. சொல்லமுடியாத ரகசியம் மறைந்துள்ளது என விரைவில் முத்துவீரன் கண்டுபிடிக்கிறான். மும்பை நகரம், அங்கு வாழும் தமிழர்கள், மலையாளிகள் குழு மோதல் என நிறைய விஷயங்களை படம் தொட்டு செல்கிறது.

படத்திற்கு பெரும்பலம் என்பது படத்தின் கதையும், உரையாடல்களும், படத்தின் காட்சிகளை நெருக்கமாக தொடர்ந்து நமக்கு உணர்ச்சிகளை கடத்தும் இசையும்தான்.

படத்தில் அனைத்தும் இயல்பானதாக அமைந்துவிட்டது சரிதான். ஆனால் பாடல்களை வாயசைத்து பாடுவது ஒட்டவில்லை. காதல் பகுதி படத்தில் வரும் நெருக்கடி, அழுத்தத்தைக் குறைக்கவே உதவுகிறது. மற்றபடி அதில் ஏதுமில்லை.

முதல் பாகம் முடியும்போதே அடுத்த பாகத்திற்கான கதையை சொல்லிவிடுகிறார்கள். இரண்டு பாகங்களில் படம் முழுமையாக முத்து வீரனின் கதையை சொல்லி முடிக்கலாம். சிம்பு படத்தில் இளமையாக இருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. உடல் எடையைக் குறைத்து நடித்திருக்கிறார். கதைக்கு ஏற்ப உடல்மொழியை மாற்றி நடக்கிறார். பேசுகிறார். வன்முறையை விட்டு விலக முயன்றாலும் கூட அந்த வன்முறை அவனது வாழ்க்கையில் முக்கியமான பகுதியாகிறது. அதுதான் படம் சொல்லும் மையமான செய்தி. நாயக துதியோடு கையில் துப்பாக்கியை முத்து வீரன் ஏந்தவில்லை என்பதே படத்தின் வெற்றி. அவன் ஏந்தும் சூழ்நிலை வரும்போதெல்லாம் பிறரின் உயிருக்கு ஆபத்து நேருகிறது. அந்த நேரத்தில் அவன் இரும்பை அதாவது துப்பாக்கியை கையில் எடுக்கிறான். இந்த தன்மைதான் படத்தை தனித்துவமாக்குகிறது. 

கர்ஜி இறந்தபிறகு, இசக்கி ஹோட்டலில் அங்கு வேலை செய்பவர்களுக்கும் அவனுக்கும் நேரும் மோதல், ஆட்கள் பெரும்பாலானோர் அவன் பக்கம் வந்து நிற்பதோடு படம் நிறைவடைந்துவிடுகிறது. அதற்கு பிறகு காட்சிகளை இரண்டாம் பாகத்திற்கு இழுத்திருக்கிறார்கள்.

வெந்து தணிந்தது காடு திரைப்படம் நடிகராக சிலம்பரசனுக்கும், இயக்குநராக கௌதமுக்கும் முக்கியமானதாக மாறியிருக்கிறது. 

இனி நீதாம்லே –முத்துவீரா!

கோமாளிமேடை டீம்


கருத்துகள்