சிறுவயது குற்றங்களுக்கான காரணம்- பிறப்பா?, வளர்ப்பா?, சமூக அழுத்தங்களா?

 




 









அசுர குலம் 5



ஆங்கில நாளிதழ்களில் கூட சைக்கோபதி குற்றவாளிகளைப் பற்றி போகிற போக்கில் பொதுவான சில கருத்துகளை கூறிச்செல்வார்கள். அதாவது அதில் வரும் துண்டு துண்டான காமிக்ஸ் பகுதிகளில் இதைக் காணலாம். இப்படி தவறாக கூறுவது, பதிவாக மாறிவிடுகிறது. சைக்கோபதி நபர்களை இந்த முறையில் கீழ்மையாக வகைப்படுத்துவது தவறு.

சிறுவயதில் ஏற்படும் வறுமை, பாலியல் இன்பத்திற்காக வல்லுறவு செய்யப்படுவது ஆகியவை அவர்களை மடை மாற்றுகிறது. மனதை உடைக்கிறது. இப்படி உடைபடும் மனம் வழிகெட்டு போகிறது. பின்னர் அது சரியான போக்கிற்கு திரும்புவது கடினம். மூளையின் திறன் குறைந்துபோகிறது. தங்கள் மேல் எழுப்பும் கேள்விகளுக்கு வன்முறையாலே பதில் தர முயல்கிறார்கள். மன அழுத்தம், போதை மருந்து பயன்படுத்துவது, தற்கொலை முயற்சி ஆகியவையும் அதிகரிக்கிறது. பிறகு கொள்ளை முயற்சி, வன்முறைத் தாக்குதல் என சீர்திருத்தப் பள்ளி, காப்பகம் செல்லச் செல்ல குற்றங்களை செய்வதில் நுட்பமான தேர்ச்சியை பெறுகிறார்கள். பிறகு அவர்கள் சமூகத்தின் விதி என்பதற்குள் வரவே மாட்டார்கள். அவர்களின் உலகம் தனியாக மாறிவிடுகிறது.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆறரை வயது சிறுமி, கேட். இவளை பெற்றோர் இரவில் தூங்கும்போது தனிஅறையில் அடைத்து பூட்டிவிடுகிறார்கள். ஏன் இப்படி அடைக்கிறார்கள் என கென் மேகிட் கேட்கிறார். அதற்கான பதில் பார்க்க அழகாக இருக்கும் கேட்டின் மனதில் என்ன இருக்கிறது என்பதை பதைபதைக்க சொல்லும் கதை. கேட், அவளின் தம்பி மார்க் என இருவருமே குழந்தைகள் இல்லம் ஒன்றில் இருந்து  தத்து எடுத்து வளர்க்கப்படுகிறவர்கள்தான். இதில் கேட்டிற்கு சிறுவயதில் பெற்றோரிடம் தேவையான அன்பு கிடைக்கவில்லை. பாலுறவு ரீதியாகவும் அவள் சுரண்டப்பட்டாள். இதன் விளைவாக அவளது மனதில் வன்முறை தீ போல பெருகி வளர்ந்தது. அதன் விளைவுதான் அவள் இரவில் யாரும் பார்க்காதபோது தனது தம்பியை வயிற்றில் இடையறாது குத்துவது, வாய்ப்பு கிடைத்தால் அவன் தலையை சுவற்றில் மோதுவது, விலங்குகளை குண்டூசியால் குத்தி சித்திரவதை செய்வது…. இந்த செயல்களின் இறுதி நோக்கம் கொலைதான். 

சிறுவயதில் குழந்தையாக கேட் இருக்கும்போதே அவளுக்கு பெற்றோருடன் உறவு பிணைப்பு ஏற்படவில்லை. அப்படி ஏற்படாததால் தனது, அப்பா, அம்மா, தம்பி என மனதில் அன்பு உருவாகவில்லை. இதுதான் பிரச்னைக்கான அடிப்படை. இதைப்பற்றி ஆராய்ந்த கென் மாகிட், ஹை ரிஸ்க் என நூலை எழுதி வெளியிட்டார்.  அன்பு, பிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை என்ற ரீதியில் கென் எழுதியது போல பலரும் உளவியல் பிரச்னைகளை , குறைபாடுகளை அணுகியிருக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கு அடிப்படையான அறிவியல் ஆதாரங்கள் கிடையாது.

சைக்கோபதி என்ற பிரச்னையில் உயிரியல் ரீதியாகவும், சமூக அழுத்தம் என்ற ரீதியிலும் உளவியலாளர்கள் பிரச்னையை அணுக வேண்டும்.  குடும்பம் என்பதை குற்றத்திற்கான அடிப்படையாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் நல்ல குடும்பம் என்றாலும் சிலர் தவறுகளை சிறுவயது முதலே செய்யத் தொடங்குகிறார்கள். பிறகு தங்களின் பிரச்னைகளுக்கு, ஏமாற்றுதலுக்கு குடும்பத்தையே பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதில் அவர்களுக்கு எந்த வருத்தமும்  இருக்காது. தங்களை காப்பாற்றிக் கொள்ளுதல் மட்டுமே மிஞ்சுகிறது.

