தன்னைச்சுத்தி நடக்குறதை கவனிக்கிறதும், திறந்த மனசோட இருக்கிறதும் பத்திரிகைக்காரனுக்கு முக்கியம்!

 




பாலசுப்பிரமணியன், ஆனந்தவிகடன்

பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்




 பாலசுப்பிரமணியன், முன்னாள் ஆசிரியர், ஆனந்தவிகடன்

சினிமாவில் இருந்து எது உங்களை பத்திரிகை நோக்கி ஈர்த்தது?

எனக்கு சினிமா மேல எப்பவும் ஆர்வம் இருந்தது கிடையாது. சொல்லப்போனா, சினிமால இருந்ததே ஒரு நிர்பந்தம். பத்திரிகைக் கனவுதான் என்னைத் துரத்திக்கிட்டே இருந்தது.

உங்களுக்கு பத்திரிகை ஆர்வம் எப்போது வந்தது?

சின்ன வயசுலேயே. பனிரெண்டு வயசுலேயே கையெழுத்து பத்திரிகை நடத்தியிருக்கேன். சந்திரிகா அப்படின்னுட்டு.

இப்போது வரும் பத்திரிகைகளைப் படிக்கிறீர்களா? இன்றைய தமிழ் இதழியலை எப்படி பார்க்கிறீர்கள்?

ம்ஹூம்.. நான் எதையும் படிக்கிறதில்ல. கண்ணு சுத்தமா தெரியலை. எப்பவாது, எதையாவது வாசிக்கணும்னு தோணினா பேரனைவிட்டு வாசிக்கச் சொல்லிக் கேட்டுக்கிறதோட சரி. வீட்டுல ஹிண்டு மட்டும்தான் வாசிப்பேன். ஆபீஸ்லதான் மத்த பத்திரிகைகள் வாசிக்கிறதெல்லாம். ஆபீஸோட போன பல விஷயங்கள்ல அந்த வாசிப்பும் ஒண்ணு.

 ஒரு பத்திரிகை ஆசிரியராக , மிகவும் முக்கியமான தருணம் என எதைச் சொல்லுவீர்கள்?

நான் ஆனந்தவிகடனில் இருந்த ஐம்பது வருஷங்களுமே எனக்கு முக்கியமான தருணங்கள்தான். ஒவ்வொரு நாளும் அன்னிக்குத்தான் பொறுப்பேத்துக்கிட்ட மாதிரிதான் உள்ளே நுழைவேன். ‘’என் மண்டை காலி. எனக்கு ஒண்ணும் தெரியாது. எல்லாத்தையும் நீங்கதான் சொல்லிக்கொடுக்கணும்’’னு நெனச்சுக்கிட்டுத்தான் நுழைவேன்.

ஒரு பந்தயக்குதிரை போல ஐம்பது வருஷம் ஓடிவிட்டு, அப்புறம் அப்படியே ஒதுங்கியிருப்பது எப்படி சாத்தியமாக இருக்கிறது?

காலையில் நாலு மணிக்கு எந்திரிச்சு, மொத ஆளா ஏழு மணிக்கெல்லாம் ஆபீஸ் போவேன். ராத்திரி பெரும்பாலான நாளில் கடைசி ஆளா ஒன்பதரை மணிக்கு வெளியே வருவேன். வீட்டுக்கு வந்தும் வேலை செய்வேன். அது ஒரு காலம். இப்ப வெளியவே போறதில்ல. இது ஒரு காலம். எது விதிக்கப்பட்டிருக்கோ அதை வாழறோம்.

பத்திரிகையாசிரியர் பொறுப்பில் உட்கார்ந்ததாலேயே எழுதுவதை நிறுத்திவிட்டீர்கள். இடையில் உங்கள் போட்டிப் பத்திரிகையான குமுதத்தில் ஆசிரியர் எஸ்ஏபி தொடர்ந்து எழுதினார். உங்களிடமிருந்து விலகிய கல்கியும் தொடர்ந்து தன்னுடைய பத்திரிகையில் எழுதினார்.இதெல்லாம் உங்கள் முடிவை பாதிக்கவில்லையா?

ம்ஹூம் . நான் ஒரு முடிவை எடுக்கும்போது தீர்மானமா யோசிச்சுத்தான் எடுப்பேன். பின்னாடி, அந்த முடிவை மாத்திக்கிறதுக்கான நியாயங்களும் எதுவும் உருவாகலை.

விகடன் அட்டைப்பட ஜோக்குக்காக அதிமுக அரசு சிறைதண்டனை விதித்தபோது, எம்ஜிஆரிடம் நீங்கள் பேசுவீர்கள் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எது உங்களை எதிர்த்து போராட வைத்தது?

விகடன் புரட்சிப் பத்திரிகை கிடையாது. எல்லோரும் வாசிக்கக்கூடிய ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகைதான் அது. ஆனா, அன்னைக்கு எம்ஜிஆர் அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை என் மீதான தாக்குதலாகவோ, விகடன் மீதான தாக்குதலாகவோ பார்க்கலை. ஒட்டுமொத்த பத்திரிகை சுதந்திரத்து மேலேயும் நடத்தப்பட்ட  தாக்குதல். அதை தனிப்பட்ட வகையில் குறுக்குவழியில் அணுகினா, இந்த பத்திரிகை தொழிலுக்கே நான் வந்திருக்கவேண்டியதில்லை.

ஐம்பது வருஷ இதழியல் காலத்தில் நீங்கள் ரொம்பவும் ரசித்த பத்திரிகை எது, தமிழில்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. ஆங்கிலத்தில் அல்லது வேறு ஏதாவது மொழியில்…

குமுதம். நான் எப்பவும் விரும்பிப் படிக்கிற பத்திரிகை குமுதம்தான். குமுதத்தைப் படிப்பேன். ரசிப்பேன். இவ்ளோலாம் பண்ணியிருக்காங்க. நமக்குத் தோணலையேன்னு வருத்தப்படுவேன். எஸ்ஏபிக்கு போன் பண்ணி வாழ்த்துவேன். எல்லோரையும் சந்தோஷப்படுத்துறதுதான் பெரிய சந்தோஷம்.

வெற்றிகரமான பத்திரிகையாளனுக்கு அடிப்படை பண்பாக இருக்கவேண்டியது என்று எதைச் சொல்வீர்கள்?

தன்னைச் சுத்தி நடக்குற எல்லாத்தையும் கவனிக்கிறதும் எப்பவும் திறந்த மனசோட இருக்கிறதும்.

மூலவடிவம் – சமஸ்

காப்புரிமை – இந்து தமிழ்திசை

2014  டிசம்பர் 21 ஞாயிறு இதழ்


கருத்துகள்