நாட்டுக்குப் போராடிய ராணுவ வீரன், 5 ஏக்கர் நிலத்தைக் காக்க எம்எல்ஏவை எதிர்த்து நின்றால்... சண்டி - ரவிதேஜா

 















சண்டி

ரவிதேஜா, சார்மி, அதுல் குல்கர்னி, டெய்ஸி போபனா

 

ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் சண்டி. அப்படி வரும் நிர்பந்த சூழ்நிலை, அவனது அப்பா மாரடைப்பால் இறந்த காரணத்தால் ஏற்படுகிறது. அப்பாவும், கண் பார்வையற்ற தங்கையும்தான் அவனுக்கு ஒரே சொந்தம். அப்பா இறந்த காரணத்தால் கிராமத்தில் தங்கி தங்கையைப் பார்த்துக்கொண்டு அவளுக்கு மணம் செய்ய நினைக்கிறான்.

இந்த நேரத்தில் அந்த ஊரில் உள்ள எம்எல்ஏ ராணுவ வீரன் சண்டிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க நினைக்கிறான். அதை கைப்பற்றி சாலை போட்டுவிட்டால் அருகில் உள்ள தொழிற்சாலையை எளிதாக இயங்க வைக்கலாம் என நினைக்கிறார். இதற்கு அவர் செய்யும் செயல்களும், அதற்கான ராணுவ வீரன் சண்டியின் எதிர்வினைகளும்தான் படம்…

நிலம் அதை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதுதான் மையக் கதை. நிலத்தை அடிப்படையாக வைத்துத்தான் பார்வைத்திறனற்ற தங்கையை கல்யாணம் செய்துகொடுக்க வேண்டும் என நிர்பந்தம் சண்டிக்கு உள்ளது. பிறகுதான் அவன் திருமணம் செய்துகொள்ள முடியும். நிலம் பற்றிய சிக்கல்கள் எழும் நேரத்தில் அவனை இரு பெண்கள் காதலிக்கிறார்கள். ஒருத்தி, உறவுக்காரப் பெண். இன்னொருத்தி அதுல் குல்கர்னியின் தங்கை. இவர்களை வைத்தே பாடல்காட்சிகளை ஈடுகட்டுகிறார்கள். டெய்ஸி போபனா, சார்மி என இரண்டு பேர்களுமே கவர்ச்சிக்குத்தான் உதவுகிறார்கள். அதற்கெனவே நிறைய காட்சிகள் இருந்தாலும் கதையின் போக்கிற்கு உதவும் சில காட்சிகளிலும் அவர்களை இயக்குநர் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். டெய்ஸி சண்டியின் வீட்டில் அவனை மணக்க வந்து உட்கார்ந்திருக்கும் காட்சி… சண்டி அதுலுக்கு பதிலளித்து டெய்ஸியை காயப்படுத்தி பேசும்போது பதிலுக்கு அவள் பேசும் வசனம்…

சார்மியைப் பொறுத்தவரை அவர்தான் சண்டியின் அப்பா எப்படி இறந்தார் என்பதைக் கூறுகிறார். அதனால் அவர் கதைக்கு முக்கியமானவராகிவிடுகிறார்.

படத்திற்கு ரவிதேஜா, அதுல் குல்கர்னி என இருவருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தனக்கு வேண்டும் என்பதை எப்படியாவது பெற வேண்டும் என வெறியை, வேட்கையை கண்ணில் காட்டி நடித்திருக்கிறார் அதுல். ரவிதேஜா எப்போதும் போல அண்ணனாக, தந்தை மீது பாசம் கொண்ட மகனாக காதலிகளை கேலி செய்யும் காதலனாக திரையில் இருந்து பார்வையை விலக்க முடியாதபடி நடித்திருக்கிறார்.

எம்எல்ஏ என்ற அதிகாரத்தில் அதுல் ஏறத்தாழ தான் நினைப்பதை பெரும்பகுதி செய்துவிடுகிறார். பிறகு சண்டிக்கு, அவரது அப்பாவை கொன்றது எம்எல்ஏ என தெரிந்து அவரை பழிவாங்குவது எதற்கு? ஆனாலும் கூட இறுதியாக அவரை நேரடியாக கோடாரி, இரும்புக் கம்பி, கத்தி என கொல்லாமல் அவரைப் பற்றிய உண்மைகளை ஊருக்கு சொல்ல முயன்றது நல்ல விஷயம். தெலுங்குப்படம் என்பதால் நாயகன் கையால் வில்லன் இறப்பது தவிர்க்க முடியாத காட்சி….

நட்புன்னா உயிரைக்கொடுப்பேன். வம்புன்னா வகுந்துடுவேன்

கோமாளிமேடை டீம்

 

 

 

 

 


கருத்துகள்