சுதந்திரமான செக்ஸை அனுமதிக்காத ஆண்களுக்கு ஆர்சனிக் விஷமே பரிசு!

 










நாஜிரெவ் என்ற ஊரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திஸா என்ற ஆற்றின் வழித்தடத்தில் உள்ள புதாபெ|ஸ்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் நாஜிரெவ் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றவர் ஒரே ஒரு பெண்தான். அவர் பெயர், ஜூலியா ஃபாஸேகஸ்.

கணவர் இறந்துவிட்டார் என கிராமத்திற்கு திரும்பி வந்தவரான  ஜூலியாவிடம்,  உறவினர்கள் கணவரின் இறப்பு பற்றி அதிகம் விசாரிக்கவில்லை. அதை சரியாக அறிந்திருந்தால் சற்று கவனமாக இருந்திருக்கலாம். செவிலியராகப் பணியாற்றிய காலத்திலேயே ஜூலியா, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு கருக்கலைப்புகளை செய்தார். அதன் விளைவாக, நீதிமன்றத்தால் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார். ஆனால் பெண் என்று நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்போது சற்று தயை காட்டினர்.

பிறரின் கருணை பற்றியெல்லாம் ஜூலியா எப்போதும் கவலைப்படவில்லை. பிரச்னை என வருபவர்களுக்கு, கணவர் பற்றி புலம்புபவர்களுக்கு கையிலேயே நிரந்தரமான தீர்வை கொடுத்துவிட்டார். இதற்கான விளைவாக ஏராளமான மரணங்கள் நடந்தன.

முதல் உலகப்போரில் பிடிபட்ட வீர்ர்களை அடைத்து வைக்க நாஜிரெவ் கிராமம் சரியான இடமாக ராணுவத்தினரால் அடையாளம் காணப்பட்டது. அப்போது, ஆஸ்திரிய, ஹங்கேரிய பேரரசர் சார்பாக ராணுவத்தினர் போரிட்டு வந்தனர். கைதிகளை அடைத்து வைத்தாலும் அவர்கள் கிராமத்தில் சென்றுவருவதற்கு சில வரம்புகள் இருந்தன. கைதிகள் அங்கு வந்து அடைக்கப்பட்டதும், கிராமத்தில் கணவர் இன்றி விதவையாக வாழ்ந்து வந்த பெண்கள் எல்லாம் சுதந்திரமாக வெளிநாட்டு கைதிகளோடு இணை சேர்ந்தனர். விதவைகள் மட்டுமல்ல, திருமணமான பெண்கள் கூட வெளிநாட்டு கைதிகளோடு சுதந்திரமாக உடலுறவு கொண்டனர். இதை அறிந்த பெண்ணின் கணவர்கள், கொதித்து எழுந்தனர். பிறரோடு இன்பம் அனுபவிப்பது தவறு என தத்தம் மனைவியரோடு சண்டையிட்டனர்.  தாராளவாதிகளாக பெண்கள் மாறுவதை புரிந்துகொள்ளாத ஆணாதிக்கவாதி பன்றிகளின் கூச்சல் என்று கட்டுரை எழுதக்கூட அங்கு ஆட்கள் இல்லை. அந்த வேலையை தீவிரமாக ஏற்ற ஜூலியா, ஆண்களை ஒரு கைபார்த்தார். அமைதியாக வேலை செய்தே அத்தனை ஆண்களையும் பீதியடைய வைத்தார்.

கணவர்களின் வசையால், அவர்களின் கை, கால்களால் தாக்கப்பட்ட பெண்கள் ஜூலியாவிடம் சிகிச்சைக்கு வந்தனர். வரும்போதே தங்கள் பிரச்னைகளை புலம்பித் தள்ளினர். அமைதியாக காதையும், மனதையும் திறந்துவைத்துக் கேட்ட ஜூலியா, அனைத்துக்கும் சர்வரோக நிவாரணி என ஆர்சனிக் விஷத்தை எடுத்துக் கொடுத்தார். ஒரே மருந்து தனது வருத்தம் போக்கிவிடும் என்ற ஜூலியாவின் ஆறுதலை நம்பினர். உடனே செயலில் இறங்கினர். சாதித்து காட்டினர். 

 கணவர், பெற்றோர், பிள்ளைகள், மாமா, அத்தை என விஷத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. 1914ஆம் ஆண்டு தொடங்கியது கொலைகள் பட்டியல். 1921ஆம் ஆண்டு கிராமத்திற்கு ‘கொலை கிராமம்’ என பெயர் கிடைத்துவிட்டது. ஜூலியாவின் சிறப்பான சிகிச்சையால் 50 பெண்கள் தங்கள் குடும்பத்திலுள்ள ஆட்களுக்கு விஷம் வைத்து குடும்ப அட்டையிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். அந்த கிராமத்தில் ஒரே மருத்துவர் ஜூலியா, இறந்தவர்களை கணக்கெடுத்து இறப்பு சான்றிதழ் கொடுப்பவர்  ஜூலியாவிற்கு நெருங்கிய உறவினர்தான். அதாவது சகோதரர் உறவுமுறை. இதனால் இறப்பைக் குறைத்துக் காட்ட முடிந்தது.  1929ஆம் ஆண்டு ஒயின் குடித்த ஒருவர் ஆர்சனிக் விஷத்தால் பாதிக்கப்பட்டார் அதற்கு காரணம், லாடிஸ்லாஸ் என்ற பெண்மணிதான் என காவல்துறையில் புகார் சொன்னார். பிடிபட்ட பெண்மணி இன்னொருவரை அடையாளம் காட்டினார். இப்படியே காட்டிக்கொடுத்தல்  சென்று முடிந்த து ஜூலியாவிடம்தான். ஆம், அவர்கள்  வேதனையை நோயை சொஸ்தப்படுத்திய ஜூலியாவை காட்டிக்கொடுத்தனர்.

ஜூலியா தன் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்தார். காவல்துறையினரிடமும் ஆதாரங்கள் இல்லை. எனவே, ஜூலியாவை விடுதலை செய்துவிட்டு அவரைக் கண்காணித்தனர். அவர் சந்தித்த பெண்களை கைது செய்து விசாரித்தனர். கிடைத்த தகவல்களை வைத்து கைது செய்ய வரும்போது ஜூலியா தற்கொலை செய்து கீழே வீழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர்.

படம் - பின்டிரெஸ்ட் 


கருத்துகள்