பிற்போக்குத்தனங்களின் அவியல் - கிருஷ்ணா விரிந்தா விகாரி - அனிஷ் ஆர் கிருஷ்ணா - நாக சௌரியா, ஷிர்லி சேதியா

 















கிருஷ்ண விருந்தா விகாரி

இயக்கம் அனிஷ் ஆர் கிருஷ்ணா

ஒளிப்பதிவு சாய் ஶ்ரீராம்

இசை மகதி ஸ்வர சாகர்


மரபான ஐயங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவன், கிருஷ்ணா. இவன் ஹைதராபாத்தில் உள்ள சொந்தக்காரரின் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். அங்கு விரிந்தா இளம் பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறான். அவள் வட மாநிலத்துப் பெண். அவளுக்கு உடலில் ஒரு குறைபாடு இருக்கிறது. அதைசொல்லி திருமணம் வேண்டாம் என்கிறாள். ஆனால் கிருஷ்ணா, அவளுக்கு சாக்கு போக்குகளை சொல்லி மணக்கிறான். திருமணத்திற்கு பிறகு இருவரின் வீட்டாருக்கும் கலாசார வேறுபாடு, பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் பிற்போக்கு தனம் காரணமாக வேறு பாடு வர தம்பதிகள் பிரிகின்றனர். இறுதியில் இவர்கள் இணைந்தார்களா என்பதே கதை.

அன்டே சுந்தரானிக்கு என்ற தெலுங்குபடம் பார்த்திருப்பீர்கள். நானி நடித்து வந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருப்பார். சாதி, மதம், பெண்ணின் திருமணம், குழந்தைப் பேறு ஆகியவற்றை முற்போக்காக அணுகிய படம். அதேசமயம் அந்த சிக்கலான விஷயங்களை நகைச்சுவையாக அணுகியிருப்பார்கள்.

அந்த படத்தின் கதையேதான். ஆனால் அனைத்தும் இங்கே தோசையைத் திருப்பிப்போடு கணக்காக எதிர்மறையாக உள்ளது.

கிருஷ்ணாவுக்கு காதல் வேண்டும். ஆனால் அவர் காதலை எப்படி எங்கிருந்து எதிர்பார்க்கிறார் என்றால் படித்த, பெரிய பதவியில் இருக்கிற, சாதியில் மேலாக இருக்க பெண்.

முதல்நாள் அலுவலகத்திற்கு செல்லும்போது, சாலையில் ஒரு பெண் குளிர்பான கேன் ஒன்றை எடுத்து குப்பைத்தொட்டியில் போடுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியமான  கிருஷ்ணா அந்தப் பெண்ணுக்கு சிவப்பு ரோஜாவை நீட்டி வாழ்த்துகளை சொல்லுகிறார். அதாவது அந்த பெண்ணை அவர் பாராட்டுகிறார். ஆனால் அலுவலகத்திற்கு சென்ற பிறகுதான் தெரிகிறது, அவர் அப்படி சுத்தத்தைக் காப்பாற்றும் குணம் அங்கு தூய்மை பணியாளராக வேலை செய்வதிலிருந்து வந்திருக்கிறது என.. உடனே அந்த பெண்ணை காதலிப்பதிலிருந்து ஜகா வாங்குகிறார்.  சாதிய, பாகுபாடான மனம் எப்படி செயல்படுகிறது பாருங்கள். இந்தக் காட்சி தொடங்கி படம் நெடுகமுவே இதுபோல ஏராளமான பாகுபாடான, ஆணாதிக்க, பிற்போக்குவாத கருத்துகளை இயக்குநர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

நச்சுத்தன்மை வாய்ந்த பாத்திரம் என்பார்களே… அந்த வகையில் இந்த படத்தில் ராதிகா இருக்கிறார். மருமகள் வேலைக்குப் போக கூடாது. வீட்டு வேலை செய்யவேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும், கலாசாரம் மாறாமல் புடவை கட்டிக்கொண்டு பூஜை செய்யவேண்டுமென நினைக்கிறார். இவர் உண்மையில் எந்த உலகத்தில் இருக்கிறார் என்றே புரியவில்லை.

