காதலுக்காக, காதலிக்காக எதையும் செய்வான் சார் இந்த காளி! ராராஜூ - கோபிசந்த், அவந்திகா, மீரா ஜாஸ்மின்

 










ரா ராஜூ (2006)

தெலுங்கு

கோபிசந்த், மீராஜாஸ்மின், அவந்திகா, வேணு மாதவ், எம்எஸ் நாராயணா

அதிகம் படிக்காத சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளவர், தான் விரும்பும் பெண்ணின் கல்விக்கு உதவுகிறார். பல்வேறு தடைகளைக் கடந்து அந்த பெண்ணை குடிமைப்பணி அதிகாரியாக்குகிறார். அவர் யார், எதற்கு இப்படி செய்கிறார் என்பதே படத்தின் கதை.

வணிகரீதியான பல்வேறு அம்சங்களை படம் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண் போலீசாக வரும் அவந்திகா, அவருக்கான கனவு பாடல்காட்சிகள். அதெல்லாம் விடுங்கள். படத்தில் வலிமையான பாத்திரங்கள். கோபிசந்தின் காளி, மீரா பாத்திரங்கள்தான்.

கட்டிலில் படுத்து தூங்கும் காளியின் அறிமுக காட்சியே சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாக இப்படி காட்சி வைப்பவர்கள் நாயகனை அடிதடி ஆள் என மிரட்டலாக யோசிப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அதை காமெடியாக மாற்றியிருக்கிறார்கள். நல்ல யோசனை சிறப்பாக வேலை செய்திருக்கிறது. ஒரே நேரத்தில் பயத்தையும் அன்பையும் ஊராருக்கு கொடுப்பவன்.

எதிர்மறையான விவரிப்புகளை காளி பாத்திரத்திறகு கொடுக்கும் இயக்குநர், பின்னர்தான் அந்த பாத்திரத்தின் நல்ல விஷயங்களைக் காட்டுகிறார். முன்கோபம் இருந்தாலும் பிறருக்கு உதவ நினைப்பவன், யாரையும் தேவையில்லாமல் காயப்படுத்தாத நல்லவன் என காட்டுகிறார்கள். குறிப்பாக நாயகி மீரா, காளி மீது காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு வருகிறார். அவரை சந்திக்கும் காளியின் அம்மா, அவரைப் பற்றிய உண்மைகளை கூறும் இடம்…

சிறந்த காட்சி

காளியைப் பற்றி பலரும் பேசிக்கொள்ளும் தொடக்க காட்சி. அடுத்து, மணப்பெண்ணின் அப்பா காளிக்கு பணம் கொடுக்க மொய்ப்பணத்தை நம்பியிருப்பதாக கூறுவதும் அதன் தொடர்ந்த காட்சிகளும்… இறுதிக்காட்சியில் தனது நிலையை உணர்ந்துகொண்டு, மீராவின் மனதில் உள்ள காதலைப் புரிந்துகொண்டு காளி பேசுவது…. மைக் செட்டிற்கு காசு கொடுக்காத அமைச்சரின் காட்சிகள்.. நகைச்சுவைக்கானவை. வேணுமாதவ், எம்எஸ் நாராயணா மதுபானக்கடை காட்சிகள்

அடச்சே காட்சி

ஆசிஷ் வித்யார்த்தியின் காவல் நிலைய காட்சிகள் பலவும். அதிலும் யார் அடித்தார்கள் என கன்னத்தில் அறைந்து காட்டி குற்றவாளியைக் கண்டுபிடிப்பது, திமிரு (2006) வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை நினைவுபடுத்துகிறது. யார் எந்த படத்தில் இருந்து திருடினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் திமிரு படத்தில் வடிவேலு வெர்ஷன் நன்றாக வந்துவிட்டது.  ஒரு பெண்ணை அவளது விருப்பத்திற்கு மாறாக பலவந்தப்படுத்துவது தவறான காட்சியாக இயக்குநர் உதய் சங்கர், கதாசிரியர் சிந்தப்பள்ளி ரமணாவுக்கு தெரியவில்லையா என்ன? மீராவை தனக்கு உடன்பட வைக்க ஆசிஷ் வித்யார்த்தி செல்வதை, காளி மாறுவேடத்தில் வந்து தடுப்பதைக் காமெடியாக மாற்ற முயன்றிருக்கிறார்கள்.

காதல் என்பது தனியானதல்ல. இன்னொருவரின் கனவை தன்னுடைய கனவாக ஏற்று,  நினைத்தை அடைய ஆதரவையும் அன்பையும் தருவதுதான் காதல் என காளி பாத்திரம் மூலம் இயக்குநர் சொல்ல முயன்றிருக்கிறார்.

கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்