ஹாங்காங்கின் சுதந்திர பேச்சுரிமைக்கு போராடிய ஜிம்மி லாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கலாமா?

 



ஜிம்மி லாய், நிறுவனர், ஆப்பிள் டெய்லி நாளிதழ்



ஆப்பிள் டெய்லி நாளிதழ், ஹாங்காங்



அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி லாய்க்கு வழங்கலாம்!

நான் ஒரு பத்திரிகையாளர். எனவே, இதை சொல்வது பாகுபாடாக தோன்றலாம். இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு ஹாங்காங்கைச் சேர்ந்த பத்திரிகை உரிமையாளர் ஜிம்மி லாய்க்கு வழங்கப்படலாம் என நினைக்கிறேன்.

ஹாங்காங்கில் உள்ள ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழின் உரிமையாளர் ஜிம்மி லாய். கருத்து சுதந்திரம், மனித உரிமைகளுக்காக போராடும் மனிதர். பொதுவாக தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளோடு ஒத்துப்போய்விடுவார்கள். அவர்களை மீறி உண்மையை பேசுவதால் இழப்பது அதிகமாகவும் பெறுவது குறைவாகவும் இருக்கும்.

ஜிம்மி லாய் தனது சொத்துக்களைக் கூட இழந்து சிறைக்குச் செல்ல துணிந்துவிட்டாரர். பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தபோது ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்ற அடிப்படையில் அன்றைய அதிபர் டெங் ஜியாவோபிங் அதை ஏற்றார். அதன்படி ஐம்பது ஆண்டுகள் ஹாங்காங் செயல்படுவது ஒப்பந்த விதிமுறை. அந்த வகையில் அதன் குடியுரிமைகள், சுதந்திரமான அமைப்புகள் செயல்படும்.

உண்மையில் டெங் கொடுத்த வாக்குறுதி, அதாவது உறுதிமொழிக்கு நடைமுறையில் பெரிய அர்த்தம் ஏதுமில்லை. ஷின்பிங் சீனாவின் அதிபராக வந்தபிறகு, ஹாங்காங்கில் உள்ள சட்டங்கள், சகித்துக்கொள்ள கடினமாக தோன்றியிருக்கலாம். எனவே, அங்குள்ள குடியுரிமைகளை சீனா ஒழித்துக்கட்டியபோது, பெரும்பாலான ஹாங்காங் நாளிதழ்கள் சீன அரசின் பக்கமே நின்றன.

ஆனால் ஆப்பிள் நாளிதழ் சீன அரசுக்கு எதிராக நடைபெற்ற குடை புரட்சி செய்தவர்களை ஆதரித்தது. உரிமையாளரான ஜிம்மி லாய், தானே சீன அரசை எதிர்த்து கட்டுரைகளை எழுதி பிரசுரித்தார். எனவே, அவரை தேசதுரோக சட்டம் 2020 இன்படி சீன அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

கடந்த ஆண்டில் கைதான ஜிம்மி லாய்க்கு தற்போதைய வயது 75. அவர், டெங் ஜியாவோஃபெங் உறுதிமொழி செய்துகொடுத்த ஒரு நாடு இரண்டு சட்ட அமைப்பு முறை என்பதை பத்திரிகையில் எழுதியது தேச துரோகம் அல்ல என உறுதியாக நம்புகிறார். தான் எழுதியவற்றுக்காக அவர் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. அவர் பத்திரிகை மூடப்பட்டபிறகும் கூட தனது நிலைப்பாட்டில் உறுதியாக சிறைக்கம்பிகளுக்கு பின்னே நின்றுகொண்டிருக்கிறார்.

1949 ஆம் ஆண்டு மாவோ சீனாவில் ஆட்சிக்கு வந்தபோது, ஜிம்மி சிறுவனாக இருந்தார்.அ வரது குடும்பம் உழைப்பாளர் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தனது பனிரெண்டு வயதில் ஹாங்காங்கிற்கு கள்ளப்படகு மூலம் தப்பிச் சென்றார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் இருந்தனர். அங்கு சென்றவர், ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை செய்யத் தொடங்கினார். வேலை செய்யும் பணத்தை சிக்கனமாக சேர்த்து வைத்து சில ஆண்டுகளிலேயே தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். பிறகு ஜியோர்டனோ எனும் சில்லறை விற்பனை கடைகளை தொடங்கினார்.

