சைக்கோபாத்களுடன் உறவு, பிரச்னைகளை எதிர்கொள்வது எப்படி?

 









சைக்கோபாத்களை திருமணம் செய்வது ஆபத்தானது. அப்படி செய்துவிட்டால் கூட முடிந்தளவு அவர்களை திருத்தலாம் என கருப்பு வெள்ளைப்பட காலகட்ட சிந்தனையை தள்ளிவைத்துவிட்டு அதில் இருந்து வெளியே வர முனையுங்கள். அதுதான் நல்லது. இன்னும் கொஞ்சம் சகித்துக்கொண்டால் எல்லாம் மாறிவிடும் என நினைத்து தாக்குதல்களை, துரோகங்களை, பிரச்னைகளை எதிர்கொள்வது மேலும் உங்களை சிதைத்துக்கொள்வதாகவே அமையும்.

உங்களை இப்படிபட்ட சைக்கோபாத்களிடமிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கொள்ளையடிக்கப்படும் வீடு என்ற அபாயம் இருக்கிறது என்றால் வீட்டில், வேட்டை நாயை காவலுக்கு வைத்திருப்பது சற்று பாதுகாப்பை அளிக்கிறது அல்லவா? அதுபோலத்தான் கூறப்படும் ஆலோசனைகளை புரிந்துகொள்ள வேண்டும்.

நீங்கள் யாருடன் போரிட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சைக்கோபாத்கள் எளிதாக பிறரை ஏமாற்றுவார்கள். உளவியலாளர்களைக் கூட… எனவே, கவனமாக இருப்பது அவசியம்.

சைக்கோபாத்களிடமிருந்து தப்பிக்க ஒரே வழி, அவர்களின் இயல்பைப் புரிந்துகொள்வதுதான். அதன்மூலம்தான் அவர்களை எதிர்கொள்வது சாத்தியம்.

ஒருவரின் வெளித்தெரியும் அடையாளங்களை வைத்து முடிவு செய்யாதீர்கள். அதாவது, உடல்மொழி, வேகமான பேச்சு, புன்னகை. இதில்தான் பலரும் ஏமாந்து போகிறார்கள். ஒருவரின் உடை, பளிச் சிரிப்பு, கண்ணியமான நடத்தை என்பதில் கவனம் செலுத்தினால் அவரது பேச்சில் வரும் உண்மையான செய்திகளை தவறவிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது.

 உணர்ச்சியற்ற வெறுமையான பார்வையை மனிதர்களிடம் சந்தித்திருப்பீர்கள். அப்படி ஆழமான கண் பார்வையை ஒருவர் பார்ப்பது பிறரை கட்டுப்படுத்தவும் அவரை அடக்கி ஆளவும்தான். இந்த வகையில் ஒருவர் பார்த்தால் பிறர் அதை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். இப்படி சைக்கோபாத்கள் பார்ப்பது அவர்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கான வழிதான்.

கண்களைப் பற்றி பேசும்போது கேரி டைசன் என்ற குற்றவாளி பற்றி பேசவேண்டும். இவர் தனது கண்கள் மூலம் மனதின் எண்ணங்களை மறைத்து வைத்து சிறையில் உள்ளவர்களை ஏமாற்றி அங்கிருந்து தப்பினார். பிறகு கொலைகளைச் செய்வதை தொடர்ந்தார். கேரியைப் பற்றிக் கூறும்போது உளவியலாளர்கள் , எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத ஆழமான வெறித்த பார்வையை அவரின் பலமாக கூறுகிறார்கள். பொதுவாக ஒருவரைப் பற்றி கூறும்போது கண்கள் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது என்பார்கள். ஆனால் சைக்கோபாத்களின் கண்களைப் பொறுத்தவரை கண்கள் சொல்லும் செய்தி வேறு. வாய் சொல்லும் விஷயம் வேறாக இருக்கும். உடலின் மொழி தனி. இது பலரையும் குழப்பிவிடும். நாம் பொதுவாக ஒருவரிடம் வழி கேட்டால் அவர் உடல்மொழி வாயிலாக எந்த திசையைக் காட்டுகிறாரோ அதைத்தான் பின்பற்றுவோம். வாயின் வழியாக கூறும் வார்த்தைகளை பெரிதாக நாம் கவனிப்பதில்லை. இது நமது உளவியலின் அடிப்படையான தன்மை.

காட்சி மனதைக் கவருவதைப் போல, ஒலி நம்மைக் கவருவதில்லை. இதை சைக்கோபாத்கள் மிகச்சரியாக டெமோ காட்டி தங்களுக்கு தேவையானபடி மனிதர்களை வளைக்கிறார்கள். மீனின் கண்கள், முதலையின் கண்கள் என பல்வேறு விதமாக சைக்கோபாத்களின் கண்களைக் கூறுகிறார்கள். இரக்கமே இல்லாத எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாத கண்கள். இவற்றை முதல்முறையாக ஒருவர் பார்க்கும்போது மனதில் ஒரு திடுக்கிடல் ஏற்பட்டு பின்வாங்கியிருக்கிறார்கள். தீயசக்தியின் ஆன்மா கண்களில் தெரிந்திருக்கலாம்.

சைக்கோபாத்க் தனக்கான பலியாடுகளை, இரையை ஓரினச்சேர்க்கையாளர் கிளப், பப், ரிசார்ட் ஆகிய இடங்களில் தனியாக இருக்கும் நபர்கள், தனக்கான துணையைத் தேடிக்கொண்டிருப்பவர்களைத்தான் பிடித்து கொல்கிறார்கள். எனவே, இந்த இடங்களில் உள்ளவர்கள் தங்களிடம் பேசுபவர்கள் பற்றி கவனமாக இருக்கவேண்டும். தனியாக சுற்றுபவர்களுக்கு நெருக்கமாகி அவர்களிடம் உள்ள பணத்தை தங்களுடைய செலவுக்காக பயன்படுத்திக்கொண்டு தலைமறைவாகும் ஆட்கள் நிறைய உண்டு.

சைக்கோபாத்கள் ஒருவரின் பலவீனத்தை அறிந்துதான் தங்களுடைய திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் உங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்திருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. சுதாரித்துக் கொள்ளலாம்.


கருத்துகள்