குற்றம் செய்பவர்களை அடையாளமறியும் உளவியல் கோட்பாடு!- டிப்ரசன்ஷியல் அசோசியேஷன் தியரி

 








டிஃப்ரன்சியல் அசோஷியேஷன் தியரி  என்ற கோட்பாட்டை சூதர்லாந்த் என்பவர் உருவாக்கினார். 1939இல் எழுதப்பட்ட இக்கோட்பாடு, பின்னாளில் சற்றே மாறியது. இதன் வழியாக குற்றம் நடைபெறுவதற்கான காரணம், எப்படி குற்றம் என்பது நடக்கிறது, அதை செய்பவர் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம்.

குற்ற இயல்பு என்பது கற்றுக்கொள்ளக் கூடியது.

குற்றச்செயல்பாடுகளை அதை செய்பவர்களிடமிருந்து எளிதாக கற்கலாம்.

இப்படி கற்கும் செயல்பாடு நெருங்கிய நண்பர்கள் குழுவில்தான் தொடங்குகிறது

குற்றங்களை செய்வதற்கான நுட்பங்கள், பாணிகள், காரணங்கள் மாறுபடக்கூடியவை.

குற்றத்தின் காரணங்களைப் பொறுத்து அதற்கான தண்டனை என்பது சட்டத்தின் கீழ் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக அமையலாம். இது, சட்டத்தின் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது.

ஒருவர் தரும் வாக்குமூலப்படி அவர் சட்டத்தை மீறிய குற்றவாளியாக கருதலாம் அல்லது அவர் கூறும் கூற்றுப்படி சட்டத்தை மீறவில்லை என்றும் முடிவெடுக்கலாம்.

ஒரு விஷயத்தைக் கற்பது என்ற அடிப்படையில் அவரின் ஆர்வம், ஆழமாக ஆய்வு செய்யும் தன்மை, ஒத்த அலைவரிசை என பல்வேறு அம்சங்கள் மாறுபடலாம்.

ஒருவர் செய்யும் குற்றச்செயலின் வழியாக தேவை, மதிப்பு பற்றி அறிய முடியாது. ஆனால் பிறர் அப்படி நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த கொள்கைகளை ஒருவர் தான் செய்யும் குற்றங்களுக்கு அடிப்படையாக கூறமுடியும். இதெல்லாம் ஒரு விதியை யார் எப்படி பயன்படுத்துகிறாரோ அவரின் மனப்போக்கினைப் பொறுத்தது. இந்த டிப்ரன்ஷியல் கோட்பாட்டிற்கு நிறைய எதிர்வினைகள் வந்தன. குற்றங்களை கற்க குற்றவாளிகளைக் கொண்டுள்ள சிறுகுழுவே போதுமானது. இதிலும் குற்றங்களை கற்பது என்பது தனிநபர்களைப் பொறுத்து மாறுபடக்கூடியது. சிக்மண்ட் ஃபிராய்டிற்கு பிறகு கவனிக்கப்படத்தக்க உளவியலாளர் என அமெரிக்காவில் தேடினால் கிடைப்பவர், எஃப் ஸ்கின்னர். இவர் குற்றங்களைக் கற்பது, குற்ற இயல்புகளின் வளர்ச்சி ஆகியவை பற்றிய கோட்பாடுகளை உருவாக்கி வெளியிட்டார்.

செய்யும் செயல்களை நேர்மறை, எதிர்மறை என இரண்டுவிதமாக பிரித்தார். ஒன்றின்படி ஒரு வகையான செயல்களை செய்தால் விளைவுகள் பாராட்டும்படியாக இருக்கும். மற்றொருவகையான செயல்களை செய்தால், ஆபத்தான விளைவுகளை எதிர்கொள்ளும்படியாக இருக்கும்.

ஒரு செயலை செய்கிறோம். ஆனால் அதற்கான பின்விளைவை தெரியாமல் இருப்போமா? குற்றங்கள் இப்படி நடைபெறுவதில்லை. ஒருவர் சாலையில் வருகிறார். அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை திருடர் பறிக்கிறார். இப்படி செய்வதன் மூலம் அவருக்கு உடனடியாக கிடைக்கும் பயன், பொருளாதார ரீதியாக பணம். அடுத்து, இதன் பின்விளைவாக செக்யூரிட்டி கேமராவில் படம் பிடிக்கப்பட்டு காவல்துறை திருடரை சில நாட்களில் பிடித்து அடித்து உதைத்து கழிவறையில் விழுந்துவிட்டதாக கூறி கையை உடைத்துவிடலாம். இதெல்லாம் திருட்டு எனும் செயலின் பின்விளைவுகள்தான். ஆனால் இதையெல்லாம் திருடர் யோசிக்காமல் இருப்பாரா என்ன?  

ஒருவர் பின்விளைவுகளை அறிந்தாலும் கூட ஏன் திருடுகிறார்? அதற்கு வறுமை, வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவது, கல்வி அறிவின்மை, குடிப்பழக்கம் என நிறைய காரணங்களைக் கூறலாம். திருட்டு போன்ற சாகசங்களுக்கு ஒருவர் பழக்கப்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள முடியாது. ஒருவகையில் மனநல குறைபாடு போன்றதாகவே மாறிவிடும். இப்போது அடுத்த கோட்பாட்டைப் பார்ப்போம்.

சோஷியல் லேர்னிங் தியரி என்பதை 1954ஆம் ஆண்டு ராட்டர் என்பவர் கண்டுபிடித்தார். பிறரது செயல்களைப் பார்த்து அதன் அடிப்படையில் ஒரு விஷயத்தைக் கற்று செய்வது என புரிந்துகொள்ளலாம். இந்த கோட்பாட்டை விளக்கியவர் அமெரிக்க உளவியலாளரான ஆல்பெர்ட் பண்டுரா. குற்றங்களை செய்கிறார் என்றால் அதை ஒருவர் தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் என குறிப்பிட்ட வட்டாரத்தில்தான் எளிதாக கற்க முடியும் என்ற நோக்கில் பண்டுராவின் ஆய்வு அமைந்தது.  

சிறுவர்களை அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கிக் கொடுத்து ஏதோ ஒருவகையில் சிறு குற்றச்செயல்களைச் செய்ய வைக்க முடியும். ஆனால் அதேசமயம் அனைவரும் குற்றங்களை செய்வார்கள் என்று கூற முடியாது. இப்படி குற்றங்களைச் செய்ய வைப்பது அவர்களின் உளவியலை ஊனப்படுத்திவிடவும் வாய்ப்புள்ளது. சிறுவர்கள் அவர்கள் பழகும் சமூக உறவுகளிடமிருந்து, சூழல்களிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்கிறார்கள். இவை பாடநூல்களைப் போன்றல்ல. நேரடியாக வாழ்க்கையை வாழ உதவுபவை. அதேசமயம் நடைமுறை வாழ்க்கையில் கற்கும் விஷயங்களுக்கும் செய்யும் குற்றங்களுக்கும் நேரடியான அறிவியல் தொடர்பு இதுவரை கிடைக்கவில்லை. சமூக உறவு, சமூக சூழலும்தான் ஒருவரை குற்ற உலகிற்கு இழுத்துச் செல்கிறது என அழுத்தமாக கூறிவிட முடியாது.

 படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்