15.அதிக மின்கட்டணத்தை மக்களிடம் வாங்க ஆடிய ஆட்டம்! - மோசடி மன்னன் அதானி

 




தேசத்திற்காக அதானி உழைத்தபோது..

ஊழலைப் பற்றிய விசாரணை...

ஊழலைப்பற்றிய காவல்துறை விசாரணை








 

விசாரணைக்காலம் 2006-2010

2011ஆம் ஆண்டு, கர்நாடகத்தில் இயங்கி வந்த மத்திய அரசின் குறைகேள் அதிகாரி, 466 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுரங்க தொழிலை செய்பவர்கள் எப்படி பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி முறைகேடாக இரும்புத்தாதுவை கடத்துகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது. (ப.12)



மாநில அரசில் முறைகேடான ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆகியவற்றை விசாரிப்பதே குறைகேள் அதிகாரியின் வேலை. அவர் தயாரித்த அறிக்கையில், பெலகிரி அருகே உள்ள துறைமுகத்தை வாடகைக்கு எடுத்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனமும், கூடவே இன்னொரு நிறுவனமும் சட்டவிரோதமாக இரும்புத்தாதுவை அகழ்ந்து எடுத்து விற்பனை செய்ததாக கூறப்பட்டிருந்தது.

பெலகிரி துறைமுகம், ஊழலுக்கான மைய இடத்தைப் பிடித்தது. மோசடியின் மதிப்பு அக்காலகட்டத்தில் 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து ஏற்றுமதி செய்துள்ளதோடு, முறையான ஆதாய உரிமைத்தொகைகளையும் வழங்கவில்லை. இதுபற்றி சுரங்க நிறுவனங்கள் எப்படி நுட்பமாக ஏமாற்றினார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

‘’தாதுவைப் பிரித்தெடுத்து அது என்ன அளவாக இருந்தாலும் அதைப்பொறுத்து அரசுக்கு ஆதாய உரிமைத்தொகையை வழங்கவேண்டும். ஆனால், அப்படி வழங்காதது சட்டவிரோதம். அதானி குழுமம், தாதுவை வாகனங்களில் எடுத்துச்செல்ல முறையான உரிமங்களைப் பெற்றிருக்கவேண்டும்.(ஃபார்ம் 31, ஃபார்ம் 27, ட்ரிப் ஷீட்ஸ்). ஆனால்,  இவற்றை பெறவில்லை என்பதோடு, அரசுக்கு உரிய ஆதாய உரிமைத்தொகையை தராமல் ஏமாற்றியுள்ளனர். இதன் அர்த்தம், அரசுக்கு சொந்தமான இயற்கை வளங்களை கொள்ளையடித்துள்ளனர் என்பதாகும் ’’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





 ‘’பிரமாண்டமான வலைப்பின்னனலாக  நடைபெற்ற சுரங்க ஊழலில், அரசின் அனைத்து நிலைகளிலும் உள்ள அதிகாரிகளும் (மாநில முதல்வர் உட்பட) தொடர்புகொண்டிருக்கின்றனர். கிடைத்த புகார்களின் அடிப்படையில் சட்டவிரோதமாக சுரங்க வளங்களை வெட்டியெடுத்தலில் பெருமளவு லாபத்தையும், அரசு அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடைந்திருக்கிறார்கள்’’ என்று அந்த அறிக்கையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. (ப.2)

 ‘’அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், சட்டவிரோத ஏற்றுமதிக்காக பலருக்கும் லஞ்சம் கொடுத்துள்ளது. துறைமுக நிர்வாகம், சுங்கம், காவல்துறை, கேஎஸ்பிசிபி, சிஆர்இசட், சுரங்கங்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் பிறர் என அனைவருக்கும் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். குற்றவழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும்.’’ (ப.54) என விசாரணை ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.   

‘’அதானி நிறுவனத்தில் பெறப்பட்ட ஆவணங்களின்படி, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் கப்பல் சரக்கு ஒன்றுக்கு 1,100 டாலர்களை (2010 ஆண்டுப்படி) துறைமுக தலைவருக்கு லஞ்சமாக அளித்துள்ளது. பிற ஊழியர்களுக்கு தலா 120 டாலர்கள் என கணக்கிட்டு வழங்கியுள்ளது’’ என வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார். (ப.54)

‘’அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துறைமுக ஒப்பந்தம் நிறுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் வரும் அரசுகளும் அதானி நிறுவனத்திற்கு துறைமுக ஒப்பந்தத்தை வழங்க கூடாது’’ என நீதிபதி ஹெக்டே பரிந்துரைத்திருந்தார்.

அதானி நிறுவனம் பற்றிய விசாரணை இடையில் வெளியே கசிந்துவிட, மாநில அரசின் அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை பதறிப்போனார்கள். அரசியல்வாதிகள் மீது குற்றவழக்கு பதியப்ப்ட்டு விசாரணை நடைபெற்றால் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடும் என பயந்தனர்.

பெரும் அளவில் நடைபெற்ற ஊழல் விவகாரத்தால், மாநில அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களுக்குப் பிறகு விசாரணைக் குழுவில் இருந்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹெக்டே விலகிக்கொண்டார். ஊழல் பிரச்னை காரணமாக, மாநில அரசு அதை விசாரணை செய்தவர்கள் மீதே தனது கோபத்தை காட்டியது. 

