குற்ற வாழ்க்கையை மறக்காத சைக்கோபாத்கள்

 









ஜான் ஆட்டன் என்ற வல்லுறவாளர் உளவியலாளர்களிடையே வெகு பிரபலம். பெண்களையும், குழந்தைகளையும் வல்லுறவு செய்வார். அப்படி வல்லுறவு செய்யும்போது முகத்தில் பை ஒன்றை அணிந்திருப்பார். வல்லுறவு என்பதை பிறரை கட்டுப்படுத்த, சுயநலத்திற்காக சைக்கோபாத்கள் செய்கிறார்கள். இப்படி செய்யும்போது அவர்களுக்கு தாங்கள் இழந்த விஷயங்கள் கிடைப்பதாக நினைக்கிறார்கள். கோவிட் காலத்தில் கூட இரண்டு ஆண்டுகளில் நிறைய பெண்கள் வீட்டிலேயே கணவரால் தாக்கப்பட்டனர். கோவிட் காலம் முடிந்தபிறகு நிறைய குடும்பம் சார்ந்த வழக்குகள் வெளியே வந்தன. இப்படி மனைவியை தாக்கி, மூக்கை உடைத்த ஆட்களில் கூட சைக்கோபாத்கள் இருக்கலாம்.

மனைவி எளிதான இலக்கு என்பதால் வன்முறையில் இறங்கலாம். இதில் மனம் சார்ந்த தன்மையைச் சொல்வது என்றால், பொருளாதார சரிவு, எதிர்காலம் குறித்த பயம், வெளியே செல்ல முடியாத நிலை என நிறைய அழுத்தங்கள் ஆண்களுக்கு இருந்தன. வன்முறைக்கான காரணங்கள்  இப்படி இருக்கவே வாய்ப்பு அதிகம். சிறுவயதில் வன்முறை  கொண்டவர்களாக் பிறரை மிரட்டுபவர்களாக இருப்பவர்கள் பின்னாளில் எப்படி இருந்த மனுசன் என்று நினைக்கும்படி அடங்கிப்போகலாம். அமைதியாக இருந்தவர் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சி பெற்று பேச்சாளராக, அரசியல்வாதியாக மாறலாம். அனைத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிறுவயதில் உள்ள ஆக்ரோஷம், கோபம் ஆகிய குணங்கள் வாழ்க்கை முழுக்க வராவிட்டாலும் இளைஞராக உள்ள பருவத்தில் தொடர்ந்து வர வாய்ப்புள்ளது என உளவியலாளர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள்.

குற்றத்திற்கும் வயதிற்கும் ஏதாவது தொடர்பிருக்குமா என பார்த்தால் அதைப் பற்றியும் உளவியலாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஆனால் வயது என்பது குற்ற மனதைப் பொறுத்து பெரிய தடையில்லை. சிலர் இறக்கும வரையில் திருட்டு , கொலை, வல்லுறவு ஆகியவற்றை செய்கிறார்கள். வயதாகும்போது கொலை செய்வதில் உள்ள ஆர்வம் குறைந்து வேறு பொறுப்புகள் அதிகரித்தால் கூட குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.  

 சிலர் குற்றங்களில் ஈடுபட்டு திருந்தி வாழ்வதாக கூறினாலும் அவரது மனைவியே கூட அத்தாட்சி அளித்தாலும் அவர் கணவர் சைக்கோபாத்தாக இருக்கும்போது குற்றசெயல்களை மறைவாகச் செய்ய வாய்ப்புள்ளது.  இப்போது எர்ல் என்ற கைதி ஒருவரின் வாழ்க்கையைப் பார்ப்போம். குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். அதில் மூன்றாவது பிள்ளை எர்ல். கிண்டர்கார்டனில் படிக்கும்போது ஆசிரியர் எர்லை கட்டாயப்படுத்தி சீட்டில் உட்காரச் சொன்னார். அதற்காக ஃபோர்க் கரண்டியை எடுத்து ஆசிரியரை குத்தினார். பிறகு, பத்து வயதில் தன் கூட படித்த சிறுமிகளை பாலியல் ரீதியாக சில செயல்களை செய்ய வற்புறுத்தினார். தனது நண்பர்களுக்காக சொந்த சகோதரியைக்கூட இதுபோல செய்ய வைத்தார்.  பிறகு பெற்றோர்களைப் போலவே கையெழுத்துபோட்டு சிறுவர் சீர்திருத்த காப்பகம் சென்றார்.

திருட்டு, கொலை முயற்சி, தாக்குதல், மோசடி, வல்லுறவு, போக்குவரத்து விதிமீறல் என நிறைய விஷயங்களை  எர்ல் செய்தார். ஆனால் அவர் செய்த குற்றத்திற்காக குறைந்த ஆண்டுகளே சிறையில் இருந்தார். காரணம், எர்ல் தன்னுடைய நடத்தையை நல்ல மனிதராக மாற்றிக்கொண்டு விரைவில் வெளியே வந்துவிடுவார். 

படம் - பின்டிரெஸ்ட்

கருத்துகள்