லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

 












மோட்டார் சைக்கிள் டைரிஸ்

சேகுவேரா

நன்றி

புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை

சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.

சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,  பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,  அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள்.

இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோய்வாய்ப்படுகிறார். மாத்திரைகளும் அட்ரினலின் ஊசியும் போட்டுத்தான் பயணத்தை நிறைவு செய்கிறார். நூலில் படிக்கும்போது சங்கடப்படும் பகுதி, அவர் கப்பலில் திருட்டுத்தனமாக பயணம் செய்து கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக வேலை வாங்கப்படுவதுதான்.

அர்ஜென்டினா, பெரு, பொலிவியா என பல்வேறு லத்தீன் நாடுகளுக்கு செல்பவர், மக்களின் விருந்தோம்பல் பண்பை அறிவதோடு வறுமை நிலை இருப்பதையும் அறிகிறார் சே. இதெல்லாம் பின்னாளில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம்.

மருத்துவமனைகளுக்கு சென்று இலவசமாக மருத்துவ சேவையை வழங்குகிறார். அங்கிருந்து விடைபெற்று செல்லும்போது நோயாளிகள், மருத்துவர்கள் பரிசுப்பொருட்களைக் கொடுக்கிறார்கள். அவர்களின் அன்பு பற்றி நூலில் இரண்டு, மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். சே, பல்வேறு இடங்களின் இயற்கை அழகை அற்புதமாக விவரிக்கிறார். காட்டின் அருகே உள்ள மலைப்பகுதி ஒன்றுக்கு ஆல்பெர்டோவுடன் சென்று வந்த அனுபவத்தை விவரிக்கிற பகுதி முக்கியமானது.

மகத்தான பயண அனுபவம்

கோமாளிமேடை டீம்

தமிழில் வாசிக்க விரும்பினால் கண்ணதாசன் பதிப்பகத்தின் வலைத்தளத்திற்கு சென்று தேடுங்கள். நூல் கிடைக்கும்.  


கருத்துகள்