சரியான கல்விமுறையே மனிதகுலத்திற்கான பேருதவி! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

 











மனிதர்களை மாறுபட்டவர்களாக்கும் கல்வி

பிள்ளைகளை நீங்கள் கவனமாக பார்த்தால் விளையாடும்போது, படிக்கும்போது பார்த்தால் அவர்களின் மனநிலையை அறிந்துகொள்ளலாம். அவர்களின் மீது பெற்றோர்கள் தமது முன்முடிவுகளை, பயத்தை, ஆசைகளை, நிறைவேறாமல் போன கனவுகளை திணிக்க கூடாது. பெற்றோர்கள் அவர்களின் பிடித்த, பிடிக்காத விஷயங்களை பிள்ளைகளிடம் திணித்து அவர்களை குறிப்பிட்ட வகையில் தீர்மானிக்க முயல்வது தவறு. பிள்ளைகளின் மீது வேலியைப் போட்டு உலகத்தோடு அவர்கள் கொண்டுள்ள உறவைத் தடுக்க கூடாது.

நம்மில் பெரும்பாலான பெற்றோர், குழந்தைகள் சொந்த மகிழ்ச்சிக்காக பல்வேறு லட்சியங்களை அடைவதற்காக பயிற்சி கொடுத்து வளர்க்கிறார்கள். திருப்தி, சுகமான சூழ்நிலை ஆகியவற்றை உரிமை, ஆதிக்கம் செலுத்தும் குணங்களின் மூலம் பெற்றோர் அடைகின்றனர்.

பெற்றோர் பிள்ளைகளுடன் கொண்டுள்ள உறவு என்பது மெல்ல தண்டனையாக மாறுகிறது. ஆசை, ஆதிக்கம் என இரண்டையும் தெளிவாக புரிந்துகொள்வது குழப்பமான செயல்பாடாக உள்ளது. ஆசை, ஆதிக்கம் என இரண்டு செயல்பாடுகளுக்கும் பல்வேறு வடிவங்கள் உண்டு. ஆதிக்கமாக உள்ளவருக்கு அடிமையாக சேவை செய்வது என்பது புரிந்துகொள்ள கடினமான ஒன்று. பொறாமை இருக்கிற இடத்தில் காதல் இருக்குமா, கட்டுப்பாடுகள் நிறைந்த இடத்தில் கூட்டாக ஒற்றுமையாக செயல்பட முடியுமா, தன்னைத்தானே சுய திருப்தி செய்துகொண்டு ஆதிக்கம் செய்யும் இடத்தில் அன்பு இருக்க முடியுமா?

அன்பு இருக்கும் இடத்தில் கவனம் உள்ளது. இதை பிள்ளைகளுக்கு என்று மட்டும் சுருக்க வேண்டாம். அனைத்து மனிதர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். நாம் பிரச்னையின் ஆழத்தைக் கண்டறிய முடியாதபோது, சரியான கல்வியை அடையாளம் காண முடியாது.  பிள்ளைகளுக்கு இரக்கமில்லாத வகையில் தொழில்நுட்ப கல்வியை உருவாக்கி அளித்தாலும், அவர்களின் முழு வாழ்க்கையையும் உணர்ச்சிகரமான தன்மை கொண்டதாக மாற்றி வாழ முடியும். நாம் யோசிப்பது, செய்வது, பேசுவது என பல்வேறு வழிகளில் முடிவில்லாமல் கூறினாலும் சூழல் என்பது பிள்ளைகளை உருவாக்குவதில் உதவி அல்லது பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை.

பிரச்னைகளை முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள், தன்னைத்தானே புரிந்துகொண்டால் சமூகத்தை மாற்றுவதற்கு முயலலாம். கல்வியில் புதிய அணுகுமுறைகளை சோதித்துப் பார்க்கலாம். பெற்றோராக பிள்ளைகளை நாம் விரும்பினால் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாதா என்ன? ஆனால் நாம் அன்பு என்ற சொல்லுக்கான பொருளைப் புரிந்துகொள்ளாமல் அதைப்பற்றி பேசினால் பிரச்னை முழுமையாக தீராது.   மக்கள் தாம் நம்பும் பொய்களிலிருந்து வெளியே வரவேண்டும். அப்போதுதான் நாம் பிற மனிதர்களோடு, இயற்கையோடு, சிந்தனையோடு கொண்டுள்ள உறவைப் புரிந்துகொள்ள முடியும். அப்படியில்லை என்றால் முரண்பாடுகளும், துயரங்களும் தீராது. நம்பிக்கையும் உருவாகாது.