‘’வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல் அப்படியே நிலுவையில் இருக்கிறது. இந்தியாவில் நீதிமன்றம் மிக மெதுவாக செயல்படுவதுதான் பிரச்னை’’ என தொலைபேசி வழியே தொடர்புகொண்டு பேசியபோது நீதிபதி ஹெக்டே கூறினார். ‘’ வழக்கு நிலுவையில் இருப்பதால் அதானி குழுமம் மற்றும் பிற நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு உண்டான உரிய ஆதாரங்கள் இருக்கும்போது எதற்காக அதானி குழுமம் மீது அரசு சலுகை காட்டுகிறது என புரிந்துகொள்ள முடியவில்லை’’ என்று ஹெக்டே கூறினார்.

விசாரணைக் காலம்

2009-2014

2014ஆம் ஆண்டு, வருவாய் புலனாய்வுத்துறை ஆணையகம் அதானி குழுமம் மீது வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இதில், அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் வாங்கிய பாய்லர், ஜெனரேட்டர், டர்பைன் ஆகிய பொருட்களுக்களை வாங்கிய இறக்குமதி மதிப்பில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியது. (ப.96)

ஏபிஎம்எல், ஏபிஆர்எல் ஆகிய இரு மின் உற்பத்தி நிறுவனங்களை வருவாய்த்துறை குற்றம்சாட்டியது. இந்த நிறுவனங்களிலிருந்து பணத்தை பெற்ற வினோத் அதானி, பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டார் என விசாரணை ஆவணங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

விசாரணையில் வங்கி பதிவுகள், சாட்சிகள், பெருநிறுவன ஆவணங்கள், சுங்கவரி ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. இதில், அதானி பவர் நிறுவனங்கள், இறக்குமதி செய்ததாக கூறிய பொருட்களின் மதிப்பை விட இருமடங்கு மதிப்பிற்கு பொருட்களை வாங்கி அரசை மோசடி செய்தது தெரிய வந்தது. (ப.58,67).

மோசடியின் முக்கியமான நோக்கம், வரியை குறைவாக கட்டி பொருட்களை இறக்குமதி செய்து, அதற்கான நிதியை பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து முறைகேடாகப் பெற்று வெளிநாட்டிற்கு அனுப்புவதாகும். (ப.1)

இன்னொரு மோசடி ஒன்றும் உள்ளது. வாங்கிய பொருட்களின் மதிப்பை அதிகமாக உயர்த்திக் காட்டுவதன் மூலம் விநியோகிக்கும் மின்சாரத்திற்கு கூடுதல் விலையைப் பெற்றிருக்கிறது அதானி பவர் நிறுவனம். மத்திய மின்சார ஒழுங்குமுறை கமிஷனின் விதியையும் மீறிச் செயல்பட்டிருக்கிறது. இந்த கமிஷனின் ஆவணங்களைப் பார்க்கும்போது,  ‘’பல்வேறு இறக்குமதி பொருட்களின் மதிப்பை முதலீடாக அதானி பவர் நிறுவனம் காட்டியதில் இருந்து, சட்டப்பூர்வ விதிகளின்படியே எளிதாக மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது.’’ (ப.10,15,17,20) என கூறப்பட்டிருந்தது.

அதானி குழுமம் நிலக்கரியை இறக்குமதி  செய்தது அல்லது கருவிகளை இறக்குமதி செய்தது என ஏதாகிலும் செய்து இருக்கலாம். ஆனால் இறுதியாக வாடிக்கையாளர்களான மக்கள்தான், அதிக மின் கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும் என்பது நடைமுறை உண்மை.

மின் உற்பத்திக்கான பொருட்கள் அனைத்தும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதற்கான ஒப்பந்தத்தில் துபாயில் உள்ள வினோத் அதானி நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள் இடைத்தரகராக இருந்துள்ளன. இதுபற்றி விசாரித்த வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம், ‘’துபாயில் உள்ள தரகு நிறுவனம் போலியானது. அந்த நிறுவனம்,  வாங்கும் பொருட்களின் மதிப்பை உயர்த்தி ஊதிப்பெருக்கி காட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது’’ என கூறியது. (ப.32)

மோசடி செய்த பணம் எல்லாம் எங்கே போகிறது என வருவாய்த்துறை புலனாய்வு ஆணையகம் விசாரணை செய்தது. இதில், மொரிஷியஸ் நாட்டிலுள்ள முதலீட்டு நிறுவனங்கள் மூலம் 808 மில்லியன் டாலர்கள் பதுக்கப்படுவது தெரிய வந்தது. அதேநேரத்தில் பொருட்களை வாங்கிய பரிவர்த்தனையில், அங்கிருந்து 900 மில்லியன் டாலர்களை வெளியே எடுத்து பயன்படுத்தியுள்ளனர் என்பதும் தெரிய வந்தது.

111 பக்கங்களைக் கொண்ட விசாரணை ஆவணத்தில், ‘’இறக்குமதி செய்யும் பொருட்களின் மதிப்பை ஊதிப்பெருக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இடைத்தரகு நிறுவனங்கள் உதவியுள்ளன. எலக்ட்ரோஜென் இன்ஃப்ரா எனும் நிறுவனம் (அதானிக்கு சொந்தமானது) பொருட்களை வாங்கியுள்ளது. இதற்கான அதிக மதிப்பு கொண்ட தொகை மொரிஷியஸ் அல்லது வேறு நாட்டிலிருந்து பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ’’ என்று கூறப்பட்டிருந்தது.


நன்றி

திரு. இரா. முருகானந்தம்



கருத்துகள்