விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருவதற்கான காரணங்கள், தீர்வுகள்!

 













விவசாயிகளின் தற்கொலை, காரணங்கள், தீர்வுகள்

இந்தியாவில், எழுபது சதவீத மக்கள் வேளாண்மையை நேரடியாக அல்லது மறைமுகமாக சார்ந்து உள்ளனர். ஆனால், அதிகரித்து வரும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை கவலையளிக்கும்படி உள்ளது.

2013ஆம் ஆண்டு தொடங்கி 2021ஆம் ஆண்டு வரையில் ஆண்டுதோறும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருகின்றனர். தற்கொலை மரணங்களில் விவசாயிகளின் அளவு 10 சதவீதமாக உள்ளது. வருவாய் மேம்பாடு, சமூக பாதுகாப்பு ஆகிய அம்சங்களை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் நிலைமை மாறலாம். (TOI)

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து வருவது உண்மை. அவர்கள் இறப்பதற்கு என்ன காரணங்கள் என்று பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் வேளாண்மைத்துறை, அத்துறை சார்ந்த விவசாய தொழிலாளர்கள் என 87.5 சதவீதம் பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக உள்ளது.

சிறு,குறு ஏழை விவசாயிகள் பெருமளவில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. பசுமைப் புரட்சியில் அதிக பயன் பெற்றதாக கூறப்படும் பஞ்சாப் மாநிலத்திலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் அதிகளவில் உண்டு.  1995-2015 வரையிலான காலகட்டத்தில் 4,687 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பஞ்சாப்பிலுள்ள மான்சா என்ற ஒரு மாவட்டத்தில் மட்டுமே தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,334.

தற்கொலைக்குப் பின்னாலுள்ள காரணங்கள்

பருவகாலம் தவறுதல், காலநிலை மாற்றங்கள், கடன் சுமை அதிகரிப்பு, அரசு வேளாண்மைக் கொள்கைகள், மனநிலை குறைபாடு, தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப பிரச்னைகள் ஆகியவற்றை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணங்களாக வேளாண்மை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

உற்பத்திச் செலவு

வேளாண்மை பயிர்களுக்கான உற்பத்திச்செலவுகள் அதிகரித்து விவசாயிகளுக்கு பெரும்சுமையாக மாறிவிட்டன. விவசாயிகளின் தற்கொலைக்கு இதையே முக்கியமான காரணமாக கூறுகின்றனர். 2015ஆம் ஆண்டு கோதுமை உற்பத்திக்கு செலவிட்ட தொகை, தற்போது மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது.

உரம், பயிர்களைப் பாதுகாப்பதற்கான வேதிப்பொருட்கள், நிலங்களில் விதைப்பதற்கான விதைகள் ஆகியவற்றின் விலை அதிகரித்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு கடன்சுமை கூடுகிறது. உழவுக்கு பயன்படுத்தும் ட்ராக்டர்கள், நீரிறைக்கும் பம்புகளின் விலை அதிகரித்துவிட்டது. இதனால் சிறு, குறு விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயன்படுத்த அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது.

விவசாய கூலித் தொழிலாளர்கள், உழவுக்கு பயன்படும் மாடுகள் ஆகியோருக்கான செலவுகள் அதிகரித்துவிட்டன. மகாத்மாகாந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் விவசாய கூலித் தொழிலாளர்களின் அடிப்படை கூலியை உயர்த்திவிட்டது. இதன் காரணமாக, வேளாண்மைத்துறை தீவிரமாக பாதிக்கப்பட்டுவிட்டது.

2015ஆம் ஆண்டு, தற்கொலை செய்து இறந்த  மூவாயிரம் விவசாயிகளில், 2,474 பேர், வங்கிக் கடன்களைக் கட்டமுடியாதவர்கள் ஆவர். இத்தகவலை தேசிய குற்ற ஆவண அமைப்பு (NCRB) சுட்டிக்காட்டியுள்ளது.  இதிலிருந்து விவசாயிகளுக்கும், வங்கிக்கும் உள்ள பிரச்னையைப் புரிந்துகொள்ளலாம். இந்த விவகாரத்தில் வங்கிகள், கடன்களைக் கட்டாத விவசாயிகளை அவமானப்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட தரப்பின் பிரச்னையை நிரூபிக்க துல்லியமான ஆதாரங்கள் தேவையாக இருக்கின்றன.

