நம்மை பிரிக்கும் வெறுப்பு வேண்டாம்; ஒன்றுசேர்க்கும் அன்பு போதும் - ஜூடோபியா

 









ஜூடோபியா

டிஸ்னி

கிராமத்தில் கேரட் விவசாயம் செய்யும் பெற்றோர். பாரம்பரியத் தொழிலான கேரட்டை விளைவித்து விற்பதைக் கைவிட்டு சிறுவயது ஆசையான காவல்துறை வேலைக்கு செல்லும் ஹாப்ஸ் என்ற முயல், ஜூடோபியா நகருக்குச் செல்கிறது. அங்கு சென்று சந்தித்த சவால்கள் என்ன, சாதித்த சாதனைகள் என்ன என்பதுதான் கதை.

படத்தை சாதாரணமாக பார்த்தால் சாதாரண முயல் காவல்துறை அதிகாரியாகும் சாதனைக் கதை போலத் தெரியும். ஆனால், இன வேற்றுமை, வன்முறைக்கு எதிரான ஏராளமான செய்திகளை, போலிச்செய்திகளை பிரிவினைகளை பரப்பும் ஊடகங்களைப் பற்றியும் படம் மறைமுகமாக பேசுகிறது.

படத்தை தனித்துவமான ஒன்றாக மாற்றுவதும் அதுதான். சிறுவயதில் பெற்றோர் வழியாக அல்லது சுய அனுபவம் வழியாக மனதில் பதியும் விரோதம், பகை எப்படி பல்வேறு முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது. நிறைய மனிதர்களை பாதிக்கிறது என்பதை படம் கலைப்பூர்வமாக நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் வழியாக சொல்லுகிறது.

ஹாப்ஸ்  என்ற முயல் கிராமத்தில் வாழ்கிறது. அங்கு பள்ளியில் நாடகம் ஒன்றில் நடிக்கிறது. அதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறது. அப்படியே அதே வேலைக்கு முயற்சி செய்யவேண்டும் என்பதே ஆசையாகிறது. ஆனால் பெற்றோருக்கு மகளைத் தடுக்க முடியவில்லை. அதேசமயம் முயலாக இருந்துகொண்டு ஹாப்ஸ் வேட்டை விலங்குகளை எப்படி தடுப்பாள், குற்றங்களைக் குறைப்பாள் என்ற கவலையும் இருக்கிறது. ஹாப்ஸ், காவல்துறையினருக்கான பயிற்சியில் பிறரை விட சாதிக்கும் வேகம் கொண்டவளாக வெல்கிறாள். ஏனெனில் அவளுக்கு இருக்கும் சவால்கள் அவள் உருவத்திலேயே இருக்கிறது. ஆனால் அவள் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

ஹாப்ஸ், நிக் எனும் நரியைச் சந்திக்கும் காட்சி சிறப்பாக உருவாக்ககப்பட்டு உள்ளது. முதலில் வில்லனாக அறிமுகமாகி பிறகு தான் எப்படி மோசமான குணம் கொண்டவனாக மாற்றப்பட்டேன் என ரோப்காரில் பயணித்தபடி சொல்லி உணர்ச்சிவசமாகி  டக்கென தன்னை இயல்புக்கு மாற்றிக்கொண்டு பேசும் நிக்கின் நடிப்பு அபாரம்.

ஹாப்சிற்கும், நிக்கிற்கும் சொல்லப்படாத காதல் கதையும் உண்டு. அது இருவரின் செய்கையில் வெளிப்படும்படியாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஆர்டிஓ அலுவலகத்தில் வேலை செய்யும் ஆமை வேக அதிகாரிகள் பற்றிய காட்சிகள் செம சிரிப்பு. ஃபிளாஷ் என்ற பாத்திரம், ஹாப்ஸை நலம் விசாரிக்கும் காட்சியில் நீங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. அடுத்து, யோகா மையக் காட்சிகள், நிக், ஹாப்ஸ் என இருவரும் கரடிகளை பாதுகாவலர்களான கொண்ட மிஸ்டர் பிக்கை சந்திக்கும் காட்சி. மிஸ்டர் பிக்கின் மகள் திருமணத்தில் நிக், உணவை எடுத்து சாப்பிடும் காட்சிகளைக் கூறலாம்.

முக்கியமான கதைக்கு வருவோம். ஜூடோபியா நகரில், பதினான்கு விலங்குகள் காணாமல் போகின்றன. அந்த விலங்குகளின் குடும்பங்கள் காவல்துறை மையத்திற்கு வந்து புகார்களைக் கொடுக்கின்றன. போலீசாருக்கு  எந்த தகவலும் கிடைப்பதில்லை. எப்படி தேடுவது என்றும் தெரியவில்லை. இதை ஹாப்ஸ், நிக் என இருவரும் சேர்ந்து கண்டுபிடிப்பதே முக்கியமான கதை.

இந்த கதையை வைத்துக்கொண்டு இனவாதம், சிறுபான்மையினரைத் தாக்குவது, அவர்களை சட்டங்கள் மூலம் ஒடுக்குவது, கைக்கூலி ஊடகங்கள், போலிச்செய்திகள், வேட்டை விலங்குகள் பற்றிய கடந்தகால செய்தியால் பறிபோகும் நிகழ்கால வாழ்க்கை, ஆராயாமல் உண்மையை தெரிந்த விஷயங்களை உளறிக் கொட்டுவது பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் இயக்குநர். படத்தின் முடிவு என்பது ஓரளவுக்கு ஊகிக்க முடிகிற ஒன்றுதான். ஆனால் அதைக் கூறியுள்ள விதம், நிதானமான அணுகுமுறைதான் முக்கியமானது.

இனவாதம் சார்ந்த கருத்துகளை, முன்முடிவுகளோடு சிறுபான்மையினரை அணுகுவது பற்றி மறைமுகமாக பேசியுள்ள படம் முக்கியமானது. நிஜத்தில் நடக்க வாய்ப்புள்ளதோ இல்லையோ, படம் நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் முடிகிறது.

பிரிவினை வேண்டாமே

கோமாளிமேடை டீம்


கருத்துகள்