நீரிழிவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க போராடும் விஞ்ஞானி! லெஜண்ட் - சரவணன் அருள், ஊர்வசி, கீத்திகா திவாரி

 









கோமானே பாடல் - கீத்திகா திவாரி




சரவணன் அருள்- தி லெஜண்ட்




The லெஜண்ட்

சரவணன், கீத்திகா திவாரி, ஊர்வசி ராய்ட்டலா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள்

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம் – ஜேடி –ஜெர்ரி

 

உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி, சரவணன். இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் தனது பால்ய நண்பனின் இறப்பால், பிறப்பிலேயே தொடங்கும் நீரிழிவு நோயைக் குணமாக முயல்கிறார். இந்த ஆராய்ச்சியால் உலகளவில் உள்ள மருத்துவ மாஃபியாக்கள் எரிச்சலாக, சரவணின் கருவுற்ற மனைவி கொல்லப்படுகிறார். இதனால் உடைந்துபோன சரவணன் சோகத்திலிருந்து மீண்டு தனது எதிரிகளை கண்டுபிடித்தாரா, நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்தை உருவாக்கி உலகுக்கு அளித்தாரா என்பதே கதை.

நீரிழிவு நோயின் வகைகள், அதில் பாதிக்கப்படும் நோயாளிகள் என கதையை அமைத்து, அதில் மருந்து கண்டுபிடிப்பது, தனது ஆராய்ச்சியை மக்களின் நலனுக்கு அர்ப்பணிப்பது என்ற சமூக கருத்தை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சி செய்து அதை ராயல்டி – ஆதாய உரிமைப்பணம் வாங்காமல் ஒரு நாட்டின் அரசுக்கு ஒப்படைப்பதைத்தான் சரவணன் படம் நெடுக சொல்கிறாரா என தெளிவாக புரிந்துகொள்ள முடியவில்லை.

புரிஞ்ச விஷயம்

ஆராய்ச்சியாளர் மிகப்பெரும் பணக்காரர். தனது மனநிலைக்கு ஏற்ப பல்வேறு கார்களில் வருகிறார். அனைத்து காட்சிகளும் பிரம்மாண்டமாக பார்வையாளர்கள் பார்த்தாலே திகைக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

படம் ரஜினி நடித்த சிவாஜியின் ரீமேக் போல தெரிந்தாலும் அதை வாய்விட்டு சொல்லிவிடக்கூடாது. சொன்னால் அண்ணாச்சி, ‘’யூ ஆர் டோட்டலி ராங். என்னுடைய ஆராய்ச்சி எல்லாமே மக்களுக்காகதான்’’ என இருபத்தியோராவது முறையாக கூட சொல்லுவார்.  நகைச்சுவை என்ற பெயரில் விவேக் செய்வதெல்லாம் என்ன மாதிரியான விஷயங்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஹாரிஸைப் பொறுத்தவரையில் படத்தின் காட்சிகளை கருப்புக் கண்ணாடி போட்டு பார்த்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, ரீ ரெக்கார்டிங் செய்திருக்கிறார்.பாடல்களில் இசை உற்சாகமாக இருக்கிறது.  முழு ஆல்பமே கொண்டாட்டமாக இருக்கிறது. ஆடியோவாக கேட்டால் இனிமை கூடும்.

மாமா தம்பி ராமையாவின் மகள் துளசியை, சரவணன் காதலிப்பது, அவருக்கு எதிரிகள் உருவாவது, யார் முக்கியமான எதிரி ஆகியவையெல்லாம் படம் பார்க்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் சரவணனுக்கு தெரிய சற்று காலதாமதம் ஆகிவிடுகிறது. காரணம் அவர் மக்களுக்காக உழைக்கும் அப்பாவி ஆராய்ச்சியாளர்.

 

புரியாத விஷயம்

 அரசு, தன்னளவில் ஆராய்ச்சியாளர் கொடுத்த மருந்தின் மூலக்கூறைத் தயாரித்தாலும் கூட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் வருபவர்களுக்கு வழங்கும்.முழு நாட்டிலுள்ள  அனைத்து மக்களுக்கும் மருந்து கிடைக்கவேண்டுமெனில், தனியார் நிறுவனங்களும் அதை தயாரித்து மக்களுக்கு வழங்குவதே சரியான முறை. பல்வேறு நிறுவனங்கள் தயாரிப்பதால் சற்று விலை குறைவாக மாத்திரை கிடைக்கலாம். இதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது. முழுக்க இலவசமாக தயாரித்து வழங்குவது என்பது இன்றைய உலகில் கடினமானது என்றே சொல்லவேண்டும்.

புதிய மருந்தை சரவணன் ஆராய்ச்சி செய்கிறார். அதேசமயம் அதை இறுதியாக மனிதர்களுக்கு சோதித்தபிறகுதான் அதன் பலன்கள் தெரியும். ஆனால், அதற்கு முன்பே அவரது குருநாதர் தேசிகன்  ஊடகங்களுக்கு சொல்வதே ஏன்? அவர் அப்படி சொல்வதை சரவணன் ஏன் தடுக்கவில்லை, அல்லது சொல்லவேண்டாம் என்று கூறவில்லை.

 கொலைகாரன் முன்னா என்ற முக்கியமான ரௌடியைப் பிடித்து விசாரிக்கிறார்கள். அந்த நேரத்தில் தெருவில் வரும் பாரம்பரிய நடனக்குழுவைப் பார்க்க சரவணனும் விவேக்கும் செல்வது எதற்கு? அப்போ முன்னா செத்தால் கூட பரவாயில்லைதானே?

ஓஜோ மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தந்திரமாக திட்டமிட்டு காதலி போல பழகுகிறார். திட்டங்களை இவ்வளவு அழகாக செய்தவர், மருத்தின் ஃபார்முலாவை திருட எதற்கு சரவணனின் மனைவியைக் கடத்தி, பிரசவம் பார்த்து பிறந்த பிள்ளைக்கு வேறு சோறு போட்டு வளர்க்கிறார்கள். எல்லாம் கிளைமேக்ஸ் மிரட்டலுக்காகத்தான்.

பச்ச தமிழ்ப்பொண்ணு என்று சொல்லி துளசியைக் கல்யாணம் செய்வதோடு, நிறுத்திக்கொள்கிறார்கள். நாயகியின் வேலை குழந்தையைப் பெற்று வாரிசை உருவாக்குவதோடு முடிந்துவிடுகிறவள்தானா? கீத்திகா திவாரிக்கு பாத்திர வலு சேர்க்கும் காட்சிகள் இருந்தால், நன்றாக இருந்திருக்குமே சாரே?

கோமாளிமேடை டீம்


கருத்துகள்