இன்று இவரது கடை ஹாங்காங், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா என பல்வேறு நாடுகளிலும் உள்ளது. வெற்றிகரமாக இயங்கி வருகிறது. ஒருமுறை அமெரிக்காவிற்கு சென்றபோது, அங்கு இருந்த அவரது நண்பர் ஒரு நூலை படிக்க பரிந்துரைத்தார். அவர் வழக்குரைஞராக பணியாற்றி வருபவர். ‘தி ரோட் டு செஃர்ப்டம்’  என்ற நூலின் பிரதியைக் கையில் கொடுத்தார். அந்த நூலை படிக்கத் தொடங்கியபோது அரசியல், பொருளாதாரம், சமூக சுதந்திரம் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று நீக்கமுடியாதபடி கலந்திருப்பதை அறிந்தார். அவற்றின் ஒருங்கிணைப்பு காரணமாகவே மனிதர்களின் திறன் பன்மடங்கு கூடுவதை யோசித்து உணர்ந்தார்.          

ஹாங்காங் நகரில் சுதந்திரம் என்பது எப்போதும் இருந்தது கிடையாது. அது தொடக்கத்தில் பிரிட்டனின் காலனியாக இருந்தது. பிறகு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டபோதும் அங்கு தொழில் செய்வதற்கான சுதந்திரம் இருந்தது. அமைப்புகள் தானியக்கமாக இயங்கின. ஊழல் இல்லாத நீதித்துறை, காவல்துறை உருவாக்கப்பட்டன.

இதன் மூலம் தொழில், வாழ்க்கை என அனைத்து விஷயங்களிலும் பல்வேறு சோதனைகளை செய்துபார்க்க முடிந்தது. இதனால்தான் சீனாவில் இருந்து வந்து ஹாங்காங்கில் குடியேறிய அகதிகள், அங்கு தொழில் செய்து முன்னேற முடிந்தது.

1949ஆம் ஆண்டு வறுமையின் பிடியில் இருந்த நகரம், 2000ஆம் ஆண்டில் தனிநபர் வருமான ஒப்பீட்டில் பிரிட்டனைக் கூட வென்றது. ஜிம்மி நிறைய விஷயங்களைக் கவனிப்பவர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிச சித்தாந்தம் வீழ்த்தப்பட்டதைப் பார்த்தார். அதேசமயம் சீனாவில் தியான்மன் சதுக்கத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் நசுக்கப்பட்டதையும் கண்டார். இதனால் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஊடகவணிகத்தில் இறங்க முடிவு செய்தார்.

‘’ஹாங்காங் எனக்கு கொடுத்த சுதந்திரத்தால்தான் நான் வளர்ந்தேன். உண்மையில் இந்த நகரம் எனக்கு அந்த சுதந்திரத்தை கொடுக்கவில்லையெனில் நான் சல்லிப்பைசா கையில் இல்லாத சீனனாகவே இருந்திருப்பேன்’’ என ஒருமுறை  கூறினார்.

பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர், ஜிம்மி லாய். ஆனாலும் அவர், தனது போராட்டத்தை ஹாங்காங்கில் நடத்த வேண்டும் என உறுதியாக இருந்தார். தான் கைது செய்யப்படுவது இங்கு நடக்கும் போராட்டத்தை உலக கவனத்திற்கு கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என நினைத்தார்.

ஆப்பிள் நாளிதழின் கடைசி இதழில், ‘’ஆப்பிள் கீழே விழுந்தாலும் அதன் விதைகள் பரவி இன்னும் நிறைய மரங்கள் முளைத்து அதில் அழகான ஆப்பிள் பழங்கள் விளையும்’’  என்று எழுதப்பட்டிருந்தது. நாம் அவரது கனவுக்கு இடம் கொடுக்க முடியுமா? குறைந்தபட்சம் அவருக்கு விருதை அளிப்பதன் வழியாக அவரது பெயரை உயிரோடு வைத்திருக்கலாம். ஜிம்மி லாய்க்கு உலக நாளிதழ், செய்தி பதிப்பாளர்கள் சங்கம் தங்கபேனா விருதை வழங்கியிருக்கிறது. சுதந்திரமான சிந்தனைக்காக காடோ இன்ஸ்டிடியூட் மில்டன் ஃப்ரீட்மன் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அவர் அமைதிக்கான நோபல் பரிசையும் வெல்ல வேண்டும்.

ஸ்வாமிநாதன் எஸ் அங்கிலேசரியா அய்யர்(Swaminomics)

டைம்ஸ் ஆஃப் இந்தியா

China vs jimmy lai – why the tycoon deserves a nobel prize

கருத்துகள்