 குழந்தைகளை வளர்க்க அறிவும், கவனமும், அக்கறையும் தேவைப்படுகிறது. பெற்றோரின் அன்பை எவ்வளவு பெரிய வல்லுநர்களின் அறிவுரைகளும் ஈடு செய்ய முடியாது. ஆனால் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் மீதான அன்பை பயமும், பேராசையும் கொண்டு களங்கப்படுத்துகிறார்கள். இச்சூழ்நிலை குழந்தைகளின் அடிப்படை இயல்புகளை உடைத்து நொறுக்குகிறது.

தற்போதைய கல்வி கற்பிக்கும் முறை, சமூக அமைப்பு முறை ஆகியவை தனிநபர்களுக்கு முழுமையான நிலையையும் சுதந்திரத்தையும் அளிக்க உதவாது. பெற்றோர், தம் பிள்ளைகள் முழுமையான திறன்களுக்கு ஏற்ப வளரவேண்டுமென்றால் வீட்டில் உள்ள சூழலை மாற்ற வேண்டும். சரியான கல்விமுறையைக் கற்றுத்தரும் பள்ளியை தேடிக் கண்டறியவேண்டும்.

வீடு, பள்ளி என இரண்டு இடங்களும் முரண்பாடாக இருக்க கூடாது. எனவே, பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கற்பித்தலை செய்துகொள்ளவேண்டும். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, குழுவில் உறுப்பினராக ஏற்படும் வாக்குவாதங்கள் ஆகியவை ஒருவரின் உறவுகள் பற்றியவை. முரண்பாடுகள் என்பவை உறவுகளில் எப்போதும் உள்ளவைதான்.

   ஒருவருக்கு ஏற்படும் முரண்பாடுகளை தவறான கல்விமுறை அதிகம் ஊக்குவிக்கிறது. அரசும், அமைப்பு ரீதியான மதங்களும் முரண்பாடுகளால் ஏற்படும் குழப்பங்களை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக பிள்ளைகள் தம் ஆளுமையின் தொடக்கத்திலேயே தம்மைப் பிரித்து வைத்துக்கொள்கின்றனர். இதனால் தனிப்பட்ட, சமூக நெருக்கடிகள் உருவாகின்றன. பிள்ளைகளின் பிரச்னைகளை ஒருவர் மனதின், இதயத்தின் வழியாக பார்க்க நினைத்தால், சரியான கல்வி முறையோடு வீட்டுச்சூழ்நிலையையும் மாற்றுவார். இம்மாற்றங்களின் விளைவாக, முழுமையான மனிதர்களை உருவாக்கலாம். ஆனால், சுயநலமான எண்ணங்களை மனதில் கொண்டவர்களால் அவர்களின் பிள்ளைகள் போரில், பஞ்சத்தில், உளவியல் பிரச்னைகளுக்கு பலியாகிறார்கள்.

சரியான கல்வி முறை என்பது, நம்மை நாமே மாற்றிக்கொள்வதிலிருந்துதான் தொடங்குகிறது. நாம் நமக்கு நாமே கற்பித்துக் கொள்வதால் பிறரைக் கொல்ல மாட்டோம். எதிர்கால உலகம் மகிழ்ச்சியாக இருப்பதற்கான கருத்தியலைக் கடைபிடிக்கலாம். இந்த வகையில் நாம் செய்யும் செயல்பாடு ஒட்டுமொத்த மனித குலத்திற்கே பேருதவியாக அமையும்.

 

மூல நூல்

 EDUCATION & THE SIGNIFICANCE OF LIFE

 

 

 

 


கருத்துகள்