விழிப்புணர்வுடன் செய்யப்படும் கொலைகள்- ராபர்ட ஹரேவின் பணிக்கால வாழ்க்கை

 













கொலைகளை செய்கிறார்களே இவர்களுக்கு பைத்தியம் ஏதும் பிடித்துவிட்டதாக என சிலர் நினைக்கலாம். அப்படியெல்லாம் கிடையாது. தான் செய்வது என்னவென்று செய்யும் கொலையாளிகளுக்கு தெரியும். அவர்கள் அதற்கான இயல்பில்தான் கொலைகளை செய்கிறார்கள். அதை தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கிறார்கள். இதில் சைக்கோபாத்களுக்கு உள்ள பொதுவான தன்மை, சிறுவயதில் வன்முறையை, அவமானங்களை, மாறாத துயரங்களை அனுபவிப்பது. இப்படி பாதிப்புகளை எதிர்கொள்ளும் அனைவருமே பிறரை கொல்வதில்லை. சமூகத்தை வதைப்பதில்லை. சிலர் மட்டும் அந்த வலியில் இருந்து மீளாமல் நின்றுவிடுகிறார்கள். பிறகு ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நினைத்துப் பார்க்க முடியாத வலியைக் கொடுக்கிறார்கள்.

இவர்களை நாம் சரியாக அடையாளம் காணாதபோது நாமே கூட அவர்களுக்கு இரையாகி இறந்துபோகலாம். ஏன் இறந்தோம் என்பதற்கான காரணத்தைகொலைகாரர் பிடிபடும்போது கூறுவார். அல்லது அவரது பினாமியாக பத்திரிகையாளர்கள் நூல்களை எழுதுவார்கள் கே.என்.சிவராமன் போல நூல்களை சாதனை விலையில் விற்பார்கள். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறதுதான். இன்று சமூகத்தில் நிலவும் பிரச்னை என்னவென்றால் குற்றத்தைப் பொறுத்து தண்டனையா, வயதைப் பொறுத்து தண்டனையா என்பதுதான். சட்டம் என்பது அனைத்து பிரிவினருக்கும் பொதுவான எதிர்ப்பு எழாத வண்ணம் உருவாக்கப்படுவதுதான். ஆனால் மாறி வரும் காலத்திற்கேற்ப சட்டங்களை மேம்படுத்தவேண்டும். இதில்தான் சில அரசியல் தலைவர்கள் பின்வாங்கி விடுகிறார்கள். அனைத்து விஷயங்களிலும் தனக்கான பயன் என்ன என்று பார்த்து செயல்படுவதுதான் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுவதற்கான காரணமாக உள்ளது.

உளவியலாளர்கள் மேலே கூறியுள்ளபடி நிறைய சித்திரிப்புகளை தங்கள் நூல்களில் கூறுவது உண்டு. இதில் சங்கடம் என்னவென்றால், நாம் எங்காவது சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அது உறவினர்கள் வீடு அல்லது நண்பர்களின் வீடாக இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் திடீரென நீங்கள் கூறும் சைக்கோபாதிகளின் அறிகுறிகள் என்னுடைய மேலாளருக்கு பொருந்துகிறது. மாமனாருக்கு மேட்ச் ஆகிறது என்று  சொல்லும்போதுதான் சங்கடம் உருவாகும்.

அலுவலகம், வீடு, அல்லது தினசரி செல்லும் இடம் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஏதாவது ஒரு நபர் விஷம் கொண்டவராக இருப்பார். எதிர்மறையாக பேசுவார். பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அது உன் பாவம் என்பார். மகிழ்ச்சியான விஷயம் சொல்லும்போது துக்கமான மற்றொரு விஷயத்தை சொல்லி அந்த மனநிலையை உடைப்பார். இதனால் எழும் விரக்தியில்தான் பலரும் சைக்கோபாத்தாக இருப்பானோ என புலம்புகிறார்கள். முத்திரை குத்துகிறார்கள்.

ராபர்ட் ஹரே புகழ்பெற்ற உளவியலாளர். இவர் உளவியல் படிப்பை முடித்துவிட்டு முனைவர் படிப்பில் சேர சிறு இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியில் படித்த விஷயங்களை நடைமுறையில் தெரிந்துகொள்ள சிறை ஒன்றுக்கு சென்று உளவியலாளராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் இருந்தார்.

அங்குதான் ராபர்ட், ரே என்ற குற்றவாளியை சந்தித்தார். ரே, கொலைகளை செய்த குற்றத்திற்கான தண்டனை அனுபவித்து வந்தார். திருந்தி வாழ முயன்றால் அதற்கு நீதிமன்றம் பிணை வழங்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, ஏராளமான பொய்களை நினைத்தது போல சொல்வது அவர் வழக்கம். அப்படித்தான் ஒருமுறை ராபர்ட்டை சந்தித்தார். தன்னிடமிருந்து கத்தியை நீட்டி சிறைவாசி ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்துகிறார். அவரை குத்தப்போகிறேன் என்று கூறினார். ராபர்ட்டிற்கு ஆபத்திற்கான சிவப்பு பட்டனை அழுத்துவதா இல்லை அப்படியே அமைதியாக விட்டுவிடுவதா என்று யோசித்தார். கத்தியை வைத்து சக கைதியை ரே குத்துவாக சொன்னதை அதிகாரிகளிடம் சொல்லவில்லை. அதைப் புரிந்துகொண்ட ரே, ராபர்ட்டிடம் தன்னை நல்லவன் போல காட்டிக்கொண்டு சிறையில் பல்வேறு பிரிவுகளுக்கு மாறி சென்று வேலை பார்த்தார். சமையல் அறையில் வேலை பார்த்த காலத்தில், அங்குள்ள பொருட்களை வைத்தே சாராயம் தயாரித்து மாட்டிக்கொண்டார். ரேயைப் பொறுத்தவரை ராபர்ட் கற்றுக்கொண்டது என்னவென்றால், அவரது பொய் வெளியானால், தவறுகளை பிறர் அறிந்தாலும் கூட எந்த முக மாற்றமும் இல்லாமல் வந்து புதுகதையை சொல்லுவார். பிறரை பயன்படுத்திக்கொள்ள முனைவார். ஒருமுறை ராபர்ட் வாங்கிய பழைய காரைக் கூட புதுப்பித்தது சிறையிலுள்ள கார் பழுது பார்க்கும் நிலைய ஆட்கள்தான். அங்கு அப்போது ரே வேலை பார்த்தார். அந்த காரில் ராபர்ட் ஏறி தனது குடும்பத்துடன் நீண்ட தொலைவுக்கு சென்றபோது கார் திடீரென ஓடவில்லை. சோதித்தபோது, ரே காரின் பிரேக்கை வெட்டி வைத்திருந்தார் சாலையில் இறந்திருக்க வேண்டிய உளவியலாளர் ராபர்ட் தப்பி பிழைத்தார்.

பிறகு பிணையில் வெளியே வந்தவர், ராபர்ட் வேலைசெய்த பல்கலைக்கழகத்தில் படிப்பு ஒன்றைப் படிக்க வந்தார். வந்தவர், அங்குள்ளவர்களிடம் நான் ராபர்ட் சாரிடம் உதவியாளராக வேலை செய்திருக்கிறேன். அவருக்கு நான் எந்தளவு நெருக்கம் தெரியுமா? என பேசிக்கொண்டிருந்தார். நல்லவேளையாக ரே, ராபர்ட் நடத்தும் பயிற்சி வகுப்பில் சேரவில்லை என்பதே அவருக்கு நிம்மதியாக இருந்தது.


கருத்துகள்