இறந்த விவசாயிகளில் வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி இறந்துபோனவர்களின் அளவு 9.8 சதவீதமாக உள்ளது. எனவே, இவர்கள் விவசாயிகளை அவமானப்படுத்தி தற்கொலை செய்திருக்க தூண்டியிருக்கும் முக்கியமான காரணம் என கூறமுடியாது. விவசாயிகளின் தற்கொலைக்கு கடன்சுமை முக்கிய காரணமாக உள்ளது. இந்த வகையில் கடன்சுமை சார்ந்த தற்கொலை மரணங்களில் மகாராஷ்டிரா (1,293), கர்நாடகம் (946) ஆகிய மாநிலங்கள் முதன்மை பெறுகின்றன.   

தேசிய வேளாண்மைச் சந்தை, ஒப்பந்த விவசாயம் ஆகிய திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர் இன்றி நேரடியாக சந்தையில் விற்க முடியும். ஆனால் நடைமுறையில் இந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படவில்லை.

இணையத்தை சரியாகப் பயன்படுத்தாதது, கல்வியறிவின்மை சிறு, குறு விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. இதன் விளைவாக, அவர்கள் அரசின் கொள்கைகளை சரிவர பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இதன் விளைவாகவே நீர்வளம் குன்றிய பகுதியில் அதிக நீர் தேவைப்படும் கரும்பு பயிரை விளைவிப்பது போன்ற அறியாமையான செயல்களில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

பருவநிலை தவறுதல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டது. நீர்ப்பாசனப் பற்றக்குறை கொண்ட மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் விளைவாக, எதிர்பார்த்த பயிர்களின் விளைச்சலை எட்ட முடியாமல் போனது. இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப்பாசன பங்கீடு பற்றிய ஒப்பந்தங்கள், தேவையைப் பொறுத்து உருவாக்கப்படவேண்டும். எடு. தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.

காலநிலை மாற்றம், பருவநிலை தவறுதலோடு இணைந்து பயிர்களின் விளைச்சலை பாதிக்கிறது. மழையால் ஏற்படும் திடீர் வெள்ளம், பருவநிலை தவறுவது ஆகிய  காரணங்களால் பயிர்கள் சேதமடைகின்றன. இத்தகைய நெருக்கடிகளால் நாட்டின் தேவையை நிறைவு செய்யும் விளைச்சல் கிடைப்பதில்லை.  

இந்தியாவில் அரசியல் பொருளாதாரம் என்பது, நகரம் சார்ந்த மக்களை மட்டுமே முக்கியத்துவப்படுத்துகிறது. எனவே, கிராமத்தில் உள்ள விவசாயிகளை விட நகரில் உள்ள மக்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. விவசாய உற்பத்திப் பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு அவசியமான பொருட்கள் என்ற அட்டவணையில் உள்ளன. இதனால், விவசாயிகள் அவற்றின் விலையை தேவைக்கு ஏற்ப உயர்த்தி விற்க முடியாது.

ஒருகாலத்தில் இந்தியாவில் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு இதேபோன்று விலை கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் அத்துறையில் லாப சதவீதம் என்பது வேளாண்மைத்துறையோடு ஒப்பிட்டால் அதிக வேறுபாடு கொண்டது. விவசாய விளைபொருட்களின் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படுவது, விவசாயிகளின் கடன் சுமையை மேலும் அதிகரித்து வருகிறது.

விவசாயிகளின் மீதுள்ள கடன் சுமை, அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வது ஆகிய விஷயங்கள் சரியாக தீர்வு தேடப்படாமல் அரசியல்படுத்தப்படுகின்றன. அண்மையில், உத்தரப்பிரதேச அரசு, விவசாயிகள் பெற்றிருந்த ரூ.36 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. இப்படி செய்த காலம், விவசாயப் பயிர்கள் அறுவடை செய்யப்படுவதற்கு உகந்த காலமாக இருந்தது.  பயிர் விளைச்சல் வீழ்ச்சி, சூழலுக்குப் பொருந்தாத பயிர்கள், விவசாயிகளின் கடன்சுமை ஆகியவை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் காரணிகளாக உள்ளன. எனவே, அரசு கடன்களைத் தள்ளுபடி செய்வதை விட வேளாண்மைத்துறையில் அதிகளவில் முதலீடு செய்வது விவசாயிகளைப் பாதுகாக்கும்.