தங்களுக்கு ஏற்படும் அவமானம், வருத்தம் என அனைத்திற்கும் மருந்தாக வன்முறையில் மூழ்கி எழுவதையே அதற்கான தீர்வாக நினைக்கிறார்கள். குடும்பம் ஓரளவு நிலையாக இருந்தால் குற்றங்கள் குறைந்திருப்பது உண்மையே. குடும்பம் சீரற்று இருக்கும்போது, குழந்தைகளும் குற்றங்களை செய்வது தவறு அல்ல என்ற மனநிலைக்கு வருகிறார்கள். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, சந்தோஷம் என சுயதிருப்திக்கான பதில்களை சொல்லியபடி வாழ்கிறார்கள். குற்றம் செய்யும் சிறுவர்கள் தோராயமாக பதிமூன்று அல்லது பதினான்கு வயதில் நீதிமன்ற கூண்டு ஏறிவிடுகிறார்கள்.

கனடாவில் நடந்த குற்றக்கதை.  அங்கு வாழ்ந்த சிறுவயது குற்றவாளிக்கு வயது பதிமூன்று. அதற்குள் ஒரு கொலை செய்து மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுவிட்டார். இதற்கு காரணம், மரிஜூவானாவை அதை விற்றவன் தரவில்லை என்பதுதான். இதற்கு முன்னர் சிறுவன், பள்ளிக்கு போகாமல் ஊர் சுற்றுவது, வீடுகளை கொள்ளையடிப்பது, சில இடங்களை நெருப்பு வைத்து கொளுத்துவது, மரிஜூவானாவை வாங்கி பயன்படுத்துவது என இருந்திருக்கிறார். கோகைன் கூட சிலமுறை பயன்படுத்தி சாதனை செய்திருக்கிறார். விதிகளை மதிக்காத காரணத்தாலும் திருட்டுகளாலும் பள்ளியிலிருந்து பலமுறை வெளியேற்றப்பட்டிருக்கிறார். 

சைக்கோபாத்களில் நிறைய ஆட்கள் கொலைக்குற்றம் செய்பவர்களல்ல. அதாவது நேரடியாக மனிதர்களை கொலை செய்கிறார்கள் என்றால் இன்னும் சிலர் கைகளில் கறை படியவில்லை என்றாலும் மறைமுகமாக  ஊரை, நகரை கெடுத்து நாட்டை சுரண்டுகிறார்கள். இதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள், வாழ்க்கை அழிகிறது என்பதை ஆய்வாளர்கள் கூட அறிவதில்லை. இவர்கள் ஒயிட் காலர் குற்றவாளிகள்.

தவறுகளுக்கு தீர்வு என்பது, ஒருவரை விஷவாயு அல்லது விஷ ஊசி, மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதல்ல. குற்றவாளியின் மனதை தவறுக்கு வருந்தும்படி செய்து திருத்துவதே. திரும்ப அவர் சமூகத்தில் வாழும்படியான சூழலை உருவாக்குவதுதான். ஆனால் அரசே அமைதியாக நடைபெறும் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடுகிறது. விசாரணை அறையில் அழைத்துச் செல்லப்படும் நபர் அடித்துக் கொல்லப்படுகிறார், ஒருவர் அரச பயங்கரவாதம் காரணமாக கொல்லப்படும் நிலையில் அதை அவரை சுற்றியுள்ளவர்களே தவறு என போராடாதபோது அது அழுகிப்போன சமூகம் என்றுதான் அர்த்தம். அப்படிப்பட்ட இடத்தில் குற்றங்கள் சட்டப்பூர்வமாகும். வேறென்ன நடக்க முடியும்.

‘’ஆசிரியரை தாக்கினேன் என்று என்னை பள்ளியிலிருந்து  நீக்கினர். சமூக செயல்பாட்டாளர், இவன் கெட்டுப்போய்விட்டான். இவனை சம்மர் கேம்புக்கு அனுப்புங்கள் என்றார். பதினேழு வயதில் வல்லுறவு வழக்கில் கைதானேன். சோதித்த உளவியலாளர், இவன் ஒரு சைக்கோபாத். சிறையில் அடையுங்கள் என்றார். அந்த தண்டனை என் வாழ்க்கையை அழித்துவிட்டது. நான் அழுகிப்போன நபர் என என்னைச் சுற்றியுள்ளவர்கள் நினைத்தார்கள். நான் அதை சரியென நிரூபித்தேன்.’’ என இளைஞர் ஒருவர் உளவியலாளரிடம் கூறிய வாக்குமூலம் இது. பதினொரு வயதில் தொடங்கிய குற்றவாழ்க்கை அவருடையது.

Images -fine art america

கருத்துகள்