படத்தை சற்றேனும் பார்க்க உதவுவது சாய் ஶ்ரீராமின் ஒளிப்பதிவும், மகதி சாகரின் பின்னணி இசை மற்றும் பாடல்கள்தான். காமெடி நடிகர்கள் சங்கர், ராகுல் ராமகிருஷ்ணா, வெண்ணிலா கிஷோர் ஆகிய மூவரில் வெண்ணிலா கிஷோர் மட்டுமே தேறுகிறார். பிறருக்கு கதையில் அதிக இடம் கிடைக்கவில்லை.

படத்தில் ஒரு காட்சி. விரிந்தாவை காதலிக்க டார்ச்சர் செய்யும் இன்னொரு கூட்டம் இருக்கிறது. அதன் தலைவர்தான் கிருஷ்ணாவுக்கு ஆபீசில் வில்லன். இவர் ஆட்களோடு சண்டை நடக்கிறது. அதில் சிக்ஸ்பேக் உடலோடு கிருஷ்ணா சண்டை போடுகிறார். கிருஷ்ணாவின் உடல் தடகள வீரரின் உடல் போல கட்டான அமைப்பில் உள்ளது. எதிரில் உள்ள வில்லனின் ஆளுக்கு குஸ்தி போடும் ஆள் போல பருமனாக பெரும் தசைத்திரள் திரண்ட உடல் அமைப்பு. நாயகனைப் பார்த்து அவர் மனம் அவநம்பிக்கை கொள்கிறது. நடுங்குகிறார். அப்போது நாயகன் ஒரு வசனம் சொல்கிறார். உடலை கட்டாக வைத்துக்கொள்வது நமது நம்பிக்கைக்காக என சொல்லியபடி பூணூலை ஏதோ தன்மேல் பதக்கம் போல பெருமையோடு நீவுகிறார். எக்சர்சைஸ் செய்து உடலை கட்டாக வைத்தால் தன்னம்பிக்கை வருகிறது சரி… பூணூல் எதற்கு, நான் உன்னை விட உயர்ந்தவன் என பிறருக்கு சொல்வதற்கான சர்டிபிகேட்டா என்ன?

விரிந்தாவை மணந்து முதல் நாளிரவில் கிருஷ்ணா உறவு கொள்வதைப் பற்றி வசனம் ஒன்றைச் சொல்லுவார். விரிந்தாவின் குறைபாட்டை மீண்டும் நினைவுபடுத்துவது போல உள்ள வசனமது. 

பணியில் விருந்தா கிருஷ்ணாவை விட மேல் பதவியில் இருப்பவள். அவளை கிருஷ்ணா மணந்துகொள்கிறான். தன்மேல் குறையிருப்பதாக வீட்டில் சொல்லி பெண் தன்னை பெருந்தன்மையாக ஏற்கிறாள் என பொய் சொல்லித்தான் திருமணம் நடக்கிறது. ஆனால் திருமணம் நடந்தபிறகு, நகரத்தில் உள்ள மகனின் வீட்டுக்கு வரும் அம்மா ராதிகா செய்யும் டார்ச்சர்கள் எல்லாம் இது சன் டிவி சீரியலா, குடும்ப வன்முறை தொகுப்பா என்றே தெரியவில்லை.

நமது விருப்பங்களை பிறர் மீது திணிப்பதே வன்முறை என ஆகிவிட்ட காலத்தில் இப்படியொரு படம். நாக சௌரியா நடித்த படங்கள் எல்லாமே ஓரளவுக்கு இதுபோல நச்சுத்தன்மையாக கருத்துகள் கொண்ட படமாக இருந்தது இல்லை. ஆனால் அனிஷ் ஆர் கிருஷ்ணாவின் படம், நாக சௌரியாவின் படத்தின் கதையை கேட்டு நடிக்கும் திறனையே சந்தேகப்பட வைக்கிறது.


விரிந்தா பாத்திரத்தில் ஷிர்லி சேதியா நன்றாக நடித்திருக்கிறார். ராதிகா, நச்சுத்தன்மை கொண்ட பிற்போக்குதன மாமியாராக வாழ்ந்திருக்கிறார். இந்த படமே அவருக்கானதுதான். படத்தில் வேறு எதுவும் உருப்படியாக இல்லை.

மூடநம்பிக்கை, உயிரை வாழ்வை கொல்லும்

கோமாளிமேடை டீம்

images - filmy focus






கருத்துகள்