விவசாயிகளின் தற்கொலையும், பொருளாதாரமும்

தற்கொலை என்பது ஒருவரின் பொருளாதாரத்தை பொறுத்து அமைவதில்லை. ‘’ஒருவர் எந்த இனம், வயது கொண்டவராக இருந்தாலும், பணக்காரர் அல்லது ஏழையாக இருந்தாலும் மனம் அல்லது உணர்வு சார்ந்த குறைபாடு இருந்தால் தற்கொலை செய்துகொள்கின்றனர்’’ என அமெரிக்காவின் தேசிய மனநல சங்கம் கூறியுள்ளது.

வேளாண்மை பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் ஒரு லட்சத்தில் பதிமூன்று பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தொழில்மயமான நாடுகளை ஒப்பிட்டால் தென்கொரியா (28.5), ஜப்பான் (20.1), ரஷ்யா (18.2), அமெரிக்கா (12.6), ஆஸ்திரேலியா (12.5), பிரிட்டன் (11.8) என தற்கொலை சதவீதம் உள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பு (WHO)  வெளியிட்டுள்ளது.(HT) 

எதிர்வினைகள்

கடன்களை வாங்கிய விவசாயிகளுக்கு அரசு முக்கியமான பல்வேறு நிவாரண தொகைகளை வழங்கியுள்ளது.  ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 31 மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு 2006ஆம் ஆண்டு, மத்திய அரசு நிவாரண நிதியுதவிகளை வழங்கியது. இந்த மாநிலங்களில் கடன் தற்கொலைகள் அதிகம் நடந்துள்ளன.

2008ஆம் ஆண்டு மத்திய அரசு, 36 மில்லியன் விவசாயிகள் பெற்றிருந்த 65 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து உதவியது. 2013ஆம் ஆண்டு அரசு, விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துவந்த நான்கு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா) பண்ணை விலங்குகள், மீன்களை வளர்ப்பதற்கான நிதியுதவிகளை வழங்கியது. இந்த சிறப்புத் திட்டங்களின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு பன்மைத்துவ வழியில் வருமானம் கிடைக்கும என அரசு நம்பியது. மகாராஷ்டிரா அரசின் விவசாயிகள் கடன் ஒழுங்குமுறை மசோதா (2008), கேரளா விவசாயிகள் கடன் தீர்ப்பு கமிஷன் (2012) ஆகிய மசோதாக்களை மாநில அரசுகள் உருவாக்கி விவசாயிகளுக்கு உதவ முயன்றன.

உயிரியல் ரீதியாக, வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி நேரடியான முறையில் பூச்சிக்களைக் கட்டுபடுத்தி பயிர்களில் ஏற்படும் இழப்புகளைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வியட்நாமிய முறையில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இரையாக உண்ணும் புதுமையான பூச்சிகளை வளர்ப்பதும் இதில் முக்கியமானது. இதன்மூலம், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்க முடியும்.  உரங்களின் விலையைக் குறைக்க, துறை சார்ந்து நிதியுதவிகளை விவசாயிகளுக்கு வழங்கும்போது அவர்கள் வெளியில் கடன் வாங்கும் சாத்தியம் குறைகிறது.

புதிய மரபணு அடிப்படையில் பயிர்களை உருவாக்குவது, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், ஒப்பந்த விவசாய முறையை ஏற்றுக்கொள்வது ஆகியவையும் முக்கியமானவை. துல்லியமான பயன்களைத் தரும் விவசாய முறைகளான சிஸ்டமேட்டிக் ரைஸ் இன்டென்ஷிஃபிகேஷன் முறை (SRI) ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இறக்குமதி செய்யும் எந்திரங்களை விட உள்ளூரில் தயாரிக்கும் எந்திரங்களுக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும். கடன் ஊக்கத்தொகையை வழங்குவதற்காக சுங்கத்துறையில் வழங்கும் சலுகைத் திட்டங்களை (Duty of credit scrips) பரிசோதித்து பார்க்கலாம். வேளாண்மைத் துறையில் முதலீடுகளை உருவாக்கும் முறையில் மானிய உதவிகளை அரசு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு, எந்திரங்களை குறைந்த வாடகையில் வழங்கும் மையங்களை (CHC) அதிகளவில் தொடங்கலாம். விவசாயிகளுக்கு இந்த நடவடிக்கைகள் சரியான நேரத்தில் கிடைக்கும்படி செய்யவேண்டும்.

  சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களின் கீழ், வேளாண்மைத்துறையை மேம்படுத்தலாம். இதன்படி, எந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்கும் விவசாய மையங்களை உருவாக்குவது, திறன்பயிற்சிகளை வழங்குவது, முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவற்றைச் செய்யலாம்.

தனியார் தொழில்நிறுவனங்கள், வேளாண்மைத் துறைக்கு அதை முன்னேற்றும் விதமாக நிதியுதவிகளை வழங்கலாம். விவசாயத்துறையில் உள்ள செல்வந்தர்கள் இம்முயற்சிகளை தானே முன்வந்து செய்யலாம். சிறுகுறு விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுறவு முறையில் விவசாயத்தைச் செய்யலாம். இதனால், அதிக நிலங்களை வைத்துள்ள பெரிய விவசாயிகளுக்கு இணையாக பல்வேறு வசதிகளைப் பெறலாம்.

2022ஆம் ஆண்டில், ஆரோக்கியமான லட்சியமாக விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக பெருக்குவதை வைத்துக்கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கியுள்ள விவசாயிகள் இதற்கு எந்த பதிலையும் கூற முடியாது. சூழலுக்கு உகந்த வேளாண்மைக்கு, விவசாய முறைகளை மறுகட்டமைப்பு செய்வதோடு, முதலீடுகள் பெருமளவில் செய்வதும் முக்கியம். இதன்மூலம், விவசாயிகளுக்கு ஆதரவு கிடைக்கிறது.

அதிகளவில் கடன்களை வாங்கி பயிர்களை விளைவிப்பது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது கடன்களைக் கொடுத்த வங்கிகள் நெருக்கடியில் சிக்குவது போன்ற சிக்கலான நிலைமைதான். விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை முடிந்தளவு வேகமாக தீர்க்கப்பட வேண்டும்.

மாவட்ட அளவில் கடன்பெற்ற விவசாயிகளை அழைத்து அவர்களுக்கு மன அழுத்தம் நீக்கும் ஆலோசனைகளை வழங்கலாம். வேறுவிதமாக பயனளிக்கும் செயல்பாடுகளை முயற்சி செய்யலாம்.

உள்ளூர் நிர்வாகம், நபார்ட் வங்கி ஆகியோர் நிலைமையைக் கட்டுப்படுத்தினால் விவசாயிகளின் தற்கொலைகளை பெருமளவு தடுக்கலாம். பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளின் வழியாக க்ரவுட் பண்டிங் போன்ற புதுமையான வழிகளில் வேளாண்மைத் துறைக்கான நிதியைப் பெறலாம். வேளாண்மை சூழல் பற்றிய அறிவை, டிடி கிஸான் தொலைக்காட்சி சேனல் வழியாக எளிதாக அறியலாம்.. மண் வளத்தை அறியும் திட்டம், பயிர்க் காப்பீடு, பிரதம மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா ஆகியவற்றை விவசாயிகள்  பயன்படுத்தலாம்.

சூழலுக்கு உகந்த காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்ட விவசாயிகளை முன்னுதாரணமாக கொண்டு குழுக்களாக இணைந்து செயல்படலாம். இதனால் விவசாயிகள் விழிப்புணர்வுடன் சிறந்த செயல்முறைகளைக் கண்டறிந்து செயல்படுத்தலாம்.

 Clear IAS Team  S S Naik,2021

நன்றி

விவசாய செயல்பாட்டாளர் சிவக்குமார்

https://giphy.com/

கருத்துகள்